![](pmdr0.gif)
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம்
ஐந்தாம் பகுதி /படலங்கள் 26-32
irAmAyaNam of kampar
canto 6 (yutta kAnTam), part 5
(paTalams 26-32, verses 9070-9757 )
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
providing us with a romanized transliterated version of this work and for permissions
to publish the equivalent Tamil script version, edited to conform to Annamalai University edition.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are :
http://www.projectmadurai.org/
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி 5) /படலங்கள் 26-32
6.26 நிகும்பலை யாகப் படலம் | 9070 – 9252 (183) |
6.27 இந்திரசித்து வதைப் படலம் | 9253 – 9323 (71) |
6.28 இராவணன் சோகப் படலம் | 9324 – 9384 (61) |
6.29 படைக்காட்சிப் படலம் | 9385 – 9436 (52) |
6.30 மூலபல வதைப் படலம் | 9437 – 9672 (236) |
6.31 வேல் ஏற்றப் படலம் | 9673 – 9721 (49) |
6.32 வானரர் களம் காண் படலம் | 9722 – 9757 (36) |
6.26 நிகும்பலை யாகப் படலம் 9070 – 9252 (183)
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி, 'ஐய!
தீர்வது பொருளோ, துன்பம்? நீ உளை; தெய்வம் உண்டு;
மாருதி உளன்; நாம் செய்த தவம் உண்டு; மறையும் உண்டால். 6.26.1
இலக்குவனுடன் சென்று இந்திரசித்தின் வேள்வியைச் சிதைத்தற்கு விடைதரும்படி வீடணன் இராமனை வேண்டுதல்
என்றலும், இறைஞ்சி, 'யாகம் முற்றுமேல், யாரும் வெல்லார்;
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்; இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும் சிதைப்பென் 'என்றான்;
'நன்று, அது புரிதிர் 'என்னா, நாயகன் நவில்வது ஆனான். 6.26.2
இராமன் இலக்குவனைத் தழுவி, இந்திரசித்துடன் செய்யும் போரில் நடந்துகொள்ள வேண்டிய முறையினை அறிவுறுத்தல்
தம்பியைத் தழுவி, 'ஐய! தாமரைத் தவிசின் மேலான்
வெம்படை தொடுக்கும் ஆயின், விலக்குவது அன்றி, வெய்தின்
அம்பு நீ துரப்பாய் அல்லை; அனையது துரந்த காலை,
உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி 'என்றான். 6.26.3
முக்கணான் படையும், ஆழி முதலவன் படையும், முன்நின்று
ஒக்கவே விடுமே; விட்டால், அவற்றையும் அவற்றால் ஓயத்
தக்கவாறு இயற்றி, மற்று உன் சிலைவலித் தருக்கினாலே
புக்கவன் ஆவி கொண்டு, போதுதி புகழின் மிக்கோய்! 6.26.4
'வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து, மாள,
கல்லுதி, தருமம் என்னும் கண் அகன் கருத்தைக் கண்டு;
பல் பெரும் போரும் செய்து வருந்தலை; அற்றம் பார்த்து,
கொல்லுதி, அமரர் தங்கள் கூற்றினைக் கூற்றம் ஒப்பாய்! 6.26.5
'பதைத்து அவன், வெம்மை ஆடி, பல்பெரும் பகழி மாரி
விதைத்தன விதையா நின்று விலக்குதி; மெலிவு மிக்கால்,
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தைக் கழிய ஓட்டி,
வதைத் தொழில் புரிதி சாப நூல்நெறி மறப்பிலாதாய்! 6.26.6
'தொடுப்பதன் முன்னம், வாளி தொடுத்து, அவை துறைகள் தோறும்
தடுப்பன தடுத்தி; எண்ணம் குறிப்பினால் உணர்ந்து, தக்க
கடுப்பினும், அளவு இலாத கதியினும், கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரைவு இலாதாய்! 6.26.7
இலக்குவனுக்கு இராமன் திருமாலின் வில்லும் கவசம் முதலியனவும் அளித்தல்
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி, ஏற்ற
முன்பனை நோக்கி, 'ஐய! மூவகை உலகும் தான் ஆய்,
தன் பெருந் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும்
வன்பெருஞ் சிலை ஈது ஆகும்; வாங்குதி; வலமும் கொள்வாய். 6.26.8
'இச் சிலை இயற்கை மேல் நாள் தமிழ்முனி இயம்பிற்று எல்லாம்
அச்சு எனக் கேட்டாய் அன்றே? ஆயிரம் மௌலி அண்ணல்
மெய்ச் சிலை விரிஞ்சன் தானே வேள்வியில் வேட்டுப் பெற்ற
கைச் சிலை கோடி 'என்று கொடுத்தனன், கவசத் தோடும். 6.26.9
ஆணி, இவ் உலகுக்கு ஆன ஆழியான், புறத்தின் ஆர்த்த
தூணியும் கொடுத்து, மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி,
தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன், தழுவலோடும்,
சேண் உயர் விசும்பில் தேவர், 'தீர்ந்தது எம் சிறுமை, என்றார். 6.26.10
போர்க்கோலங்கொண்ட இலக்குவன் இராமன்பால் விடை பெற்று வானரத்தலைவர்களுடன் நிகும்பலை நோக்கிச் செல்லுதல்
மங்கலம் தேவர் கூற வானவர் மகளிர் வாழ்த்தி,
பங்கம் இல் ஆசி கூறி, பல ஆண்டு இசை பரவப் பாகத்
திங்களின் மௌலி அண்ணல் திரிபுரம் தீக்கச் சீறிப்
பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன் போர்மேல் போவான். 6.26.11
'மாருதி முதல்வர் ஆய வானரத் தலைவரோடும்,
வீர! நீ சேறி, என்று விடை கொடுத்தருளும் வேலை,
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்துமாக,
சீரிய சென்னி சேர்த்து, சென்றனன், தருமச் செல்வன். 6.26.12
பொலங் கொண்டல் அனைய மேனிப் புரவலன், பொருமி, கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று, நெஞ்சு அழிவானை, தம்பி
வலம் கொண்டு, வயிர வல்வில் இடம் கொண்டு, வஞ்சன் மேலே,
சலம் கொண்டு கடிது சென்றான், 'தலைகொண்டு வருவென் 'என்றே. 6.26.13
இலக்குவன் பிரியத் தனித்து நிற்கும் இராமனது நிலை
தான் பிரிகின்றிலாத தம்பி வெங் கடுப்பின் செல்வான்,
ஊன் பிரிகின்றிலாத உயிர் என, மறைதலோடும்,
வான் பெருவேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். 6.26.14
நிகும்பலையை அடைந்த வானரர்கள் அரக்கர் சேனையைக் காணுதல்
சேனாபதியே முதல் சேவகர்தாம்
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்
கான் ஆர் நெறியும் மலையும் கழியப்
போனார்கள் நிகும்பலை புக்கனரால். 6.26.15
உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றது போல் குலவி
விண்தானும் விழுங்க விரிந்ததனைக்
கண்டார் அவ் வரக்கர் கருங்கடலை. 6.26.16
நேமிப் பெயர் யூகம் நிரைத்து நெடுஞ்
சேமத்தது நின்றது தீவினையோன்
ஓமம் அத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாமக்கடல் நின்றது ஓர் பான்மையதை. 6.26.17
கார் ஆயின காய் கரி தேர் பரிமா
தார் ஆயிரகோடி தழீஇயதுதான்
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயதுபோல்
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை. 6.26.18
பொன் தேர் பரிமா கரிமா பொருதார்
எற்றே படைவீரரை எண்ணிலமால்
உற்று ஏவிய யூகம் உலோகமுடன்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை. 6.26.19
வண்ணக் கரு மேனியின் மேல் மழை வாழ்
விண்ணைத் தொடு செம்மயிர் வீசுதலால்
அண்ணல் கரியான் அனல் அம்பு அட வெம்
பண்ணைக்கடல் போல்வது ஓர் பான்மையதை. 6.26.20
ஆரவாரமின்றி வேள்விக் களத்தைக் காத்துநின்ற அரக்கர் சேனையைக் கண்டு வானரர் ஆரவாரித்தல்
வழங்காசிலை நாணொலி வானில் வரும்
பழங் கார்முகம் ஒத்த; பணைக்குலமும்
தழங்கா கடல் வாழ்வனபோல்; தகைசால்
முழங்கா முகில் ஒத்தன மா முரசே. 6.26.21
வலியான் அ(வ்)இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடுங் கடல்தான் எனலாய்
ஒலியாது உறுசேனையை உற்று ஒருநாள்
மெலியாதவர் ஆர்த்தனர் விண்கிழிய. 6.26.22
அரக்கர் சேனையுடன் வானரர் பொருதல்
ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்குலம்;
போர்த்தார் முரசங்கள் புடைத்த புகத்
தூர்த்தார் இவர் கல் படை; சூல் முகிலின்
நீர்த்தாரையின் அம்பு அவர் நீட்டினரால். 6.26.23
மின்னும் படை வீசினர் வெம்படைமேல்
பன்னும் கவிசேனை படிந்து உளதால்
துன்னும் துறைநீர் நிறைவாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனவாய். 6.26.24
வில்லும் மழுவும் எழுவும் மிடலோர்
பல்லும் தலையும் உடலும் படியில்
செல்லும்படி சிந்தின சென்றனவால்
கல்லும் மரமும் கரமும் கதுவ. 6.26.25
வாலும் தலையும் உடலும் வயிறும்
சாலும் கரமும் தரை கண்டனவால்
கோலும் மழுவும் எழுவும் கொழுவும்
வேலும் கணையும் வளையும் விசிற. 6.26.26
வேள்வியைச் சிதைக்காமல் காலம் நீட்டித்தலாகாது என வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்
வென்றிச் சிலை வீரனை வீடணன் 'நீ
நின்று இக்கடை தாழுதல் நீதியதோ?
சென்று இக்கடி வேள்வி சிதைத்திலையேல்
என்று இக்கடல் வெல்லுதும் யாம்? 'எனலும் 6.26.27
இலக்குவன் தேவர் முதலியோர் வியந்து காண அரக்கர் சேனையை யழித்தல்
தேவ அசுரரும் திசை நான்முகனும்
மூவாமுதல் ஈசனும் மூஉலகின்
கோ ஆகிய கொற்றவனும் முதலோர்
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர். 6.26.28
பல்லார்படை நின்றது; பல் அணியாய்
பல்லார்படை நின்றது; பல் பிறைவெண்
பல்லார்படை நின்றது; பல்லியமும்
பல்லார்படை நின்றது பல்படையே. 6.26.29
அக் காலை இலக்குவன் அப் படையுள்
புக்கான் அயில் அம்பு பொழிந்தனனால்;
உக்கார் அவ் வரக்கர் தம் ஊர் ஒழிய
புக்கார் நமனார் உறை தனெ்புலமே. 6.26.30
தேறாமத மால்கரி தேர் பரிமா
நூறாயிர கோடியின் நூழில்பட
சேறு ஆர் குருதிக் கடலில் திடராய்க்
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால். 6.26.31
அழிவுற்ற அரக்கர் சேனைகளின் தோற்றம்
வாமக் கரிதான் அழி வார்குழியின்
தீ மொய்த்த அரக்கர்கள் செம்மயிரின்
தாமத் தலை உக்க தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்ப்ப உலப்பு இலவால். 6.26.32
சிலையின் கணை ஊடு திறந்தன திண்
கொலை வெங்களி மால்கரி செம்புனல் கொண்டு
உலைவு இன்று கிடந்தன ஒத்தனவால்
மலையும் சுனையும் வயிறும் உடலும். 6.26.33
வில் தொத்திய வெங்கணை எண்கின் வியன்
பல் தொத்திய போல் படியப் பலவும்
முற்றச் சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த முடித்தலை பூழியன. 6.26.34
படுமாரி நெடுங் கணை பாய்தலினால்
விடுமாறு உதிரம் புனல் வீழ்வனவால்
தடுமாறு நெடுங் கொடி தாழ்கடல்வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால். 6.26.35
மின் ஆர்கணை தாள் அற வீச விழுந்து
அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால்
செந் நாகம் விழுங்கிய திங்களினை. 6.26.36
கொடு நீள் கரி கையொடு தாள்குறைய
படுநீள் குருதிப் படர்கின்றனவால்
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்
நெடு நீரின் இடங்கர் நிகர்த்தனவால். 6.26.37
கரி உண்ட களத்திடை உற்றன கார்
நரி உண்டி உகப்பன நட்டனவால்;
இரி உண்டவர் இன் இயம் இட்டிடலால்
மரி உண்ட உடல் பொறை மானினவால். 6.26.38
வாயில் கனல் வெங்கடு வாளி இனம்
பாய பருமம் குலம் வேவனவால்
வேய் உற்ற நெடுங்கிரி மீவெயில் ஆம்
தீ உற்றன ஒத்த சினக் கரியே. 6.26.39
அலைவேலை அரக்கரை எண்கு அணுகி
தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால்
மலைமேல் உயர் புற்றினை வள் உகிரால்
நிலைபேர மறிப்ப நிகர்த்தனவால். 6.26.40
மா வாளிகள் மா மழைபோல் வரலால்
மா ஆளிகள் போர் தறெு மா மறவோர்
மா ஆளிகள் வன் தலையின்தலை வாழ்
மா ஆளிகேளாடு மறிந்தனரால். 6.26.41
அங்கம் கிழியத் துணிபட்டதனால்
அங்கு அங்கு இழிகுற்ற அமர்த் தலைவர்
அங்கம் கழி செம்புனல் பம்ப அலைந்து
அங்கங்கள் நிரம்பி அலம்பியதால். 6.26.42
வன்தானையை வார்கணை மாரியினால்
முன் தாதை ஒர் தேர்கொடு மொய் பலதேர்
பின்றா எதிர் தானவர் பேர் அணியைக்
கொன்றான் என எய்து குறைத்தனனால். 6.26.43
இலக்குவனது போரினால் இந்திரசித்தின் யாகம் சிதைதல்
மலைகளும் மழைகளும் வான மீன்களும்
அலைய வெங்கால் பொர அழிந்தவாம் என
உலைகொள் வெங்கனல் பொதி ஓமம் உற்றவால்
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ. 6.26.44
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர்
தார் அணி முடிப்பெருந் தலைகள் தாக்கலால்
ஆரண மந்திரம் அமைய ஓதிய
பூரண மணிக் குடம் உடைந்து போயதால். 6.26.45
தாறுகொள் மதகரி சுமந்து தாமரை
சீறிய முகத் தலை உருட்டி செந்நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
ஆறுகள் எழும் கனல் அவியச் சென்றவால். 6.26.46
தெரிகணை விசும்பிடைத் துணித்த செம்மயிர்
வரிகழல் அரக்கர்தம் தடக்கை வாெளாடும்
உரும் என விழுதலின் அனலிக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால். 6.26.47
அம்கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று
அம்கடம் கழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர்குருதி ஆழியின்
அங்கு அடங்கினர் தொடர்பகழி அஞ்சினார். 6.26.48
கால் தலத்தொடு துணிந்து அழிய காய்கதிர்க்
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார்
வேல் தலத்து ஊன்றினார் துளங்கு மெய்யினார்
நாறு அலைக் குடரினர் பலரும் நண்ணினார். 6.26.49
பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார்
தொங்கு உடல் தோள்மிசை இருந்து சோர்வுற
அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார்
தம் குடர் முதுகு இடைச் சொரியத் தள்ளுவார். 6.26.50
மூடிய நெய்யொடு நறவு முற்றிய
சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற
கோடிகள் பலபடு குழாம் குழாங்களாய்
ஆடின அறுகுறை அறுக்கும் ஆக்கைகள். 6.26.51
இலக்குவன் அரக்கர் சேனையை விரைந்து அழித்தல்
கால் என கடு என கலிங்கக் கம்மியர்
நூல் என உடற் பொறை தொடர்ந்த நோய் என
பால் உறு பிரை என கலந்து பல்முறை
வேல் உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான். 6.26.52
தன் சேனைகள் நிலைகுலைந் தழிதலை இந்திரசித்து காணுதல்
கண்டனன் திசைதொறும் நோக்கி கண் அகல்
மண்தலம் மறிகடல் அன்ன மாப் படை
விண்டு எறி கால்பொர மறிந்து வீற்று உறும்
தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையே. 6.26.53
மிடலின் வெங் கடகரிப் பிணத்தின் விண்தொடும்
திடலும் வெம் புரவியும் தேரும் சிந்திய
உடலும் வன் தலைகளும் உதிர்ந்து ஓங்கு அலைக்
கடலும் அல்லால் இடை ஒன்றும் கண்டிலன். 6.26.54
நூறு நூறாயிர கோடி நோன் கழல்
மாறுபோர் அரக்கரை ஒருவன் வாள்கணை
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின்
ஆறுமே அன்றி வேறு அரக்கன் கண்டிலன். 6.26.55
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து
அஞ்சினர் சிலர்சிலர் அடைகின்றார்; சிலர்
வெஞ்சின வீரர்கள் மீண்டிலாதவர்
துஞ்சினர் துணை இலர் எனத் துளங்கினார். 6.26.56
இந்திரசித்து தான் தொடங்கிய வேள்வியில் ஓமகுண்டத்துத் தீ அவிந்தமை கண்டு மனம் வெதும்புதல்
ஓம வெங் கனல் அவிந்து உழைக் கலப்பையும்
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற
வாம மந்திரத் தொழில் மறந்து நந்துறு
தூம வெங்கனல் எனப் பொலிந்து தோன்றினான். 6.26.57
இந்திரசித்தினைக் காவலாகச் சூழ்ந்து நின்ற அரக்கர் சேனையினை வானரசேனை எதிர்த்து அடைதல்
அக்கணத்து அடுகளத்து அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர உயிர் உேளார் எலாம்
தொக்கனர் அரக்கனைச் சூழ்ந்து சுற்றுற
புக்கது கவிப்பெருஞ் சேனைப் போர்க்கடல். 6.26.58
இந்திரசித்து தன் சேனைகள் அழிந்தமையினையும் அதுகண்டு முனிவர் முதலியோர் கைகுலைப்பதனையும் கண்டு தனது நியமம் குலைந்து வருந்துதல்
ஆயிரம் மலர் உடை ஆழி மாப் படை
'ஏ 'எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்
தூயவன் சிலைவலித் தொழிலும் துன்பமும்
மேயின வெகுளியும் கிளர வெம்பினான். 6.26.59
மெய் குலைந்து இருநில மடந்தை விம்முற
செய் கொலைத் தொழிலையும் செய்கை தீயவர்
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டனர்
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான். 6.26.60
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண்
சேனையும் பாழ்பட சிந்தை மந்திரத்து
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான். 6.26.61
'வெள்ளம் ஐ ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர் ஐந்தொடு ஓயுமால்;
எள்ள அரு வேள்வி நின்று இனி இயற்றுதல்
பிள்ளைமை; அனையது சிதைந்து பேர்ந்ததால். 6.26.62
'தொடங்கிய வேள்வியின் தூம வெம் கனல்
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே?
இடம்கொடு வெம்செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால். 6.26.63
'அங்கு அது கிடக்க; நான் மனிதர்க்கு ஆற்றலென்
'சிங்கினன் என்பது ஓர் எளிமை; தேய்வுற
இங்கு நின்று இவை இவை நினைக்கிலேன்; இனி
பொங்குபோர் ஆற்ற என் தோளும் போனவோ? 6.26.64
"'மந்திர வேள்விபோய் மடிந்ததாம் " எனச்
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல்
அந்தரத்து அமரர்தாம் "மனிதற்கு ஆற்றலன்
இந்திரற்கே இவன் வலி " என்று ஏசவோ? 6.26.65
அப்பொழுது அரக்கர்சேனை வானர சேனையினால் நிலைகுலைதல்
என்று அவன் பகர்கின்ற எல்லையின் இருங்
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும்
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின;
சென்றன பெரும்படை இரிந்து சிந்தின. 6.26.66
ஒதுங்கினர் ஒருவர்கீழ் ஒருவர் புக்குறப்
பதுங்கினர் நடுங்கினர்; பகழி பாய்தலின்
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர்.
மதம் புலர் களிறு எனச் சீற்றம் மாறினார். 6.26.67
வீரன் வெம் கணையொடும் கவிகள் வீசிய
கார்வரை அரக்கர் வெம் கடலின் வீழ்ந்தன
போர்நெடுங் கால்பொர பொழியும் மாமழைத்
தாரையும் மேகமும் படிந்த தன்மைய. 6.26.68
இந்திரசித்துக்குச் சினம் மிகும்படி அனுமன் அவனை யடைந்து எள்ளி நகையாடுதல்
திரைக் கடல் பெரும்படை இரிந்து சிந்திட
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன்
வரக் கதம் சிறப்பன மாற்றம் கூறுவான். 6.26.69
'நான் உனை இரந்துகூறும் நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகி தன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த
மானம்மேல் சேனையோடும் வடதிசை நோக்கிமீது
போனதோ? கோடிகோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்! 6.26.70
'தடம் திரைப் பரவை அன்ன சக்கர யூகம் புக்குக்
கிடந்தது கண்டது உண்டோ? நாண் ஒலி கேட்டிலோமே,
தொடர்ந்து போய் அயோத்தி தன்னைக் கிளையோடும் துணிய நூறி
நடந்தது எப்பொழுது? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே? 6.26.71
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இவரத் தாங்கும்
பாந்தளின் பெரிய திண்தோள் பரதனை பழியின் தீர்ந்த
வேந்தனை, கண்டு நீர் நும் வில்வலி காட்டி மீண்டு,
போந்தது, எவ் அளவை நன்றே, போனமை பொருந்திற்று அன்றே. 6.26.72
'அம்பரத்து அமைந்த வல்வில் சம்பரன் ஆவி வாங்கி
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயஞ் செய்த
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கு நால்வர் ஆன
தம்பியைக் கண்டு, நின்தன் தனு வலம் காட்டிற்று உண்டோ? 6.26.73
'தீ ஒத்த வயிர வாளி உடல் உற, சிவந்த சோரி
காயத்தும், செவியின் ஊடும், வாயினும், கண்கள் ஊடும்
பாய, போய், இலங்கை புக்கு, வஞ்சனை பரப்பச் செய்யும்
மாயப் போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மடியும் அன்றே! 6.26.74
'பாசமோ, மலரின் மேலோன் பெரும் படைக் கலமோ, பண்டை
ஈசனார் படையோ, மாயோன் நேமியோ, யாதோ, இன்னும்
வீச நீர் விரும்புகின்றீர்? அதற்கு நாம் வெருவி, சாலக்
கூசினோம்; போதும் போதும்; கூற்றினார் குறுக வந்தார். 6.26.75
'வரங்கள் நீர் உடையவாறும், மாயங்கள் வல்லவாறும்,
பரம் கொள் வானவரின் தெய்வப் படைக்கலம் படைத்தவாறும்
உரங்கேளாடு உன்னி அன்றோ, உம்மை நாம் உயிரினோடும்
சிரம் கொளத் துணிந்தது? அன்னது உண்டு; அது திறம்பினோமோ? 6.26.76
'விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும், விரிஞ்சன் தானும்,
படம் துடிக்கின்ற நாகப் பாற்கடல் பள்ளியானும்,
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும், சாதல் திண்ணம்;
இடம் துடிக்கின்றது உண்டே? இருத்திரோ? இயம்புவீரே! 6.26.77
"கொல்வென் " என்று, உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட
வில்லி, வந்து அருகு சார்ந்து, உன் சேனையை முழுதும் வீட்டி,
"வல்லையேல் வா வா " என்று விளிக்கின்றான்; வரிவில் நாணின்
ஒல் ஒலி, ஐய! செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ? 6.26.78
'மூவகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல்
தேவர்கள், முனிவர், மற்றும் திறத்திறத்து உலகம் சேர்ந்தார்,
யாவரும் காண நின்றார்; இனி இறை தாழ்ப்பது என்னோ?
சாவது சரதம் அன்றோ? ' என்றனன், தருமம் காப்பான். 6.26.79
இந்திரசித்து வெகுண்டு அனுமன் முதலியோரை இகழ்ந்துரைத்தல்
அன்ன வாசகங்கள் கேளா, அனல் உயிர்த்து, அலங்கல் பொன் தோள்
மின் உக, பகு வாய் ஊடு வெயில் உக, நகைபோய் வீங்க,
'முன்னரே வந்து இம் மாற்றம் மொழிகின்றீர் 'மொழிந்த மாற்றம்
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான். 6.26.80
மூண்ட போர்தோறும் பட்டு முடிந்தநீர், முறையின் தீர்ந்து
மீண்டபோது அதனை எல்லாம் மறத்திரோ? விளிதல் வேண்டி
'ஈண்டவா 'என்னா நின்றீர்; இத்தனை பேரும் பட்டு
மாண்டபோது, உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான? 6.26.81
'இலக்குவன் ஆக, மற்றை இராமனே ஆக, ஈண்டு
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக; குரங்கின் வெள்ளம்
குலக்குலம் ஆக மாளும் கொற்றமும், மனிதர் கொள்ளும்
அலக்கணும், முனிவர் தம்மோடு அமரரும் காண்பர் அன்றே. 6.26.82
'யானுடை வில்லும், என் பொன் தோள்களும், இருக்க இன்னும்
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ 'ஒளிப்பு இலாமல்?
கூனுடைக் குரங்கினோடு மனிதரைக் கொன்று, சென்று அவ்
வானினும் தொடர்ந்து கொல்வென்; மருந்தினும் உய்ய மாட்டீர். 6.26.83
'வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது; "வென்றோம் " என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர்! கிளத்தல் வேண்டா;
தாழ்க்கின்றது இல்லை; உம்மைத் தனித்தனி தலைகள் பாறச்
சூழ்க்கின்ற வீரம் என்கைச் சரங்களாய்த் தோன்றும் அன்றே. 6.26.84
'மற்று எலாம் நும்மைப் போல வாயினால் சொல்ல மாட்டேன்;
வெற்றிதான் இரண்டு தந்தீர்; விரைவது வெல்லக் கொல்லாம்?
உற்று நான் உருத்த காலத்து ஒருமுறை எதிரே நிற்கக்
கற்றிரோ? இன்னம் மாண்டு கிடத்திரோ? கடத்திரோதான்? 6.26.85
இந்திரசித்து, போர் செய்தற்கு ஆயத்தனாகித் தேரேறி வில்நாண் எறிந்து போர்ச்சங்கினை ஊதுதல்
'நின்மின்கள்; நின்மின்! 'என்னா, நெருப்பு எழ விழித்து, நீண்ட
மின்மின்கொள் கவசம் இட்டான்; வீக்கினான், தூணி; வீரப்
பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான்; பொறுத்தான், போர்வில்;
எல் மின்கொள் வயிரத் திண்தேர் ஏறினான்; எறிந்தான் நாணி; 6.26.86
ஊதினான் சங்கம்; வானத்து ஒண்தொடி மகளிர் ஒண்கண்
மோதினார்; 'கணத்தின் முன்னே முழுவதும் முருங்க முற்றக்
காதினான் 'என்ன, வானோர் கலங்கினார்; கயிலை யானும்,
போதினான்தானும், 'இன்று புகுந்தது பெரும்போர் 'என்றார 6.26.87
பின் விளைவு எண்ணித் தேவர்கள் வாட்டமுறுதல்
'இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே
பிழைத்தது; பிழைத்ததேனும், வானரம் பிழைக்கல் ஆற்றா;
அழைத்தது விதியேகொல் என்று அஞ்சினார்; அம்பினாலே
உழைத்தது காண்கின்றோம் 'என்று, உணங்கினார், உம்பர் உள்ளார். 6.26.88
குரங்குகள், இந்திரசித்தின் நாணொலி கேட்டு நிலை குலைந்தோடுதலும் அனுமன் மலையினைப் பறித்து எதிர்த்தலும்
நாண்தொழில் ஓசை வீசிச் செவிதொறும் நடத்தலோடும்,
ஆண் தொழில் மறந்து, கையின் அடுக்கிய மரனும் கல்லும்
மீண்டன மறிந்து, சோர விழுந்தன; விழுந்த, 'மெய்யே
மாண்டனம் 'என்றே உன்னி, இரிந்தன, குரங்கின் மாலை. 6.26.89
படைப் பெருந்தலைவர் நின்றார்; அல்லவர், இறுதி பற்றும்
அடைப்ப அருங்காலக் காற்றால் ஆற்றலது ஆகிக் கீறிப்
புடை, திரிந்து ஓடும் வேலைப் புனல் என, இரியலுற்றார்;
கிடைத்த போர் அனுமன் ஆண்டு, ஓர் நெடுங்கிரி கிழித்துக் கொண்டான். 6.26.90
இந்திரசித்து வீரவுரை பகர்ந்து அனுமனுடன் பொருதல்
'நில், அடா! நில்லு நில்லு! நீ, அடா! வாசி பேசிக்
கல் எடாநின்றது, என்னைப் போர்க்களத்து, அமரர் காண,
கொல்லலாம் என்றோ? நன்று; குரங்கு என்றால் கூடும் அன்றே?
நல்லை; போர், வாவா 'என்றான் நமனுக்கு நமனாய் நின்றான். 6.26.91
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே,
கல் எடுத்து, எறிய வந்த அனுமனைக் கண்ணின் நோக்கி,
'மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்கொலோ வலியது? 'என்னா
சொல் எடுத்து, அமரர் சொன்னார்; தாதையும் துணுக்கம் உற்றான். 6.26.92
வீசினன் வயிரக் குன்றம், வெம் பொறிக் குலங்கள் விண்ணின்
ஆசையின் நிமிர்ந்து செல்ல, 'ஆயிரம் உரும் ஒன்றாகப்
பூசின பிழம்பு இது 'என்ன, வரும் அதன் புரிவை நோக்கி,
கூசின, உலகம் எல்லாம்; குலைந்தது அவ் அரக்கர் கூட்டம். 6.26.93
குண்டலம் நெடுவில் வீச, மேருவின் குவிந்த தோளான்,
அண்டமும் குலுங்க ஆர்த்து, மாருதி, அசனி அஞ்ச,
விண் தலத்து எறிந்த குன்றம் வெறுந் துகள் ஆகி வீழக்
கண்டனன்; எய்த தன்மை கண்டிலர், இமைப்பு இல் கண்ணார். 6.26.94
இந்திரசித்து ஏவிய அம்புகளால் அனுமன் அயர்தல்
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில், தோளில்,
கால்தரு காலில், கையில், கழுத்தினில், நுதலில், கண்ணில்,
ஏறின என்ப மன்னோ எரிமுகக் கடவுள் வெம்மை
சீறின பகழிமாரி, தீக்கடு விடத்தின் தோய்ந்த. 6.26.95
வெதிர் ஒத்த சிகரக் குன்றின் மருங்கு உற விளங்கலாலும்,
எதிர் ஒத்த இருளைக் கீறி எழுகின்ற இயற்கையாலும்,
கதிர் ஒத்த பகழிக் கற்றை கதிர் ஒளி காட்டலாலும்,
உதிரத்தின் செம்மை யாலும், உதிக்கின்ற கதிரோன் ஒத்தான். 6.26.96
எதிர்த்துப் போர் செய்ய வந்த அங்கதன் முதலியோரை நோக்கிய இந்திரசித்து, இலக்குவன் எங்குள்ளான் என வினவுதல்
ஆயவன் அயர்தலோடும், அங்கதன் முதல்வர் ஆனோர்,
காய்சினம் திருகி, வந்து கலந்துளார் தம்மைக் காணா,
'நீயிர்கள் நின்மின் நின்மின், இருமுறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான்? ' என்றனன், பொருள் செயாதான். 6.26.97
வெம்பினர் பின்னும் மேன்மேற் சேறலும் வெகுண்டு, 'சீயம்
தும்பியைத் தொடர்வது அல்லால், குரங்கினைத் தொடர்வது உண்டோ?
அம்பினை மாட்டி, என்னே? சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியைக் காட்டித் தாரீர்; சாதிரோ, சலத்தின்? 'என்றான். 6.26.98
'அனுமனைக் கண்டிலீரோ? அவனினும் வலியிரோ? என்
தனு உளதன்றோ? தோளின் அவ் வலி தவிர்ந்தது உண்டோ!
இனம் முனை தீர்கிலீரோ? எவ் வலி ஈட்டி வந்தீர்?
மனிதனைக் காட்டி, நும்தம் மலைதொறும் வழிக் கொளீரே. ' 6.26.99
இலக்குவன் மேற்சென்ற இந்திரசித்தினை எதிர்த்து வானரர் வலியழிதல்
என்று உரைத்து இளவல் தன்மேல் எழுகின்ற இயற்கை நோக்கி,
குன்றமும் மரமும் வீசிக் குறுகினார்; குழாங்கள் தோறும்
சென்றன பகழி மாரி, மேருவை உருவித் தீர்வ,
ஒன்று அல, கோடி கோடி நுழைந்தன; வலியும் ஓய்ந்தார். 6.26.100
வீடணன், விரைந்தழெுக என்றவாறு இலக்குவன் இந்திரசித்தின்மேல் போருக்கு முந்துதல்
'படுகின்றது அன்றோ, மற்று உன் பெரும் படை? பகழி மாரி
விடுகின்றது அன்றோ, வென்றி அரக்கனாம் காள மேகம்?
இடுகின்ற வேள்வி மாண்டது; இனி, அவன் பிழைப்பு உறாமே
முடுகு 'என்றான், அரக்கன் தம்பி; நம்பியும் சென்று மூண்டான். 6.26.101
வந்தான் நெடுந்தகை மாருதி, மயங்கா முகம் மலர்ந்தான்,
'எந்தாய்! கடிது ஏறாய், எனது இருதோள்மிசை 'என்றான்;
'அந்தாக 'என்று உவந்து, ஐயனும் அமைவு ஆயினன் 'இமையோர்
சிந்தாகுலம் துறந்தார்; அவன் நெடுஞ் சாரிகை திரிந்தான். 6.26.102
இந்திரசித்தும் இலக்குவனும் பெரும்போர் புரிதல்
'கார் ஆயிரம் உடன் ஆகிய ' எனல் ஆகிய கரியோன்,
ஓர் ஆயிரம் பரிபூண்டது ஓர் உயர் தேர்மிசை உயர்ந்தான்;
நேர் ஆயினர் இருவோர்களும்; நெடுமாருதி, நிமிரும்
போர் ஆயிரம் உடையான் என, திசை எங்கணும் பெயர்ந்தான். 6.26.103
தீ ஒப்பன, உரும் ஒப்பன, உயிர் வேட்டன திரியும்
பேய் ஒப்பன, பசி ஒப்பன, பிணி ஒப்பன, பிழையா
மாயக் கொடுவினை ஒப்பன; மனம் ஒப்பன, கழுகின்
தாய் ஒப்பன, சில வெங்கணை துரந்தான் துயில் துறந்தான். 6.26.104
அவ் அம்பினை அவ் அம்பினின் அறுத்தான், இகல் அரக்கன்;
'எவ் அம்பு இனி உலகத்து உள? ' என்னும்படி எய்தான்
வெவ் அம்பரம், வையம், திசை, மலை, வேலைகள், பிறவும்,
வவ்வும் கடையுக மாமழை பொழிகின்றது மான. 6.26.105
ஆயோன், நெடுங் குருவிக் குலம் எனலாம் சில அம்பால்
போய் ஓவிடத் துரந்தான்; அவை 'பொறியோ 'என, மறிய,
தூயோனும், அத்துணை வாளிகள் தொடுத்தான், அவை தடுத்தான்;
தீயோனும், அக்கணத்து, ஆயிரம் நெடுஞ் சாரிகை திரிந்தான். 6.26.106
கல்லும், நெடுமலையும், பலமரனும், கடைகாணும்
புல்லும் சிறு பொடியும் இடை தெரியாவகை, புரியச்
செல்லும் நெறிதொறும் சென்றன தறெு கால்புரை மறவோன்
சில்லின் முதிர்தேரும், சின வயமாருதி தாளும். 6.26.107
இருவீரரும், 'இவன் இன்னவன், இவன் இன்னவன் 'என்னச்
செருவீரரும் அறியாவகை திரிந்தார், கணை சொரிந்தார்;
'ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் ' என, வானவர் உவந்தார்;
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதால் எனப் பொருதார். 6.26.108
'விண் செல்கில, செல்கின்றன விசிகம் 'என, இமையோர்
கண் செல்கில; மனம் செல்கில : கணிதம் உறும் எனின், ஓர்
எண் செல்கில; நெடுங்கால வன் இடை செல்கிலன், உடல்மேல்
புண்செய்வன அல்லால், ஒரு பொருள் செல்வன தெரியா. 6.26.109
எரிந்து ஏறின, திசை யாவையும்; இடி ஆம் எனப் பொடியாய்
நெரிந்து ஏறின, நெடுநாண் ஒலி; படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின சுடுவெங்கணை; தொடுந் தாரகை முழுதும்
கரிந்து ஏறின, உலகு யாவையும், கனல் வெம்புகை கதுவ. 6.26.110
வெடிக்கின்றன, திசை யாவையும், விழுகின்றன, இடிவந்து
இடிக்கின்றன, சிலைநாண் ஒலி; இருவாய்களும் எதிராக்
கடிக்கின்றன, கனல் வெம் கணை, கலி வான் உற விசைமேல்
பொடிக்கின்றன, பொறி வெம் கனல்; இவை கண்டனர் புலவோர். 6.26.111
கடல் வற்றின; மலை உக்கன; பருதிக் கனல் கதுவுற்று
உடல் வற்றின; மரம், உற்றன கனல் பட்டன; உதிரம்
சுடர் வற்றின; சுறு மிக்கது; துணிபட்டு உதிர்கணையின்,
திடர் பட்டது, பரவை குழி; திரிவுற்றது புவனம். 6.26.112
எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல் போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றனர், கொலையால். 6.26.113
புரிந்து ஓடின; பொரிந்து ஒடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின கருங் கோளரிக்கு இளையான் விடு சரமே. 6.26.114
நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடைமேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன; செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம். 6.26.115
ஏமத் தடங் கவசத்து இகல் அகலத்தன; இருவோர்
வாமப் பெருந்தோள் மேலன; வதனத்தன; வயிரத்
தாமத்துணைக் குறங்கோடு இரு சரணத்தன, தம் தம்
காமக் குல மட மங்கையர் கடைக்கண் என, கணைகள். 6.26.116
'எந்நாளினின், எத்தேவர்கள், எத் தானவர், எவரே,
அன்னார் செரு விளைத்தார்? ' என, இமையோர் எடுத்து ஆர்த்தார்;
பொன் ஆர் சிலை இரு கால்களும், ஒருகால் பொறை உயிரா,
முன்நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால் என வளைத்தார். 6.26.117
வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம்
போகின்றன, சுடர் வெந்தன; இமையோர்களும் புலர்ந்தார்;
'ஆகின்றது ஒர் அழிகாலம் இது ஆம், அன்று 'என அயிர்த்தார்;
நோகின்றன திசை யானைகள், செவி நாண் ஒலி நுழைய. 6.26.118
மீன் உக்கது, நெடு வானகம்; வெயில் உக்கது, சுடரும்;
மான் உக்கது, முழு வெண்மதி மழை உக்கது, வானம்;
தான் உக்கது, குல மால் வரை; தரை உக்கது; தகைசால்
ஊன் உக்கது, எவ் உலகத்தினும் உள ஆயினம் உயிரும். 6.26.119
அக்காலையின் அயில்வெங்கணை ஐ ஐந்து புக்கு அழுந்த,
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறித்தான்;
கைக் கார்முகம் வளையச் சில கனல் வெங்கணை, கவசம்
புக்கு, ஆகமும் கழன்று ஓடிட, இளங் கோளரி பொழிந்தான். 6.26.120
தெரிந்தான் சில சுடர் வெங்கணை, தேவேந்திரன் சினமா
இரிந்து ஓடிடத் துரந்து ஓடின, இமையோரையும் முன்நாள்
அரிந்து ஓடின, எரிந்து ஓடின, அவை கோத்து, அடல் அரக்கன்
சொரிந்தான், உயர் நெடு மாருதி தோள்மேலினில் தோன்ற. 6.26.121
குருதிப் புனல் சொரிய, குணம் குணிப்பு இல்லவன், குணபால்
பருதி படி பொலிவுற்றதை இளங் கோளரி பார்த்தான்;
ஒரு திக்கிலும் பெயராவகை, அவன் தேரினை உதிர்த்தான்;
'பொருது இக்கணம் வென்றான் 'என, சரமாரிகள் பொழிந்தான். 6.26.122
அத்தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார்;
முத்தேவரும் உவந்தார்; அவன், உரும் ஏறு என முனிந்தான்,
தத்தா; ஒரு தடந்தேரினைத் தொடர்ந்தான், சரம் தலைமேல்
பத்து ஏவினன்; அவை பாய்தலின், இளம் கோளரி பதைத்தான். 6.26.123
பதைத்தான், உடல் நிலைத்தான், சில பகுவாய் அயில் பகழி
விதைத்தான்; அவன் விலக்காதமுன், விடைமேல் வரு விமலன்,
மதத்தால் எதிர்வரு காலனை ஒரு காலுற மருமத்து
உதைத்தால் என, தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான். 6.26.124
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக்கணை கழிய,
அவசத் தொழில் அடைந்தான்; அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்;
திவசத்து எழு கதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே, அவன் மணித் தோளையும் தொளைத்தான் 6.26.125
உள் ஆடிய உதிரம் புனல் கொழுந் தீ என ஒழுக,
தள்ளாடிய வடமேருவின் சலித்தான்; உடல் தரித்தான்;
தொள்ளாயிரம் கடும் போர்க் கணை துரந்தான்; அவை, சுடர் போய்
விள்ளா நெடுங் கவசத்து இடை நுழையாது உக, வெகுண்டான். 6.26.126
மறித்து ஆயிரம் வடிவெங்கணை, மருமத்தினை மதியாக்
குறித்து, ஆயிரம் பரித்தேரவன் விடுத்தான்; அவை குறி பார்த்து
இறுத்தான், நெடுஞ் சரத்தால், ஒரு தனி நாயகற்கு இளையோன்;
செறித்தான் உடல் சில பொன் கணை, சிலை நாண் அறத் தெரித்தான். 6.26.127
'வில் இங்கு இது நெடுமால் சிவன் எனும் மேலவர் தனுவே
கொல்? 'என்று கொண்டு அயிர்த்தான்; நெடுங் கவசத்தையும் குலையாச்
செல்லுங் கடுங்கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்;
வெல்லும்தரம் இல்லாமையும் அறிந்தான், அகம் மெலிந்தான். 6.26.128
இந்திரசித்து மெலிவுற்றமையை யறிந்த வீடணன் இலக்குவனுக்கு அதனைத் தெரிவித்தல்
அத்தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும், அணுகா,
முத்தன் முகம் நோக்கா, 'ஒரு மொழி கேள் 'என மொழிவான்,
'எத்தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் கண்டாய்!
பித்தன் மகன் தளர்ந்தான்; இனிப் பிழையான் 'எனப் பகர்ந்தான். 6.26.129
இந்திரசித்து ஏவிய படைக்கலங்களை ஏற்ற கணைகளால் இலக்குவன் விலக்குதல்
கூற்றின்படி கொதிக்கின்ற அக் கொலை வாள் எயிற்று அரக்கன்,
ஏற்றும் சிலை நெடுநாண் ஒலி உலகு ஏழினும் எய்த,
சீற்றம் தலைத்தலை சென்று உற, 'இது தீர் 'எனத் தெரியா,
காற்றின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு காத்தான். 6.26.130
அனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு தடுத்தான்;
புனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு பொறுத்தான்;
கனல் வெங் கதிரவன் வெம்படை துரந்தான், மனம் கரியான்;
சினவெந் திறல் இளங் கோளரி அதுவே கொடு தீர்த்தான். 6.26.131
இந்திரசித்து அயன் படை தொடுத்தானாக இலக்குவன் அப்படையினையே தொடுத்து அதனை அழித்தல்
'இது காத்திகொல்? 'என்னா, எடுத்து, இசிகப்படை எய்தான்;
அது காப்பதற்கு அதுவே உளது என்னா, தொடுத்து அமைந்தான்;
செதுகாப் படை தொடுப்பேன் என நினைந்தான், திசை முகத்தோன்
முதுமாப்படை துரந்தான், 'இனி முடிந்தாய் 'என மொழிந்தான். 6.26.132
வானின்தலை நின்றார்களும் மழுவாளியும், மலரோன்
தானும், முனிவரரும், பிற தவத்தோர்களும், அறத்தோர்
கோனும், பிறபிற தேவர்கள் குழுவும், மனம் குலைந்தார்;
'ஊனம், இனி இலது ஆகுக இளங்கோக்கு 'என உரைத்தார். 6.26.133
ஊழிக்கடை இறுதி தலை, உலகு யாவையும் உண்ணும்
ஆழிப் பெருங்கனல் தன் ஒரு சுடர் என்னவும் ஆகாப்
பாழிச் சிகை பரப்பித் தனி படர்கின்றது பார்த்தான்
ஆழித் தனிமுதல் நாயகற்கு இளையான் அது மதித்தான். 6.26.134
'மாட்டான் இவன், மலரோன்படை முதற்போது தன் வலத்தால்
மீட்டான் அலன்; தடுத்தான் அலன்; முடிந்தான் 'என, விட்டான்;
'காட்டாது இனிக் கரந்தால், அது கருமம் அலது 'என்னா,
'தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் 'எனச் சமைந்தான். 6.26.135
'நன்று ஆகுக உலகுக்கு 'என முதலோன்மொழி நவின்றான்;
'பின்றாதவன் உயிர்மேற் செலவு ஒழிக 'என்பது பிடித்தான்;
'ஒன்றாக இம் முதலோன்படை தனை மாய்க்க 'என்று உரைத்தான்;
நின்றான், அது துரந்தான்; அவன் நலம் வானவர் நினைத்தார் 6.26.136
'தான் விட்டது மலரோன் படை எனின், மற்று இடை தருமே?
வான் விட்டதும், மண் விட்டதும், மறவோன் உடல் அறுமே,
'தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் 'எனத் தெரிந்தான்;
'ஊன் விட்டவன் மறம் விட்டிலன் ' என, வானவர் உவந்தார். 6.26.137
உருமேறு வந்து எதிர்ந்தால், அதன் எதிரே நெருப்பு உய்த்தால்,
வரும் ஆங்கது தவிர்ந்தால் என, மறவோன் படை மாய,
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அருமாகனல் எனநின்றது, விசும்பு எங்கணும் ஆகி. 6.26.138
படை அங்கு அது படரா வகை, பகலோன் குல மருமான்,
இடை ஒன்று அது தடுக்கும்படி செந்தீஉக எய்தான்,
தொடை ஒன்றினை, கணைமீமிசைத் துறுவாய் இனி 'என்றான்;
விடம் ஒன்றுகொடு ஒன்று ஈர்ந்தது போல் தீர்ந்தது, வேகம். 6.26.139
தேவர்களது மகிழ்ச்சியும் சிவபெருமான் இராம இலக்குவரது பிறப்பின் உண்மையினை விளக்குதலும்
விண்ணோர் அது கண்டார், 'வய வீரர்க்கு இனி மேன்மேல்
ஒண்ணாதன உளவோ? 'என மனம் தேறினர், உவந்தார்;
கண்ணார் நுதல் பெருமான், 'இவர்க்கு அரிதோ? 'எனக் கடைபார்த்து,
'எண்ணாது இவை பகர்ந்தீர்; பொருள் கேளீர்! 'என இசைத்தான். 6.26.140
'நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தார்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர். 6.26.141
"அறத்தாறு அழிவு உளது ஆம் " என, அறிவும் தொடர்ந்து அணுகாப்
புறத்தார், புகுந்து அகத்தார் எனப் பிறந்தார், அது புரப்பார்;
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான், இவண் வந்தார்;
திறத்தால் அதுதெரிந்து, யாவரும் தெரியாவகை திரிவார். 6.26.142
"உயிர்தோறும் உற்றுளன், தோத்திரத்து ஒருவன் " என உரைக்கும்
அயிராநிலை உடையான் இவன்; அவன், இவ் உலகு அனைத்தும்
தயிர்தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து, ஏறிய தலைவன்;
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர்; இது பரமால். 6.26.143
'நெடும் பாற்கடல் கிடந்தாரும், பண்டு, இவர்; நீர் குறை நேர,
விடும்பாக்கியம் உடையார்களைக் குலத்தோடு அற வீட்டி,
இடும்பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் 'என இது எலாம்,
அடும்பு ஆக்கிய தொடைச் செஞ்சடை முதலோன் பணித்து அமைந்தான். 6.26.144
உண்மையினை அறிவுறுத்திய சிவபெருமானைத் தேவர்கள் தொழுது போற்றுதல்
'அறிந்தே, இருந்து அறியேம், அவன் நெடு மாயையின் அயர்ப்பேம்;
பிறிந்தேம் இனி முழுது ஐயமும்; பெருமான் உரை பிடித்தோம்;
எறிந்தேம் பகைமுழுதும்; இனித் தீர்ந்தேம், இடர் கடந்தேம்;
செறிந்தோர் வினைப் பகைவா! ' எனத்தொழுதார், நெடுந்தேவர். 6.26.145
மாயோன் படையினை இந்திரசித்து ஏவுதலும் இலக்குவன், தன்னைத் திருமாலாகத் தியானித்த அளவில் அது விலகிப் போதலும்
மாயோன் நெடும்படை வாங்கிய வளைவாள் எயிற்று அரக்கன்,
'நீயோ இது தடுத்தாய் எனின், நினக்கு ஆர் எதிர் நிற்பார்?
போயோ விசும்பு அடைவாய்? இது பிழையாது 'எனப் புகலா,
தூயோன்மிசை, உலகு யாவையும் தடுமாறிட, துரந்தான். 6.26.146
சேமித்தனர் இமையோர்தமை, சிரத்து ஏந்திய கரத்தால்;
ஆம் இத் தொழில், பிறர் யாவரும் அடைந்தார்; பழுது அடையாக்
காமிப்பது முடிவிப்பது, படர்கின்றது கண்டான்;
'நேமித் தனி அரி, தான் 'என நினைந்தான், எதிர் நடந்தான். 6.26.147
தீக்கின்றது இவ் உலகு ஏழையும் எனச் செல்வதும் தெரிந்தான்;
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைந்தான்;
மீச் சென்றிலது, அயல் சென்றது, விலங்கா, வலங்கொடு, மேல்
போய்த்து, அங்கு அது; கனல் மாண்டது புகை வீய்ந்தது, பொதுவே. 6.26.148
ஏத்து ஆடினர், இமையோர்களும் கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடின; அர மங்கையர் குனித்து ஆடினர்; தவத்தோர்
'காத்தாய் உலகு அனைத்தும் 'எனக் களித்து ஆடினர்; கமலம்
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய் கொடு புகழ்ந்தார். 6.26.149
சிவனது படையினை இந்திரசித்து விடுதல்
அவன் அன்னது கண்டான், 'இவன் ஆரோ? 'என அயிர்த்தான்;
'இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா,
'எவன் என்னினும் நின்று ஆகுவது இனி எண்ணிலன் 'என்னா,
'சிவன் நன்படை தொடுத்து ஆருயிர் முடிப்பேன் 'எனத் தெரிந்தான். 6.26.150
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு நாள் ஒருபகலே
தீர்ப்பான் படை தொடுப்பேன் ' எனத் தெரிந்தான்; அது தெரியா,
மீப் பாவிய இமையோர் குலம் வெரு உற்றது; 'இப்பொழுதே
மாய்ப்பான் 'என உலகு யாவையும் மறுகுற்றன, மயங்கா. 6.26.151
'தானே சிவன்தரப் பெற்றது, தவம் நாள்பல உழந்தே;
தானே, 'பிறர் அறியாதது தந்தேன் 'எனச் சமைந்தான்;
ஆனால், இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை 'என்னா,
மேல்நாளும் இதனையே விடின் எதிர் நிற்பவர் இல்லை. 6.26.152
மனத்தால், மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்;
நினைத்தான்; 'இவன் உயிர்கொண்டு இவண் நிமிர்வாய் 'என நிமிர்ந்தான்;
சினத்தால் நெடுஞ்சிலை நாண் தடந் தோள்மேல் உறச் செலுத்தா,
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான். 6.26.153
சிவனது படையினால் தோன்றிய விளைவுகள்
சூலங்களும், மழுவும், சுடு கணையும், கனல் சுடரும்,
ஆலங்களும், அரவங்களும், அசனிக்குலம் எவையும்,
காலன்தனது உருவங்களும், கரும்பூதமும், பெரும் பேய்ச்
சாலங்களும் நிமிர்கின்றன, உலகு எங்கணும் தான் ஆய். 6.26.154
ஊழிக் கனல் ஒருபால் அத னுடனே தொடர்ந்து உடற்றும்;
சூழிக் கொடுங் கடுங்காற்று அத னுடனே வர, தூர்க்கும்
ஏழிற்கும் அப் புறத்தாய் உள பெரும் போர்க்கடல் இழிந்த ஆங்கு
ஆழித்தலைக் கிடந்தால் என நெடுந்தூங்கு இருள் அடைய. 6.26.155
இரிந்தார் குலநெடுந் தேவர்கள்; இருடிக் குலத்து எவரும்
பரிந்தார். 'இதுபழுது ஆகிலது, இறுவான் எனும் பயத்தால்;
நெரிந்து ஆங்கு அழிகுரங்கு உற்றது பகருந்துணை நெடிதே.
திரிந்தார், இரு சுடரோர்; உலகு ஒரு மூன்று உடன் திரிய. 6.26.156
அதுகண்டு அஞ்சிய வீடணன் இதனை விலக்க இயலுமோ என வினவ இலக்குவன் அதனை நோக்கிச் சிரித்தல்
பார்த்தான் நெடுந்தகை வீடணன், உயிர் கால் உற, பயத்தால்
வேர்த்தான், 'இது விலக்கும் தரம் உளதோ, முதல் வீரா!
தீர்த்தா! 'என அழைத்தான்; அதற்கு இளங்கோளரி சிரித்தான்;
போர்த்தார் அடல் கவிவீரரும், அவன் தாள்நிழல் புகுந்தார். 6.26.157
அபயம் அடைந்தவர்களை அஞ்சற்க எனக் கையமைத்துத் தானும் சிவன் படையை விட, அது இந்திரசித்தின் படையினை விழுங்குதல்
'அவயம்! உனக்கு அவயம்! 'எனும் அனைவோரையும், 'அஞ்சேல்
அவயம் உமக்கு அளித்தோம் 'எனத் தன் கைத் தலத்து அமைத்தான்
'உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன், இனி ஒழியேன்;
சிவன் ஐம் முகம் உடையான் படை தொடுப்பேன் 'எனத் தெளிந்தான். 6.26.158
அப்பொன்படை மனத்தால் நினைந்து, அர்ச்சித்து அதை, 'அழிப்பாய்
இப்பொன் படைதனை மற்றொரு தொழில் செய்யலை 'என்னா,
துப்பு ஒப்பது ஒர்கணை கூட்டினன் துரந்தான்; இடை தொடரா
எப்பொன்படை எவையும் புக விழுங்குற்றது, ஒர் இமைப்பின். 6.26.159
விண் ஆர்த்தது; மண் ஆர்த்தது, மேலோர் மணிமுரசின்
கண் ஆர்த்தது, கடல் ஆர்த்தது, மழை ஆர்த்தது, கலையோர்
எண் ஆர்த்தது, மறை ஆர்த்தது, விசயம் என இயம்பும்
பெண் ஆர்த்தனள், அறம் ஆர்த்தது, பிறர் ஆர்த்தது பெரிதால். 6.26.160
இலக்குவனது வன்மையைக் கண்டு திகைப்புற்ற இந்திரசித்து தன் வன்மையால் மேலும் அம்புகளைச் செலுத்துதல்
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை,
மறுகா வகை வலித்தான், அது வாங்கும்படி வல்லான்;
தறெுகாலனின் கொடியோனும், மற்று அதுகண்டு, அகம் திகைத்தான்;
அறுகால்வயக் கவிவீரரும் அரி என்பதை அறிந்தார். 6.26.161
'தெய்வப்படை பழுது உற்றது எனக் கூசுதல் சிதைவால்;
எய் வித்தகம் உளது; அன்னது பிழையாது 'என இசையா,
கைவித்தகம் அதனால் சில கணை வித்தினன்; அவையும்
மொய்வித்தகன் தடந்தோளினும் நுதற் சூட்டினும் மூழ்க. 6.26.162
வெய்யோன் மகன்முதல் ஆகிய விறலோர், மிகு திறலோர்,
கை ஓய்வு இலர், மலைமாரியின் நிருதக் கடல் கடப்பார்;
'உய்யார் 'என வடி வாளிகள் சதகோடிகள் உய்த்தான்.
செய்யோன் அயல் தனிநின்ற தன் சிறுதாதையைச் செறுத்தான். 6.26.163
இலக்குவனது அயலில் நின்ற வீடணனை இந்திரசித்து இகழ்ந்துரைத்தல்
'முரண்தடம் தண்டும் ஏந்தி, மனிசரை முறைமை கூறிப்
பிரட்டரின் புகழ்ந்து, பேதை அடியரின் தொழுது பின்சென்று,
இரட்டுறும் முரசம் என்ன, இசைத்ததே இசைக்கின்றாய் ஐப்
புரட்டுவன் தலையை, இன்று; பழி என ஒழிவென் போலாம். 6.26.164
'விழிபட, முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து
வழிபட, உலகம் மூன்றும் அடிப்பட வந்த தேனும்,
அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் அஃகாப்
பழிபட வந்த வாழ்வை யாவரே நயக்கற் பாலார்? 6.26.165
'நீர் உள்ளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீவர், இராவணனோடு; மீளார்;
ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உளை உறைய; நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார், அரசு வீற்றிருக்க? ஐயா! 6.26.166
'முந்தைநாள், உலகம் தந்த மூர்த்தி வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தை யாரைச் செரு இடை சாயத் தள்ளி,
கந்தனார் தந்தை யாரைக் கயிலையோடு ஒருகைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது, இப்பெரும் பலம் கொண்டேயோ? 6.26.167
'பனிமலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம்
தனிமுதல் தலைவன் ஆன உன்னை வந்து அமரர் தாழ்வார்;
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்;
இனி உனக்கு என்னோ, மானம்? எங்கேளாடு அடங்கிற்று அன்றே. 6.26.168
'சொல்வித்தும், பழித்தும், நுங்கை மூக்கினைத் துணிவித்தோரால்,
எல்வித்தும் படைக்கை உங்கள் தமையனை எங்கேளாடும்
கொல்வித்தும், தோற்றுநின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும், வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றே? 6.26.169
'எழுதி ஏர் அணிந்த திண்தோள் இராவணன், இராமன் அம்பால்,
புழுதியே பாயல் ஆகப் புரண்டநாள், புரண்டுமேல் வீழ்ந்து,
அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித்
தொழுதியோ? யாதோ, செய்யத் துணிந்தனை? விசயத் தோளாய்! 6.26.170
'ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர்வந்து உய்யும்
மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும் அன்னான்
தான் உடை செல்வம் துய்க்கத் தகுதியோ? சரத்தினோடும்
வான் இடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கின்! 'என்றான். 6.26.171
வீடணன், மறுமொழி பகர்தல்
அவ் உரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி,
'வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய;
இவ் உரை கேட்டி 'என்னா, இனையன விளம்பல் உற்றான். 6.26.172
'அறம்துணை ஆவது அல்லால், அருநரகு அமைய நல்கும்
மறம்துணை ஆக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்;
துறந்திலேன் மெய்ம்மை; எய்தும் பொய்ம்மையே துறப்பது அல்லால்,
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின், அவன் பிழைத்த போதே. 6.26.173
'உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமோ? 6.26.174
"மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த
தேவர்தம் தேவன், தேவி கற்பினின் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது '' என்று உரைப்ப, நுன் தாதைசீறி
'போ 'எனப் போந்தேன்; இன்று நரகதில் பொருந்துவேனோ? 6.26.175
'வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண்க; துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி, மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும்
எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக. 6.26.176
"அறத்தினைப் பாவம் வெல்லாது " என்னும் அது அறிந்து "ஞானத்
திறத்தினும் உறும் '' என்று எண்ணி, தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக, பழியொடும் புணர்க, போதச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க ' என்றனன், சீற்றம் தீர்ந்தான். 6.26.177
'பெறும் சிறப்பு எல்லாம் என்கைப் பிறைமுக வாளி ஒன்றால்
இறும் சிறப்பு அல்லால், அப்பால் எங்கு இனிப் போவது? 'என்னா,
தறெும் சிறைக் கலுழன் அன்னது ஒருகணை தெரிந்து, செம்பொன்
உறும் சுடர்க்கழுத்தை நோக்கி, நூக்கினான், உருமின் வெய்யோன். 6.26.178
அக் கணை அசனி என்ன அன்று என, ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன, முடுகிய முடிவை நோக்கி,
'இக்கணத்து இற்றான் 'இற்றான் ' என்கின்ற இமையோர் காண,
கைக்கணை ஒன்றால், வள்ளல், அக்கணை கண்டம் கண்டான். 6.26.179
கோல் ஒன்று துணிதலோடும், கூற்றுக்கும் கூற்றம் அன்னான்,
வேல் ஒன்று வாங்கி விட்டான்; வெயில் ஒன்று விழுவது என்ன,
நாலொன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்,
நூல் ஒன்று வரிவிலானும், அதனையும் நுறுக்கி வீழ்த்தான். 6.26.180
'வேல்கொடு கொல்லல் உற்றான் ' என்று, ஒரு வெகுளி பொங்க,
கால்கொடு காலின் கூடிக் கைதொடர் கனகத் தண்டால்,
கோல்கொளும் ஒருவனோடும், கொடித் தடந்தேரில் பூண்ட
பால்கொளும் புரவி எல்லாம் படுத்தினான், துடிப்பு மாற. 6.26.181
அழிந்த தேர்மீது நின்றான் ஆயிர கோடி அம்பு
பொழிந்து, அவன் தோளின் மேலும், இலக்குவன் புயத்தின் மேலும்,
ஒழிந்தவர் உரத்தின் மேலும் உதிர நீர் வாரி ஓதம்
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான். 6.26.182
ஆர்த்தவன்; அனைய போழ்தின், 'அழிவு இலாத் தேர்கொண்டு அன்றிப்
போர்த்தொழில் வெல்லல் ஆகாது ' என்பது ஓர் பொருளை உன்னி,
பார்த்தவர் இமையா முன்னம் 'விசும்பிடைப் படர்ந்தான் 'என்னும்
வார்த்தையை நிறுத்திப் போனான், இராவணன் மருங்கு புக்கான். 6.26.183
----------------
6.27 இந்திரசித்து வதைப் படலம் 9253 – 9323 (71)
விண்ணிடைக் கரந்தான் என்பார், வஞ்சனை விளைக்கும் என்பார்,
கண்ணிடைக் கலங்கி நோக்கி, ஐயுறவு உழக்குங்காலை,
புண் உடை யாக்கைச் செந்நீர் இழிதர, புக்கு நின்ற
எண்ணுடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான். 6.27.1
உற்றது சொல் என இராவணன் இந்திரசித்தினை வினவுதல்
'தொடங்கிய வேள்வி முற்றப் பெற்றிலாத் தொழில், நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம்குறை அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி 'என்றான். 6.27.2
இந்திரசித்து சொல்வது (9254-9257)
சூழ்வினை மாயை எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி
வேள்ியைச் சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த் தொழில் புக்கு நின்றான்;
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்து விட்டான். 6.27.3
'நிலம்செய்து விசும்பும் செய்து, நெடியவன் படை, நின்றானை
வலம்செய்து போயிற்று என்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும்பகை தேடிக் கொண்டோம்
சலம்செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே. 6.27.4
முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்மேல்
விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர்ப்பான் அல்லன்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான். 6.27.5
'ஆதலால், "அஞ்சினேன் " என்று அருளலை; ஆசைதான் அச்
சீதைபால் விடுதி ஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன் 'என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான். 6.27.6
இராவணன் சினந்து கூறுதல் (9258-9263)
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இளநிலவு தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு, 'போர்க்கு இனி ஒழிதி போலாம்!
மயங்கினை; மனிசன் தன்னை அஞ்சினை வருந்தல்; ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிசரைத் தனு ஒன்றாலே. 6.27.7
'முன்னையோர் இறந்தார் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும்,
உன்னை "நீ அவரை வென்று தருதி " என்று உணர்ந்தும் அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும்பகை தேடிக் கொண்டேன். 6.27.8
'பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம் பெயரப், பேராக்
காதை என் புகழினோடு ' நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்,
சீதையை விடுவது உண்டோ, இருபது திண்தோள் உண்டாய்? 6.27.9
'வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும், யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின்?
பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வார்; புகழுக்கும் இறுதி உண்டோ? 6.27.10
'விட்டனென், சீதை தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி,
கட்டுவது அல்லால், என்னை யான் எனக் கருதுவாரோ?
"பட்டனென் " என்றபோதும், எளிமையின் படுகிலேன்யான்
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து வென்றேன். 6.27.11
'சொல்லி என், பலவும்? நீ நின் இருக்கையைத் தொடர்ந்து, தோளில்
புல்லிய பகழி வாங்கி, போர்த்தொழில் சிரமம் போக்கி,
எல்லியும் கழித்தி 'என்னா, எழுந்தனன்; எழுந்து பேழ்வாய்
வல்லியம் முனிந்தால் அன்னான், 'வருக, தேர் தருக! 'என்றான். 6.27.12
போர்க்கு எழுந்த இராவணனைத் தடுத்து இந்திரசித்து போர்க்குப் புறப்படுதல்
எழுந்தவன் தன்னை நோக்கி, இணை அடி இறைஞ்சி, 'எந்தாய்!
ஒழிந்து அருள், சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி; யான்போய்க்
கழிந்தனென் என்ற பின்னர், 'நல்லவா காண்டி 'என்னா
மொழிந்து தன் தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியலுற்றான். 6.27.13
இந்திரசித்து தானம் செய்து விட்டு இராவணனை நோக்கிக் கண்ணீர் பெருக்கிக்கொண்டு போதல்
படைக்கலம், விஞ்சை மற்றும் படைத்தன பலவும், தன்பால்
அடைக்கலம் ஆகத் தேவர் அளித்தன, எல்லாம் வாங்கி,
கொடைத்தொழில் வேட்டோர்க்கு எல்லாம்
கொடுத்தனன் கொடியோன் தன்னைக்
கடைக் கணால் நோக்கி நோக்கி, இருகண் நீர் கலுழப் போனான். 6.27.14
தன்னைத் தொடர்ந்த அரக்கியரை விலக்கி மன்னனைக் காக்குமாறு இந்திரசித்து கூறித் தேற்றுதல்
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர், விரைவின் எய்தி,
'விலங்கல் அம் தோளாய்! நின்னைப் பிரிகலம்; விளிதும் 'என்னா
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை, 'மன்னனைக் காமின்; யாதும்
கலங்கலிர்; இன்றே, சென்று, மனிசரைக் கடப்பல் 'என்றான். 6.27.15
தன்னைச் சூழ்ந்துகொண்டு வருந்தும் அரக்கியரை நீங்கி இந்திரசித்து அரிதிற் செல்லுதல்
வணங்குவார், வாழ்த்துவார், தன் வடிவனை நோக்கித் தம் வாய்
உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார், வெருவலுற்றுக்
கணங்குழை மகளிர் ஈண்டி இரைத்தவர், கடைக்கண் என்னும்
அணங்கு உடை நெடுவேல் பாயும் அமர்கடந்து, அரிதின் போனான். 6.27.16
இலக்குவன் இந்திரசித்தின் தேர் வரும் ஓசை கேட்டல்
ஏயினன் இன்னன் ஆக, இலக்குவன் எடுத்த வில்லான்,
சேய் இரு விசும்பை நோக்கி 'வீடண! தீயோன் அப்பால்
போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் ஒன்றும் 'என்பான்,
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான். 6.27.17
இந்திரசித்தின் தேர் வருதல்
குன்று இடை நெரிதர, வடவரையின் குவடு உருள்வது என முடுகுதொறும்
பொன்திணி கொடியது, இடி உருமின் அதிர்குரல் முரல்வது, புனைமணியின்
மின்திரள் சுடரது, கடல் பருகும் வட அனல் வெளி உற வருவது எனச்
சென்றது, திசை திசை உலகு இரிய திரிபுவனமும் உறுதனி இரதம். 6.27.18
கடல்மறுகிட, உலகு உலைய, நெடுங் கரி இரிதர, எதிர் கவிகுலமும்
குடல் மறுகிட, மலை குலைய, நிலம் குழியொடு கிழிபட, வழிபடரும்
இடம் மறுகிய பொடி முடுகிடவும், இருள் உளது என எழும் இகல் அரவின்
படம்மறுகிட, எதிர்விரவியது அவ் இருள்பகல் உறவரு பகை இரதம். 6.27.19
இந்திரசித்தும் இலக்குவனும் பொருதல்
ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன், அமரரும்
வெருவினர்; கவிகுலமும்
வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால், விடுகணை
சிதறினன்; அடுதொழிலோன்,
தீர்த்தனும், அவன் எதிர்முடுகி; நெடுந் திசைசெவிடு
எறிதர, விசைகெழுதிண்
போர்த்தொழில் புரிதலும், உலகு கடும் புகையொடு சிகை
அனல் பொதுளியதால 6.27.20
வீடணன் இலக்குவனுக்கு ஆலோசனை கூற அவன் கடும்போர் புரிதல்
வீடணன் அமலனை, 'விறல் கெழு போர்
விடலையை இனி இடைவிடல் உளதேல்,
சூடலை, துறுமலர் வாகை 'எனத் தொழுதனன்;
அ(வ்) அளவில் அழகனும் அக்
கோடு அணை வரிசிலை உலகு உலைய, குலம்
வரை விதிர்பட, நிலவரையில்
சேடனும் வெருவுற, உரும் உறழ் திண் தறெுகணை
முறைமுறை சிதறினனால். 6.27.21
ஆயின அளவையின் அனல்முகவாய் அருகணை
அவன்விட, இவன்விட, அத்
தீயினும் எரிவன உயிர்பருக, சிதறின
கவிகேளாடு இன நிருதர்;
போயின போயின திசை நிறையப் புரள்பவர்
முடிவிலர்; பொருதிறலோர்
ஏயினர், ஒருவரை ஒருவர் குறித்து, எரிகணை
சொரிவன இருமழைபோல். 6.27.22
அற்றன, அனல்விழி நிருதன் வழங்கு அடுகணை
இடை இடை : அடல் அரியின்
கொற்றவன் விடுகணை முடுகி, அவன் உடல்பொதி
குருதிகள் பருகின கொண்டு
உற்றன; ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில;
தறெுகில அனுமன் உடல்;
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொருசரம்
அவன் அவை உணர்கிலனால் 6.27.23
ஆயிடை, இளையவன், விடம் அனையான் அவன்
இடு கவசமும் அழிவுபடத்
தூயினன், அயில்முக விசிகம் : நெடுந் தொளைபட,
விழிகனல் சொரிய, முனிந்து,
ஏயின நிருதனது எரிகணைதான் இடன் இல
படுவன இடை இடை வந்து
ஓய்வு உறுவன; அது தெரிவு உறலால், உரறினர்
இமையவர், உவகையினால். 6.27.24
இந்திரசித்து விட்ட வேலினை இலக்குவன் துணித்தல்
'வில்லினின் வெல்லுதல் அரிது 'எனலால், வெயிலினும்
அனல் உமிழ் அயில், விரைவில்
செல் என, மிடல் கொடு கடவினன்; மற்று அது
திசைமுகன் மகன் உதவியதால்;
எல்லினும் வெளிபட எதிர்வது கண்டு, இளையவன்
எழுவகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடுகணையால், நடு
இரு துணிபட உரறினனால். 6.27.25
ஆணியின் நிலை என விசிகம் நுழைந்து ஆயிரம்
உடல்புக, அழிபடு செஞ்
சோணிதம் நிலம் உற உலறிடவும், தொடுகணை
விடுவன மிடல்கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும், பகலவன்
மருமகன், அடுகணைவன்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட,
முறைமுறை சிதறினனால். 6.27.26
இலக்குவன் இந்திரசித்தின் தேர்ப்பாகனை வீழ்த்தல்
'தேர் உளது எனின், இவன்வலி தொலையான் '
எனும் அது தெரிவு உற, உணர் உறுவான்
'போர் உறு புரவிகள் படுகிலவால்; புனைபிணி
துணிகில, பொருகணையால்;
சீரிது, பெரிது, இதன் நிலைமை 'எனத் தெரிபவன்
ஒரு சுடு தறெுகணையால்,
சாரதி மலை புரை தலையை நெடுந் தரையிடை
இடுதலும் நிலை திரிய. 6.27.27
பாகனை இழந்த தேரின் நிலைமை
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின், தவத்தை நண்ணி,
அய்வினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி,
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகில் தோலாப்
பொய்வினை மகளிர் கற்பும் போன்றது அப் பொலம் பொன் திண்தேர். 6.27.28
இந்திரசித்து தன் மார்பில் தைத்திருந்த அம்புகளைப் பறித்து வீசுதல்
துள்ளுபாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி,
அள்ளினன் பறிக்கும் தன்பேர் ஆகமே ஆவம் ஆக,
வள்ளல்மேல் அனுமன்தன்மேல் மற்றையோர் மல்திண் தோள்மேல்,
உள்ளுறப் பகழி தூவி, ஆர்த்தனன் எவரும் உட்க. 6.27.29
இந்திரசித்தின் வீரச் செயல் கண்டு தேவர் மலர் சிந்துதல்
வீரர் என்பார்கட்கு எல்லாம் முன்னிற்கும் வீரர் வீரன்
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியிப் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற் பாலார் துஞ்சும் போது உணர்வின் சோராத்
தீரர் என்று அமரர் செப்பிச் சிந்தினார், தெய்வப் பொன் பூ. 6.27.30
இந்திரசித்தின் செயல் கண்டு இலக்குவன் வியத்தல்
'எய்தவன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும்;
கய்தடுமாறாது; உள்ளம், உயிர் இனம் கலங்காது யாக்கை
மொய்கணை கோடி கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்;
அய்யனும், 'இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல் 'என்றான். 6.27.31
இவன் பகலில் அல்லால் இறவான் என வீடணன் இலக்குவனுக்குச் சொல்லுதல்
'தேரினைக் கடாவி, வானில் செல்லினும் செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்
காரினைக் கலந்து வஞ்சம் கருதினும் கருதும்; காண்டி,
வீர; மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின், வெய்யோன். 6.27.32
இலக்குவன் இப்பொழுதே வெல்வேன் எனல்
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப, 'இன்னே
பொன்றுவது அல்லால் அப் பால் இனி ஒரு போக்கும் உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே தறெுகணை; வலியில் தீர்ந்தான்;
வென்றி இப்பொழுதே கோடும்; காண் 'என விளம்பும் எல்லை. 6.27.33
சூரியன் உதித்தல்
செம்புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்,
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்,
வெம்புபொன் தேரில் தோன்றும் சிறப்பினும், அரக்கன் வெய்யோன்
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால். 6.27.34
அமரரின் மகிழ்ச்சி
விடிந்தது பொழுதும்; வெய்யோன் விளங்கினன், உலகம் மீதா
இடுஞ்சுடர் விளக்கம் என்ன, அரக்கரின் இருளும் வீய,
'கொடுஞ்சின மாயச் செய்கை வலியொடுங் குறைந்து குன்ற
முடிந்தனன், அரக்கன் 'என்னா, முழங்கினர் அமரர் எல்லாம். 6.27.35
வீடணன் இந்திரசித்தின் வரத்தைப் பற்றிக் கூறியது
'ஆர் அழியாத சூலத்து அண்ணல் தன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்த போதும்,
போர் அழியான், இவ் வெய்யோன்; புகழ் அழியாத பொன் தோள்
வீர! இது ஆணை 'என்றான் வீடணன், விளைவது ஓர்வான். 6.27.36
இலக்குவன், கடை ஆணியை நீக்கித் தேரைப் பிரித்தல்
'பச்சை வெம்புரவி வீயா; பல இயல் சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா ' என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி. 6.27.37
தேர் அழிந்தது; குதிரைகள் ஆற்றாமல் வருந்துதல்
மணிநெடுந் தேரின் கட்டு விட்டு, அது மறிதலோடும்,
அணிநெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே
திணிநெடு மரம் ஒன்று ஆழிவாள் மழுத் தாக்க, சிந்திப்
பணை நெடு முதலும் நீங்க, பாங்கு உறை பறவை போல. 6.27.38
இந்திரசித்து விண்மிசைச் சென்று மறைந்து ஆரவாரித்தல்
அழிந்த தேர்த் தட்டில் நின்றும் அங்குள்ள படையை அள்ளிப்
பொழிந்தனன்; இளைய வீரன் கணைகளால் துணித்துப் போக்க,
மொழிந்தது ஓர் அளவின் விண்ணை முட்டினான், உலகம் மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர், ஓசை கேட்டார். 6.27.39
இந்திரசித்து மறைந்து நின்று சொரிந்த கன்மாரியால் வானரர் அழிதல்
மல்லின் மாமாரி அன்ன தோளினான், மழையின் வாய்ந்த
கல்லின்மா மாரி, பெற்ற வரத்தினால், சொரியுங் காலை,
செல்லும் வான் திசைகள் ஓரார், சிரத்தினோடு உடல்கள் சிந்திப்
புல்லினார் நிலத்தை, நின்ற வானர வீரர், போகார். 6.27.40
இலக்குவன் விண்ணை நோக்கி அம்புகளை எய்தல்
காண்கிலன், கல்லின் மாரி அல்லது, காளை வீரன்,
சேண்கலந்து ஒளித்து நின்ற செய்கையால், திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என, முழுதும் வௌவ,
ஏண்கலந்து அமைந்த வாளி ஏவினான், இடைவிடாமல். 6.27.41
இந்திரசித்து மேகக் கூட்டத்திடையே காணப்படுதல்
மறைந்தன திசைகள் எங்கும்; மாறுபோய் மலையும் ஆற்றல்
குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைப்பன் ஆனான். 6.27.42
இந்திரசித்தின் வில்லேந்திய கையை இலக்குவன் கொய்தல்
'சிலை அறாது எனினும், மற்று அத் திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது 'என்னா, வரிசிலை ஒன்று வாங்கி,
கலை அறாத் திங்கள் அன்ன வாளியால், கையைக் கொய்தான்,
விலை அறா மணிப்பூணோடும், வில்லொடும், நிலத்து வீழ. 6.27.43
இந்திரசித்தின் கை அற்றுத் தரையில் வீழ்தல்
பாக வான் பிறைபோல் வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும்,
மாக வான் தடக்கை மண்மேல் விழுந்தது மணிப்பூண் மின்ன
வேக வான் கடுங்கால் எற்ற முற்றும்போய் விளியும் நாளில்
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன. 6.27.44
துணிபட்ட இந்திரசித்தின் கை தரையில் விழுந்து துடித்தல்
படித் தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையைப் பற்றிக்
கடித்தது போல, கோல விரல்களால் இறுகக் கட்டிப்
பிடித்த வெஞ்சிலையினோடும், பேர் எழில் வீரன் பொன் தோள்
துடித்தது, மரமும் கல்லும் துகள்படக் குரங்கும் துஞ்ச. 6.27.45
இந்திரசித்தின் கை யற்று வீழ்ந்தது கண்ட தேவர்கள் வியப்பு
அந்தரம் அதனில் நின்ற வானவர், 'அருக்கன் வீழா
சந்திரன் வீழா, மேரு மால்வரை தகர்ந்து வீழா;
இந்திர சித்தின் பொன் தோள் இற்று இடை வீழ்ந்தது என்றால்,
எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என்? 'என்றார். 6.27.46
இந்திரசித்தின் கையற்றது கண்டு அரக்கர் கலங்குதல்
மொய் அறமூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால், அப்
பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன், பூத்த
மை அறக் கரிது என்று எண்ணும் மனத்தினான், வயிரம் அன்ன,
கை அற, தலை அற்றார் போல் கலங்கினார், நிருதர் கண்டார். 6.27.47
வானர சேனை அரக்கர் சேனையை அழித்தல்
அன்னது நிகழும் வேலை, ஆர்த்து எழுந்து, அரியின் வெள்ளம்
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளாவண்ணம்,
கொல் நகக் கரத்தால், பல்லால், மரங்களால், மானக் குன்றால்,
பொன்நெடு நாட்டை எல்லாம் புதுக்குடி ஏற்றிற்று அன்றே. 6.27.48
இந்திரசித்தின் வீரப் பேச்சு
காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான், 'செம்மை, காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர் கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் 'என்று தோன்றினான், 'பகையில் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் 'என்றான். 6.27.49
இந்திரசித்தின் தோற்றங்கண்ட இலக்குவன் அவனைக் கொல்லத் துணிதல்
காற்று என, உரும் ஏறு என்ன, கனல் என, கடைநாள் உற்ற
கூற்றம் ஓர் சூலங்கொண்டு குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா, 'இனி, தலைதுணிக்கும் காலம்
ஏற்றது 'என்று, அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான். 6.27.50
இந்திரசித்தின்மேல் பிறைவாய் அம்பினை எய்தல்
'மறைகளே தேறத்தக்க, வேதியர் வணங்கற் பால
இறையவன் இராமன் என்னும் நல் அறமூர்த்தி என்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி ' என்று, ஒரு பிறைவாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான். 6.27.51
இலக்குவன் விடுத்த அம்பு இந்திரசித்தின் தலையை யறுத்துத் தள்ளுதல்
நேமியும், குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான்
நாம வேல் தானும், மற்ற நான்முகன் படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன் சிரத்தைத் தள்ளி,
பூமழை அமரர் சிந்த, பொலிந்தது அப் பகழிப் புத்தேள். 6.27.52
இந்திரசித்தின் உடம்பு தரையில் வீழ்தல்
அற்ற வன்தலை மீது ஓங்கி, அண்டம் உற்று அணுகா முன்னம்,
பற்றிய சூலத்தோடும் உடன்நிறை பகழியோடும்,
எற்றிய காலக் காற்றில், மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்து என்ன, வீழ்ந்தது, சோரன் யாக்கை. 6.27.53
இந்திர சித்தின் தலை தரையில் வீழ்தல்
விண்தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும்
குண்டலத் துணைகேளாடும் கொந்தளக் குஞ்சிச் செங்கேழ்ச்
சண்டவெங் கதிரின் கற்றைத் தழையொடும் இரவிதான் இம்
மண்தலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்மேல். 6.27.54
இந்திரசித்து வீழ்ந்ததும் அரக்கர்படை இரிந்தோடுதல்
உயிர் புறத்து உற்ற காலை உள்நின்ற உணர்வினோடும்
செயிர் அறு பொறியும் அந்தக் கரணமும் சிந்துமாபோல்
அயில் எயிற்று அரக்கர் உள்ளார், ஆற்றலர் ஆகி, ஆன்ற
எயில் உடை இலங்கை நோக்கி, இரிந்தனர், படையும் விட்டார். 6.27.55
தேவர்கள் ஆடையை வீசி ஆரவாரித்தல்
வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும்
'செல்லாது அவ் இலங்கை வேந்தற்கு அரசு, எனக் களித்த தேவர்
எல்லாரும் தூசு வீசி ஏறிட ஆர்த்த போது,
கொல்லாத விரதத்தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் 6.27.56
முதல் தேவர்கள் தரையிடைத் தோன்றி நிற்றல்
வரந்தரு முதல்வன், மற்றை மான்மறிக் கரத்து வள்ளல்,
புரந்தரன் முதல்வர் ஆய, நான்மறைப் புலவர், பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார்; அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர் அவரை யாக்கை; கண்டன குரங்கும் கண்ணால். 6.27.57
'அறந்தலை நின்றார்க்கு இல்லை அழிவு 'எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலை அதனில் மற்று அப் பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன, இமையோர் ஏத்த. 6.27.58
அங்கதன் இந்திரசித்தின் தலையை முன்தூக்கிச் செல்ல இலக்குவன் அனுமன் தோள்மேல் செல்லுதல்
ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன்தன் தலையை அம்கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும்
பூக்கிளர் பந்தர் நிழல், அனுமன்மேல் இளவல் போனான். 6.27.59
அங்கதன் கையில் இந்திரசித்தின் தலையைக் கண்ட இந்திரன் மகிழ்ச்சி
வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற பழியன், மீதுற்று
ஓங்கிய முடியன், திங்கள் ஒளிபெறும் முகத்தன், உள்ளால்
வாங்கிய துயரன், மீப்போய் வளர்கின்ற புகழன், வந்துற்று
ஓங்கிய உவகை யாளன், இந்திரன், உரைக்கலுற்றான். 6.27.60
இந்திரன் மகிழ்ச்சி மொழி (9312-9313)
"எல்லிவான் மதியின் உற்ற கறை என, என்மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது '' என்று அகம் புலம்புகின்றேன்.
வில்லியர் ஒருவர் நல்க, துடைத்து உறும் வெறுமை தீர்ந்தேன்;
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை? இனிச் சிறுமை யாதோ? 6.27.61
சென்று அலை ஆழி தொட்டோர் சேய் அருள் சிறுவன் செம்மல்,
வென்று அலைத்து என்னை ஆர்த்துப் போர்த்தொழில் கடந்த வெய்யோன்,
தன்தலை எடுப்பக் கண்டு, தானவர் தலைகள் சாய,
என் தலை எடுக்கலானேன்; இனிக்குடை எடுப்பேன் 'என்றான் 6.27.62
இராமன் அருகிலுள்ளோர் அங்கதனைப் புகழ்தல்
'வான்தலை எடுக்க, வேலை மண்தலை எடுக்க, வானோர்
கோன்தலை எடுக்க, வேதக் குலம் தலை எடுக்க, குன்றாத்
தேன்தலை எடுக்கும் தாராய்! தேவரை வென்றான் தீய
ஊன்தலை எடுத்தாய், நீ 'என்று உரைத்தனர் உவகை மிக்கார். 6.27.63
இராமன் இலக்குவன் வரவை எதிர்நோக்கியிருத்தல்
வரதன், போய் மறுகாநின்ற மனத்தினன், 'மாயத்தோனைச்
சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க 'என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிவு பார்த்து. 6.27.64
மீளும் தம்பியைப் பார்த்து இராமன் கண்ணீர் சொரிதல்
வன்புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத்
தன்புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை,
அன்புகொல்? அழு கணீர்கொல்? ஆனந்த வாரியே கொல்?
என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யார் அது ஓர்வார்? 6.27.65
இராமன் திருவடியில் இந்திரசித்தின் தலையை வைத்தல்
விழுந்து இழி கண்ணின் நீரும், உவகையும், களிப்பும், வீங்க,
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான்
கொழுந்து எழும் செக்கர்க் கற்றை வெயில்விட, எயிற்றின் கூட்டம்
அழுந்துற மடித்த பேழ்வாய்த் தலை அடி உறை ஒன்றாக. 6.27.66
இந்திரசித்தின் தலையினை நோக்கிய இராமனது மகிழ்ச்சி நிலை
தலையினை நோக்கும்; தம்பி கொற்றவை தழீஇய பொன்தோள்
மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்;
சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த
கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்புக் கொண்டான். 6.27.66
தன் தாளின் மேல் வணங்கிய தம்பியை இராமன் தழுவிக் கொள்ளுதல்
காள மேகத்தைச் செக்கர் கலந்து என, கரிய குன்றின்
நாள்வெயில் பரந்தது என்ன, நம்பி தன் தம்பி மார்பில்
தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச் சுவடு தன் உருவில் தோன்ற,
தாளின்மேல் வணங்கினானைத் தழுவினன், தனித்து ஒன்று இல்லான். 6.27.68
தம்பியை இராமன் பாராட்டுதல்
கம்ப மதத்துக் களியானைக் காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனிவந்து குறுகினாள் என்று அகம்குளிர்ந்தேன்;
வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில்,
"தம்பி உடையான் பகை அஞ்சான் " என்னும் மாற்றம் தந்தனையால். 6.27.69
தம்பியைப் பன்முறை தழுவுதல்
தூக்கிய தூணி வாங்கி, தோெளாடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவச பாசம் ஒழித்து, அது விரைவின் நீக்கி,
தாக்கிய பகழிக் கூர்வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன் தழுவிப் பல்கால், பொன்தடந் தோளின் ஒற்றி. 6.27.70
இராமன் வீடணன் உதவியைப் புகழ்தல்
'ஆடவர் திலக! நின்னால் அன்று! இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி, ஈது 'என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால். 6.27.71
---------------
6.28 இராவணன் சோகப் படலம் 9324 – 9384 (61)
ஓத ரோதன வேலை கடந்துளார்
பூதரோதரம் புக்கென போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ
தூதர் ஓதவெங் காலின் துதைந்துளார். 6.28.1
தூதுவர் இராவணனை அடைதல்
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ
'இன்று இலங்கை அழிந்தது 'என்று ஏங்குவார்
சென்று இலங்கு ஐயில் தாதையைச் சேர்ந்துளார். 6.28.2
தூதுவர் இராவணனிடம் இந்திரசித்து இறந்ததைத் தெரிவித்தல்
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்
'இல்லை ஆயினன்; உன்மகன் இன்று 'எனச்
சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார். 6.28.3
வானவர் முதலோர் ஓடி ஒளிதல்
மாடு இருந்தவர் மாதவர் வானவர்
ஆடல் நுண்ணிடையார் மற்றும் யாவரும்
'வீடும் 'இன்று இவ் உலகு 'என விம்முவார்.
ஓடி எங்கணும் சிந்தி ஒளித்தனர். 6.28.4
சொன்ன தூதுவரை இராவணன் வாளால் வீசுதல்
சுடர்க் கொழும்புகை தீவிழி தூண்டிட
தடற்று வாள் உருவித் தரும் தூதரை
மிடற்று வீசல் உறா விழுந்தான் அரோ
கடல் பெருந்திரைபோல் கரம் சோரவே. 6.28.5
இராவணன் கண் தீ உகுத்தல்
'வாய்ப் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான்
காய்ப்பு உறும் தறு கண்ணிடைக் காந்தியும்
போய்ப் பிறந்து இவ் உலகைப் பொதியும்வெந்
தீப் பிறந்துளது இன்று 'எனச் செய்ததால். 6.28.6
படம்பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து
இடம்பிறங்கி வலம் பெயர்ந்து ஈடு அற
உடம்பு இறங்கிக் கிடந்து உழைத்து ஓங்கு தீ
விடம் பிறந்த கடல் என வெம்பினான். 6.28.7
திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட
இருபது என்னும் எரிபுரை கண்களும்;
உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர். 6.28.8
இராவணன் பற்களைக் கடித்துக்கொண்டு கைகளால் தரையை மோதல்
கடித்த பற்குலம் கற்குலம் கண் அற
இடித்த காலத்து உரும் என எங்கணும்
அடித்த கைத் தலம் அம் மலை ஆழிநீர்
வெடித்த வாய்தொறும் பொங்கின மீச்செல. 6.28.9
இராவணன் வாய்திறந்து அரற்றல்
'மைந்தவோ! 'எனும் : மாமகனே! 'எனும்;
'எந்தையோ! 'எனும் 'என் உயிரே! 'எனும்
'உந்தினேன் உனை யான் உளனே 'எனும்
வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான். 6.28.10
'புரந்தரன் பகை போயிற்று அன்றோ! 'எனும்;
'அரந்தை வானவர் ஆர்த்தனரோ! 'எனும்;
'கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும்;
நிரந்தரம் பகை நீங்கினரோ! 'எனும். 6.28.11
நீறு பூசியும் நேமி அம் கையனும்
மாறு குன்றொடு வேலை மறைந்துளார்
ஊறு நீங்கினராய் உவணத்தினோடு
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால். 6.28.12
'வான மானமும் வானவர் ஈட்டமும்
போன போன திசை இடம்புக்கன
தானம் ஆனவை சார்கில; சார்குவது
ஊன மானிடர் வென்றி கொண்டோ? 'எனும். 6.28.13
'கெட்ட தூதர் கிளத்தினர் பொய்; ஒரு
கட்ட மானிடன் கொல்ல என்காதலன்
பட்டு ஒழிந்தனனே? 'எனும்; பன்முறை
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால். 6.28.14
எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய்
விழும்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால்
உழும் நிலத்தை; உருளும்; புரளுமால். 6.28.15
இராவணனுடைய ஒவ்வொரு தலையும் சொல்வன
'அய்யனே! 'எனும் ஓர்தலை; 'யான் இனம்
செய்வெனே அரசு! 'என்னும் அங்கு ஓர்தலை;
'கய்யனேன். உனைக் காட்டிக் கொடுத்து நான்
உய்வெனே! 'என்ன உரைக்கும் அங்கு ஓர்தலை. 6.28.16
'எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவிக் கொள்ளலையோ 'எனும் ஓர்தலை;
'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே!
செழுவில் சேவகனே! 'எனும் ஓர்தலை. 6.28.17
'நீலம் காட்டிய கண்டனும் நேமியும்
ஏலும் காட்டின் எறிந்த படை எலாம்
தோலும் காட்டித் துரந்தனை மீண்டநின்
கோலம் காட்டிலையோ! 'எனும் ஓர் தலை. 6.28.18
'துஞ்சினாய்கொல்? துணைபிரிந்தேன் 'எனும்;
'வஞ்சமோ; ' எனும்; 'வாரலையோ! 'எனும்;
'நெஞ்சு நோவ நெடுந்தனியே கிடந்து
அஞ்சினேன்! 'என்று அரற்றும்; அங்கு ஓர்தலை. 6.28.19
'காகம் ஆடு களத்திடைக் காண்பெனோ
பாக சாதனன் மோலி பறித்திட
ஓகை மாதவர் உச்சியின் வைத்தநின்
வாகை நாள் மலர்? 'என்னும்; மற்று ஓர்தலை. 6.28.20
'சேல் இயல் கண் இயக்கர்தம் தேவிமார்
மேல் இனித் தவிர்கிற்பர்கொல் வீர! நின்
கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம்
தாலியைத் தொடல்? 'என்னும் மற்று ஓர்தலை. 6.28.21
'கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம் தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய்! 'என்று உரைக்கும் அங்கு ஓர்தலை. 6.28.22
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழிநாள்
பொன்னின் வான் அன்ன போர்க்களம் புக்கனன்.
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான். 6.28.23
தேவர் முதலிய சேவகர் பின் சென்று அஞ்சி இரங்குதல்
தேவரே முதலாகிய சேவகர்
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார்
'மூவகைப் பேர் உலகின் முறைமையும்
ஏவது ஆகும்? 'என்று எண்ணி இரங்குவார். 6.28.24
இராவணனைக் கண்ட பறவைகளும் பேய்களும் பட்ட பாடு
அழுதவால் சில; அன்பின போன்று அடி
தொழுதவால் சில; தூங்கினவால் சில;
உழுத ஆனைப் பிணம் புக்கு ஒளித்தவால்
கழுதும் புள்ளும் அரக்கனைக் காண்டலும். 6.28.25
இராவணன் பிணங்களைக் கிளறி மகனைத் தேடுதல்
கோடி கோடிக் குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும்
ஓடை யானையும் தேரும் உருட்டினான்
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம். 6.28.26
இராவணன் இந்திரசித்தின் கையினைக் காணுதல்
மெய் கிடந்த விழிவழி நீர் விழ
நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான்
மொய்கிடந்த சிலையொடு மூரிமாக்
கய்கிடந்தது கண்டனன் கண்களால். 6.28.27
இந்திரசித்தின் தோளை இராவணன் தலைமேற் கொள்ளுதல்
பொங்கு தோள்வளையும் கணைப்புட்டிலும்
அங்கதங்களும் அம்பும் இலங்கிட
வெம் கண் நாகம் எனப் பொலி வெய்ய கை
செங்கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான். 6.28.28
இராவணன் இந்திரசித்தின் கையோடு கவலுதல்
கல்திண் மார்பில் தழுவும்; கழுத்தினில்
சுற்றும்; சென்னியில் சூட்டும்; சுடர்க் கண்ணோடு
ஒற்றும்; மோக்கும்; உருகும்; உளைக்குமால்;
முற்றும் நாளில் விடும் நெடு மூச்சினான். 6.28.29
இந்திரசித்தின் உடம்பைக் கண்டு அதன் மேல் வீழ்ந்து அழுதல்
கய்கண்டான் பின் கருங்கடல் கண்டு அன
மெய்கண்டான் அதன்மேல் விழுந்தான் அரோ
பெய்கண் தாரை அருவிப் பெருந்திரை
மொய்கொண்டு ஆர்திரை வேலையை மூடவே. 6.28.30
இந்திரசித்தின் உடம்பைத் தழுவி யரற்றுதல்
அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன்
அப்பு மாரி அழுது இழி யாக்கையின்
அப்பும்; மாரில் அணைக்கும் அரற்றுமால்;
அப் புமான் உற்றது யாவர் உற்றார் அரோ! 6.28.31
அவன் மார்பில் தைத்துள்ள அம்புகளைப் பறித்து வெகுளல்
பறிக்கும் மார்பின் பகழியை; பல்முறை
முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்குமால்;
எறிக்கும் வெங்கதிரோடு உலகு ஏழையும்
கறிக்கும் வாயின் இட்டு இன்று எனக் காந்துவான். 6.28.32
இராவணனது பெருஞ் சீற்றத் தன்மை
'தேவரோடும் முனிவு அருஞ் சீரியோர்
ஏவரோடும் இயம்பிய மூர்த்திகள்
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும்
போவதே கொல் முனிவு? 'எனும்; பொம்மலான். 6.28.33
இந்திரசித்தின் தலையைக் காணாது இராவணன் அரற்றுதல்
கண்டிலன் தலை; 'காதிய மானிடன்
கொண்டு இறந்தனன் 'என்பது கொண்டவன்
புண் திறந்தன நெஞ்சன் பொருமலன்
விண் திறந்திட விம்மி அரற்றினான். 6.28.34
இராவணனது அரற்றல் (9357-9361)
'நிலையும் மாதிரத்து நின்ற யானையும், நெற்றிக் கண்ணான்
மலையுமே, எளியவோ, நான் பறித்தற்கு? மறு இல் மைந்தன்
தலையும் ஆருயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க,
புலையெனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்! 6.28.35
'எரி உண அளகை மூதூர், இந்திரன் இருக்கை எல்லாம்
பொரி உண; உலகம் மூன்றும் பொது அறப் புரந்தேன் போலாம்!
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை
நரி உணக் கண்டேன், ஊணின் நாயுணும் உணவு நன்றால். 6.28.36
'பூண்டு ஒரு பகைமேல் புக்கு, என் புத்திரனோடும் போனார்
மீண்டிலர் விளிந்து வீழ்ந்தார்; விரதியர் இருவரோடும்
ஆண்டு உள குரங்கும், ஒன்றும் அமர்க்களத்து, ஆரும் இன்னும்
மாண்டிலர்; இனிமற்று உண்டோ, இராவணன் வீர வாழ்க்கை. 6.28.37
'கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் கன்னிமார்கள்,
செந்து ஒக்கும் சொல்லினார், உன் தேவியர், திருவின் நல்லார்,
வந்து உற்று 'எம் கணவன்தன்னைக் காட்டு 'என்று, மருங்கில் வீழ்ந்தால்,
அந்து ஒக்க அரற்றவோ, நான் கூற்றையும் ஆடல் கொண்டேன். 6.28.38
'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வது ஆனேன்! என்னின் யார் உலகத்து உள்ளார். 6.28.39
இராவணன் இந்திரசித்தின் உடம்பினை யெடுத்துக்கொண்டு இலங்கைக்குள் புகுதல்
என்பன பலவும் பன்னி, எடுத்து அழைத்து இரங்கி, ஏங்கி,
அன்பினால் மகனைத் தாங்கி அரக்கியர் அரற்றி வீழ,
பொன்புனை நகரம் புக்கான்; கண்டவர் புலம்பும் பூசல்,
ஒன்பது திக்கும், மற்றை ஒருதிக்கும், உற்றது அன்றே. 6.28.40
துயர்பொறுக்காத அரக்கர்களின் செயல்கள்
கண்களைச் சூல்கின்றாரும், கழுத்தினைத் தடிகின்றாரும்,
புண்கொளத் திறந்து, மார்பின் ஈருளைப் போக்கு வாரும்,
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும்,
எண்களில் பெரியர் அந்த இருந்துயர் பொறுக்கலாதார். 6.28.41
அரக்கியர் கண்ணீர்
மாதிரம் கடந்த திண்தோள் மைந்தன் தன் மகுடச் சென்னி
போதலைப் புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுதக் கண்டார்,
ஓதநீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ளக்
காதல் நீர் ஓடி, ஆடல் கருங்கடல் மடுத்தது அன்றே. 6.28.42
இராவணன் அரண்மனைக்குள் புகுதல்
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வராய
தேவியர் குழாங்கள் சுற்றி, சிரத்தின்மேல் தளிர்க்கை சேர்த்தி,
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப, ஒல்லைக்
கோ இயல் கோயில் புக்கான், குருதிநீர்க் குமிழிக் கண்ணான். 6.28.43
மண்டோதரி கலங்கி வருதல்
கருங்குழல் கற்றைப் பாரம் கால்தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி,
'அருங்கலச் சும்மை தாங்க, அகல் அல்குல் அன்றி, சற்றே
மருங்குலும் உண்டு உண்டு 'என்ன, மயன் மகள் மறுகி வந்தாள். 6.28.44
மண்டோதரி மகன்மேல் வீழ்தல்
தலையின்மேல் சுமந்த கையள். தழலின்மேல் மிதிக்கின்றாள்போல்
நிலையின்மேல் பதைக்கும் தாளள், ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள,
மலையின்மேல் மயில் வீழ்ந்து என்ன, மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள். 6.28.45
மண்டோதரியின் துன்பநிலை
உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; 'உயிர் இலள் கொல்லோ 'என்னப்
பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; பில்கி யாதும்
வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல மெல்ல,
அயர்த்திலள் அரிதின் தேறி, வாய்திறந்து, அரற்றல் உற்றாள். 6.28.46
மண்டோதரி இந்திரசித்தினை விளித்துப் புலம்புதல் (9369-9375)
'கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத்தே உன்,
சிலையினால் அரியை வெல்லக் காண்பதோர் தவம்முன் செய்தேன்;
தலை இலா ஆக்கை காண எத் தவம் செய்தேன்! அந்தோ! '
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவெனோ, நினைவு இலாதேன்? 6.28.47
'அய்யனே! அழகனே! என் அரும்பெறல் அமிழ்தே! ஆழிக்
கய்யனே, மழுவனே, என்று அவர் வலி கடந்த கால
மொய்யனே! முளரி அன்ன நின்முகம் கண்டிலாதேன்,
உய்வெனே? உலகம் மூன்றுக்கு ஒருவனே! செருவலோனே! 6.28.48
'தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் தன்னில்,
கோள் அரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; கொணர்ந்து, கோபம்
மூளுறப் பொருத்தி, மாட முன்றிலின் முறையின் ஓடி
மீளுற விளையாட்டு இன்னும் காண்பெனோ, விதியிலாதேன்! 6.28.49
'அம்புலி! அம்ம வா! 'என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள்
இம்பர் வந்தானை 'அஞ்சல் ' என இருகரத்தின் ஏந்தி
வம்பு உறும் மறுவைப் பற்றி முயல் என வாங்கும் வண்ணம்
எம் பெருங்களிறே! காண வேசற்றேன்; எழுந்திராயோ! 6.28.50
'இயக்கியர் அரக்கி மார்கள் விஞ்சையர், ஏழை மாதர்
முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர், முழுதும் நின்னை
மயக்கிய முயக்கம் தன்னால், மலர் அணை அமளி மீதே
அயர்த்தனை உறங்குவாயோ? அமர் பொருது அலசினாயோ? 6.28.51
'முக்கணான் முதலினோரை, உலகு ஒரு மூன்றினோடும்,
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம்,
மக்களில் ஒருவன் கொல்ல, மாள்பவன்? மான மேரு
உக்கிட, அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா! 6.28.52
'பஞ்சு எரி, உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் கொல்ல, விளிந்ததே மீண்டது இல்லை;
அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று அமிழ்தால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ? ' 6.28.53
இராவணன் சீதையை வாளால் வெட்ட விரைதல்
என்று அழைத்து இரங்கி ஏங்க, 'இத்துயர் நமர்கட்கு எல்லாம்
பொன் தழைத்து அனைய அல்குல் சீதையால் புகுந்தது 'என்ன
'வன்தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால்
கொன்று இழைத்திடுவென் 'என்னா, ஓடினன், அரக்கர் கோமான். 6.28.54
இராவணனை மகோதரன் தடுத்தல்
ஓடுகின்றானை நோக்கி 'உயர்பெரும் பழியை உச்சிச்
சூடுகின்றான் 'என்று அஞ்சி, மகோதரன், துணிந்த நெஞ்சன்,
மாடு சென்று, அடியின் வீழ்ந்து, வணங்கி, 'நின் புகழ்க்கு மன்னா
கேடு வந்து அடுத்தது 'என்னா, இனையன கிளத்தலுற்றான். 6.28.55
மகோதரன் சொன்னது (9378-9382)
'நீர் உளதனையும், சூழ்ந்த நெருப்பு உள தனையும், நீண்ட
பார் உளதனையும், வானப் பரப்பு உளதனையும், காலின்
பேர் உளதனையும், பேராப் பெரும்பழி பிடித்தி போலாம்
போர் உளதனையும் வென்று, புழ்க உளதனையும் உள்ளாய். 6.28.56
'தெள்ளருங் கால கேயர் சிரத்தொடும், திசைக்கை யானை
வெள்ளிய மருப்புச் சிந்த வீசிய விசயத்து ஒள்வாள்,
வள்ளி அம்மருங்குல், செவ்வாய், மாதர்மேல் வைத்தபோது
கொள்ளுமே ஆவி தானே, நாணத்தால் குறைவது அல்லால்? 6.28.57
'மங்கையை குலத்து உளாளை, தவத்தியை, முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றால். 'குலத்துக்கே தக்கான் ', என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத் தோனும்,
செங்கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால் 'சிறியன் 'என்னா. 6.28.58
'நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று; நீதி அன்று;
தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல் அதுவும் அன்று;
புலத்தியன் மரபின் வந்து, புண்ணிய விரதம் பூண்டாய்!
வலத்து இயல்பு அன்று; மாயாப் பழிகொள மறுகு வாயோ? 6.28.59
'இன்று நீ இவளை வாளால் எறிந்து போய், இராமன் தன்னை
வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ
பொன்றினள் சீதை என்றே? 'புரவல! புதல்வன் தன்னைக்
கொன்றவர் தம்மைக் கொல்லக் கூசினை போலும் 'என்றான். 6.28.60
மகோதரன் சொல்லைக் கேட்டு இராவணன் வாளினைத் தரையிலிட்டு வஞ்சினங் கூறுதல்
என்னலும் எடுத்த கூர்வாள் இருநிலத்து இட்டு, மீண்டு
மன்னவன் 'மைந்தன் தன்னை மாற்றலர் வலியிற் கொண்ட
சின்னமும், அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு அன்றிச் சேரேன்;
தொல் நெறித் தயிலத் தோணி வளர்த்துமின் 'என்னச் சொன்னான். 6.28.61
----------
6.29 படைக்காட்சிப் படலம் 9385 – 9436 (52)
அத்தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, அனைத்துத் திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்,
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், 'இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அமைந்த தானைக்கு இடம் இலை; பணி என்? என்றார். 6.29.1
எங்கு எய்தியது? என்ற இராவணனுக்குத் தூதுவர் கூறுதல்
ஏம்பல் உற்று எழுந்த மன்னன் 'எவ்வழி எய்திற்று 'என்றான்;
கூம்பல் உற்று உயர்ந்த கையர், ஒருவழி கூறலாமோ?
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னாத்
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் தான் இல் என்றார். 6.29.2
அரக்கர் சேனை இலங்கையை எய்துதல்
மண் உற நடந்த தானை வளர்ந்த மாத் தூளி மண்ட,
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக ஏக,
கண்ணுறல் அரிது காண் அக் கற்பத்தின் முடிவில் கார்போல்
எண்ணுற அரிய சேனை எய்தியது, இலங்கை நோக்கி. 6.29.3
வாள்தனில் வயங்க மின்னா; மழை அதின் இருள மாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை, இடியது முழங்க மாட்டா;
மீட்டு இனி உரைப்பது என்னே? வேலைமீச் சென்றது என்னத்
தீட்டிய படையும், மாவும், யானையும், தேரும், செல்ல. 6.29.4
உலகினுக்கு உலகு போய்ப் போய், ஒன்றின் ஒன்று ஒதுங்கல் உற்ற,
தொலைவு அருந்தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற,
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின; நிமிர்ந்து நின்றான்,
அலரியும், முந்து செல்லும் ஆறுநீத்து, அஞ்சி, அப்பால். 6.29.5
மேற்படர் விசும்பை முட்டி, மேருவின் விளங்கி, நீண்ட
நால் பெரு வாயில் ஊடும் இலங்கை ஊர் நடக்கும் தானை;
கார்ப்பெருங் கடலை, மற்றோர் இடத்தினில் காலன் தானே
சேர்ப்பது போன்றது, யாண்டும் சுமைபொறாது உலகம் என்ன. 6.29.6
'நெருக்கு உடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம்
இருக்கும் அத்துணையே 'என்னா, மதிலினுக்கு உம்பர் எய்தி,
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள
கருக்கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன. 6.29.7
இராவணன் வந்த சேனையைக் கோபுரத்திலிருந்து காணுதல்
அதுபொழுது, அரக்கர்கோனும், அணிகொள் கோபுரத்தின் எய்தி,
பொது உற நோக்கலுற்றான், ஒருநெறி போகப் போக,
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான், வேலை ஏழும்
கதும் என ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான். 6.29.8
தூதுவர் இராவணனுக்குப் படையினரை வகுத்துக் காட்டுதல்
மாதிரம் ஒன்றின் நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி
ஓதநீர் செல்வது அன்ன 'தானையை உணர்வு கூடா,
வேத வேதாந்தம் கூறும், பொருளினை விரிக்கின்றார் போல்
தூதுவர் அணிகள் தோறும் வரன்முறை காட்டிச் சொன்னார். 6.29.9
சாகத்தீவினர்
'சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்த
யாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம்
மோகத்தின்பட முடித்தவர், மாயையின் முதல்வர்,
மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர் 'என விரித்தார். 6.29.10
குசைத்தீவினர் இயல்பு
'குசையின் தீவினில் உறைபவர், கூற்றுக்கும் விதிக்கும்
வசையும் வன்மையும் வளர்ப்பவர், வானநாட்டு உறைவோர்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது; இங்கு, இவரால்,
விசையம் தாம் என நிற்பவர், இவர் நெடு விறலோய்! 6.29.11
இலவத் தீவினர் இயல்பு
'இலவத் தீவினில் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப்
புலவர்க்கு இந்திரன் பொன் நகர் அழிதரப் பொருதார்;
நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம்தர, நிமிர்ந்தார்;
உலவைக் காட்டு உறு தீ என வெகுளி பெற்று உடையார். 6.29.12
அன்றில் தீவினர் இயல்பு
'அன்றில் தீவினில் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக்
குன்றைக் கொண்டு போய்க் குரைகடல் இட, அறக்குலைந்தோர்
சென்று, 'இத்தன்மையைத் தவிரும் 'என்று இரந்திடத் தீர்ந்தோர். 6.29.13
பவளக் குன்றினர்
பவளக் குன்றினில் உறைபவர்; வெள்ளி பண்பு அழிந்து, ஓர்
குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக் கன்னியைக் கூட,
அவளில் தோன்றினர், ஐ இரு கோடியர்; நொய்தின்
திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர், சிலநாள். 6.29.14
கந்தமாதனத்தோர்
'கந்த மாதனம் என்பது, இக் கருங் கடற்கு அப்பால்
மந்த மாருதம் ஊர்வது ஓர்கிரி; அதில் வாழ்வோர்,
அந்த காலத்து அவ் ஆலகாலத்துடன் பிறந்தோர்;
இந்த வாள் எயிற்று அரக்கர் எண்ணிறந்தவர் இறைவ! 6.29.15
மலையத்து மறவோர்
'மலையம் என்பது பொதிய மாமலை : அதில் மறவோர்
நிலையம் அன்னது சாகரத் தீவு இடை நிற்கும்;
"குலையும் இவ் உலகு " எனக் கொண்டு, நான்முகன்கூறி,
"உலைவிலீர்! இதில் உறையும் " என்று இரந்திட, உறைந்தார். 6.29.16
புட்கரத் தீவினர்
முக்கரக் கையர், மூஇலை வேலினர்; முசுண்டி
சக்கரத்தினர், சாபத்தால் இந்நின்ற தலைவர்,
நக்கரக் கடல் நாலொடு மூன்றுக்கும் நாதர்;
புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் புகழோய்! 6.29.17
இறலித் தீவினர்
'மறலியை, பண்டு தம் பெருந்தாய் சொல, வலியால்,
புறநிலைப் பெருஞ் சக்கர மால்வரைப் பொருப்பின்,
விறல் கெடச் சிறையிட்டு, அயன் இரந்திட, விட்டோர்;
இறலி அப் பெருந்தீவிடை உறைபவர் இவர்கள். 6.29.18
பாதாளத்தர்
வேதாளக் கரத்து இவர், "பண்டு புவியிடம் விரிவு
போதாது உம்தமக்கு, எழுவகையாய் நின்ற புவனம்,
பாதாளத்து உறைவீர் '' என, நான்முகன் பணிப்ப,
நாதா! புக்கு இருந்து, உனக்கு அன்பினால் இவண் நடந்தார். 6.29.19
நிருதி குலத்தினர்
'நிருதிதன் குலப் புதல்வர்; நின் குலத்துக்கு நேர்வர்;
"பருதி தேவர்கட்கு " எனத்தக்க பண்பினர்; யானைக்
குருதி பெற்றிலரேல், கடல் ஏழையும் குடிப்பார்;
இருள் நிறத்து இவர், ஒருத்தர் ஏழ்மலையையும் எடுப்பார். 6.29.20
பூமிதேவிக்குப் பிறந்தவர்
'பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தின், அனாதியின் பயந்த பைங்கழலோர்;
பூரணத்தடந் திசைதொறும் இந்திரன் பொருவு இல்
வாரணத்தினை நிறுத்தியது, இவர்வரவு அஞ்சி. 6.29.21
பாதலத்தின் அடிப்பகுதியில் வாழ்பவர்
மறக்கண் வெஞ்சின மலை என இந்நின்ற வயவர்,
இறக்கம் கீழ் இலாப் பாதலம் அத்து உறைகின்ற இகலோர்;
அறக்கண் துஞ்சிலன், ஆயிரம் பணம் தலை அனந்தன்,
உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க. 6.29.22
காளியின் சினத் தீயில் பிறந்தவர்
'காளியைப் பண்டு கண்ணுதல் காட்டிய காலை,
மூள முற்றிய சினக் கடுந் தீயிடை முளைத்தோர்;
கூளிகட்கு நல் உடன் பிறந்தார்; பெருங் குழுவாய்
வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும், வருவார். 6.29.23
பாவத்தோடு பிறந்தவர்கள்
'பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்;
தீவம் தோன்றிய முழைத் துணை என தறெு கண்ணர்;
கோவம் தோன்றிடின், தாயையும் உயிர் உணும் கொடியோர்;
சாவம் தோன்றிட, வட திசை மேல் வந்து சார்வார். 6.29.24
சிவனது நெற்றிக் கண்ணில் பிறந்தவர்
'சீற்றம் ஆகிய ஐம்முகன், உலகு எலாம் தீப்பான்
ஏற்ற மா நுதல் விழியிடைத் தோன்றினர், இவரால்;
கூற்றம் ஆகிப் பண்டு உதித்து உளர் எனக் கொடுந் தொழிலால்
தோற்றினார் இவர் வலி எலாம் தொலைவுறத் தொலைப்பார். 6.29.25
எமன் குருதியில் பிறந்தவரும் ஆலகாலத்தில் பிறந்தவரும்
காலன் மார்பிடைச் சிவன்கழல் பட, பண்டு, கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர்,
சூலம் ஏந்தி முன் நின்றவர்; இந்நின்ற தொகையார்,
ஆல காலத்தின், அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர். 6.29.26
வடவைத் தீயிலும் முப்புறத் தீயிலும் தோன்றியவர்கள்
'வடவைத் தீயிடை வாசுகி கான்ற மாக் கடுவை
இட, அத்தீ இடை எழுந்தவர் இவர்; இவர், மழையைத்
தடவித் தீநிமிர் குஞ்சியர் சங்கரன் தடந்தேர்
கடவத் தீந்த வெம் புரத்து இடைத் தோன்றிய கழலோர். 6.29.27
படையினர் பெருமை (9411-9412)
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய!
நினையவும், குறித்து உரைக்கவும்; அரிது; இவர் நிறைந்த
வினையமும் பெருவரங்களும் தவங்களும் விளம்பின்,
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா. 6.29.28
'ஒருவரே சென்று, அவ் உறுதிறல் குரங்கையும், உரவோர்
இருவர் என்றவர் தம்மையும், ஒருகையோடு எற்றி,
வருவர்; மற்று இனிப் பகர்வது என்? வானவர்க்கு அரிய
திருவ என்றனர் தூதுவர் : இராவணன் செப்பும். 6.29.29
இராவணன் வினாவும் தூதுவர் விடையும்
'எத் துணைத்து இதற்கு எண் எனத் தொகை வகுத்து, இயன்ற
அத்திறத்தினை அறைதிர் 'என்று உரை செய; அவர்கள்
'ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது 'என உரைத்தார்,
பித்தர்; இப் படைக்கு எண் சிறிது ' என்றனர், பெயர்ந்தார். 6.29.30
இராவணன், படைத்தலைவரைக் கொணர்க எனல்
'படைப் பெருங் குலத் தலைவரைக் கொணருதிர், என்பால்
கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி
அடைத்த நல் உரை விளம்பினன் அளவளாய், அமைவு உற்று,
உடைத்த பூசனை வரன் முறை இயற்ற 'என்று உரைத்தான். 6.29.31
படைத் தலைவரின் வினாவும் இராவணன் விளக்கமும்
தூதர் கூறிட, திசைதொறும் திசைதொறும் தொடர்ந்தார்,
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்;
போது தூவினர், வணங்கினர், இராவணன் பொலன் தாள்
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட. 6.29.32
வணங்கிய தலைவர்களை இராவணன் உசாவுதல்
அனையர் யாவரும் அருகுசென்று, அடிமுறை வணங்கி,
வினையம் மேவினர், இனிதின் அங்கு இருந்தது ஓர் வேலை,
'நினையும் நல்வரவு ஆக, நும் வரவு! 'என நிரம்பி,
'மனையும் மக்களும் வலியரே? ' என்றனன், மறவோன். 6.29.33
'பெரிய திண்புயன் நீ உளை; தவ வரம் பெரிதால்;
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ?
இரியல் தேவரைக் கண்டனம்; பகை பிறிது இல்லை;
அரியது என் எமக்கு? என்றனர், அவன் கருத்து அறிவார். 6.29.34
படைத் தலைவரின் வினாவும் இராவணன் விளக்கமும்
'மாதரார்களும் மைந்தரும் நின்மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்;
யாது காரணம்? அருள் 'என அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் பிறந்துள பரிசு எலாம் தெரித்தான். 6.29.35
படைத்தலைவர் வியந்து சிரித்தல் (9419-9420)
'கும்ப கன்னனொடு இந்திரசித்தையும், குலத்தின்
வெம்பு வெஞ்சினத்து அரக்கர்தம் குழுவையும், வென்றார்
அம்பினால், சிறுமனிதரே! நன்று, நம் ஆற்றல்!
நம்பு! சேனையும் வானரமே! ' என நக்கார். 6.29.36
உலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரோடும் வாங்க அன்று, அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக்குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை? ' 6.29.37
எள்ளிச் சிரித்தவரை விலக்கி வன்னி என்னும் மன்னன் அம்மனிதர் யார்? அவர் வலிமை யாது? என வினவுதல்
என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு,
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி,
வன்னி என்பவன், புட்கரத் தீவுக்கு மன்னன்,
அன்ன மானுடர் ஆர்? வலி யாது? என்று அறைந்தான். 6.29.38
மாலியவான் அம்மனிதரின் வலிமையைச் சொல்லுதல
மற்று அ(வ்)வாசகம் கேட்டலும், மாலியவான் வந்து,
'உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும், உடன் ஆம்
கொற்ற வானரத் தலைவர்தம் தகைமையும், கூறக்
கிற்றும், கேட்டிரால் 'என்று அவன் கிளத்துவான் கிளர்ந்தான். 6.29.39
வாலியை யழித்தது
'ஆழி அன்னநீர் அறிதிர் அன்றே, கடல் அனைத்தும்
ஊழிக் கால் எனக் கடப்பவன் வாலி என்போனை?
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இந்நாள்
பாழி மார்பகம் பிளந்து உயிர் குடித்தது, ஓர் பகழி. 6.29.40
விராதன் முதலியோரைத் தொலைத்தது
'பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்;
கரிய மால்வரை நிகர் கரதூடணர், கதிர்வேல்
திரிசிரா, அவர் திரை கடல் அன பெருஞ்சேனை,
ஒரு விலால், ஒருநாழிகைப் பொழுதினின் உலந்தார். 6.29.41
படைத் தலைவரை வினவியது
'இங்கு வந்து நீர் வினாயது என்? எறிதிரைப் பரவை
அங்கு வெந்திலதோ? சிறிது அறிந்ததும் இலிரோ?
கங்கை சூடிதன் கடுஞ்சிலை ஒடித்த அக் காலம்,
உங்கள் வான் செவி புகுந்திலதோ, முழங்கு ஓதை? 6.29.42
இலங்கையின் ஆயிரவெள்ளச் சேனையும் அழித்தமை விளம்பல் (9426-9428)
'ஆயிரம் பெருவெள்ளம் உண்டு, இலங்கையின் அளவில்,
தீயின் வெய்யபோர் அரக்கர்தம் சேனை; அச்சேனை
போயது, அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம்.
ஏயும் மும்மைநூல் மார்பினர் எய்த வில் இரண்டால். 6.29.43
'கொற்ற வெஞ்சிலைக் கும்பகன்னனும், நுங்கள் கோமான்
பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும்,
மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்;
இற்றை நாள்வரை, யானும் மற்று இவனுமே இருந்தேம். 6.29.44
மூலத் தானை என்று உண்டு; அது மும்மைநூறு அமைந்த
கூலச்சேனை இவ் வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த
காலச் செய்கையான் நீர் வந்திராயின் அக்கழலோர்
சீலச் சேனையின் செய்வினைச் செய்கையும் தெரிவீர். 6.29.45
அனுமனின் சிறப்பு (9429-9430)
ஒருகுரங்கு வந்து இலங்கையை மலங்கு எரி ஊட்டி,
திருகு வெஞ்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது உரைத்து, ஏகியது, அரக்கியர் புலம்ப,
கருகு சேனைமாக் கடலையும்; கடலையும் கடந்து. 6.29.46
கண்டிலீர் கொலாம், கடலினை மலைகொண்டு கட்டி,
மண்டு போர்செய, வானரர் இயற்றிய மார்க்கம்?
உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது, மேருவிற்கு அப்புறம் குதித்தே. 6.29.47
'இது இயற்கை; ஓர்சீதை என்று இருந் தவத்து இயைந்தாள்
பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால்,
விதி விளைத்தது அவ் வில்லியர் வெல்க! நீர் வெல்க!
முதுமொழிப் பதம் சொல்லின் என் ' என்று உரை முடித்தான். 6.29.48
வன்னியின் வினாவிற்கு இராவணன் புன்மை நோக்கிக் குரங்கொடு பொருதிலேன் எனல்
வன்னி, மன்னனை நோக்கி, 'நீ இவர் எலாம் மடிய,
என்ன காரணம், இகல் செயாது இருந்தது? 'என்று இசைத்தான்;
'புன்மை நோக்கி நான் நாணினன் பொருதிலன் 'என்றான்!
'அன்னதேல், இனி அமையும் எம் கடன் அஃது 'என்றான். 6.29.49
வன்னி மாலியவான் கருத்துப்படி செய்தற்கு இது காலம் அன்று எனல்
'மூது உணர்ந்த இம் முதுமகன் கூறிய முயற்சி
சீதை என்பவள்தனை விட்டு, அம் மனிதரைச் சேர்தல்;
ஆதியின் தலை செயத்தக்கது; இனிச் செய்வது இழிவால்,
காதல் இந்திர சித்தையும் மாய்வித்தல் கண்டும். 6.29.50
இனிச் செய்யத் தக்கது போரே எனல்
'விட்டம் ஆயினும் மாதினை, வெஞ்சமம் விரும்பிப்
பட்ட வீரரைப் பெறுகிலம்; பெறுவது பழியால்;
முட்ட மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்,
கட்டம், அத் தொழில்; செருத் தொழில் இனிச் செயும் கடமை. 6.29.51
வென்று மீளுவம் என வஞ்சினம் கூறிச் செல்லுதல்
'என்று, எழுந்தனர் இராக்கதர், ' இருக்க நீ; யாமே
சென்று, மற்றவர் சில்லுடல் குருதி நீர் தேக்கி,
வென்று மீளுதும்; வெள்குதுமேல், மிடல் இல்லாப்
புன் தொழில் குலம் ஆதும் 'என்று உரைத்தனர் போனார். 6.29.52
---------------
6.30 மூலபல வதைப் படலம் 9437 – 9672 (236)
'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு வழி சென்று,
ஊன் அறக்குறைத்து உயிர் உண்பன்; நீயிர் போய் ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக் கோறிர் 'என்று அறைந்தான்
தானவப் பெருங் கிரிகளை வாள்கொண்டு தடிந்தான் 6.30.1
என உரைத்தலும், எழுந்து, தம் ஊர்திமேல் ஏறி,
கனை கடல் பெருஞ் சேனையைக் கலந்தது காணா,
'வினையம் மற்று இலை; மூல மாத் தானையை விரைவோடு
இனையர்முன் செல, ஏவுக 'என்று இராவணன் இசைத்தான். 6.30.2
இராவணனும் தன் தேர்மேலேறி இராமன் சேனையைக் தாக்க ஒருபுறம் செல்லுதல்
ஏவி அப்பெருஞ் சேனையை, தானும் வேட்டு எழுந்தான்,
தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லி அம் தேர்மேல்,
காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க,
பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒருபுறம் போனான். 6.30.3
போருக்கு எழுந்த மூலபலச் சேனையின் இயல்பு
'எழுக, சேனை " என்று, யானைமேல் அணிமுரசு எற்றி,
வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், வல்லைக்
குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும்
தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் மாத் தானை. 6.30.4
அடங்கும் வேலைகள், அண்டத்தின் அகத்து அகல் மலையும்
அடங்கும், மன் உயிர் அனைத்தும் அவ் வரைப்பிடை அவைபோல்
அடங்குமே, மற்று அப் பெரும்படை அரக்கர்தம் யாக்கை,
அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால்? 6.30.5
போருக்கு எழுந்தமூலபலச் சேனை வீரர்களின் இயல்பு
அறத்தைத் தின்று, அருங்கருணையைப் பருகி, வேறு அமைந்த
மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை மணம்புணர் மணாளர்,
நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர், நெருப்புக்கு நெருப்பாப்
புறத்துப் பொங்கிய பங்கியர், காலனும் புகழ்வார். 6.30.6
நீண்ட தாள்களால் வேலையைப் புறம்செல நீக்கி;
வேண்டும் மீனொடு மகரங்கள் வாய் இட்டு விழுங்கி,
தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி,
மூண்ட வான்மழை உரித்து உடுத்து, உலாவரும் மூர்க்கர். 6.30.7
மால் வரைக்குலம் பரல் என, மழைக் குலம் சிலம்பா,
சால் வரைப் பெரும்பாம்பு கொண்டு அசைத்த பைங் கழலார்;
மேல் வரைப் படர் கலுழன் வன்காற்று எனும் விசையோர்;
நால் வரைக் கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார். 6.30.8
உண்ணும் தன்மைய ஊன்முறை தப்பிடின் உடனே
மண்ணின் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்;
தண்ணின் நீர்முறை தப்பிடின், தடக்கையால் தடவி,
விண்ணின் மேகத்தை வாரி வாய்ப் பிழிந்திடும் விடாயர். 6.30.9
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ
எறிந்து, வேல்நிலை காண்பவர்; இந்துவால் யாக்கை
சொறிந்து, தீர்வு உறு தினவினர்; மலைகளைச் சுற்றி
அறைந்து, கற்ற மாத்தண்டினர்; அசனியின் ஆர்ப்பார். 6.30.10
சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள்
கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின்,
சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின்,
காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார். 6.30.11
ஒருவரே வல்லர், ஓர் உலகத்தினை வெல்ல;
இருவர் வேண்டுவர், ஏழ் உலகத்தையும் இறுக்க;
திரிவரேல், உடன் திரிதரும் நெடுநிலம்; செவ்வே
வருவரேல், உடன்கடல்களும் தொடர்ந்து, பின் வருமால். 6.30.12
நால்வகைச் சேனைகளின் மிகுதி
மேகம் எத்தனை, அத்தனை மால்கரி; விரிந்த
நாகம் எத்தனை, அத்தனை தேர்; நனி நாளாப்
போகம் முற்றின எத்தனை, அத்தனை புரவி;
ஆகம் உற்றன எத்தனை, அத்தனை அனிகம். 6.30.13
சேனைகளின் அணி நலம்
இன்ன தன்மைய யானை, தேர், இவுளி, என்று இவற்றின்
பன்னு பல்லணம், பருமம், மற்று உறுப்பொடு பலவும்,
பொன்னும் நல்நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த
சின்னம் உள்ளன இல்லன, மெய்ம் முற்றும் தெரிந்தால். 6.30.14
சேனைகள் எழுப்பிய தூளியும் யானையின் மதநீரும்
இப் பெரும்படை எழுந்து இரைத்து ஏக, மேல் எழுந்த
துப்பு உதிர்த்து அன்ன தூளியின் படலம் மீத் தூர்ப்ப,
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது; கரிமதம் தழுவ
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு அலை உவரி. 6.30.15
சேனைகள் புறப்பட்ட இலங்கை நகர வாயில்களின் தோற்றம்
மலையும், வேலையும், மற்று உள பொருள்களும், வானோர்
நிலையும், அப்புறத்து உலகங்கள் யாவையும், நிரம்ப
உலைவு உறா வகை உண்டு, பண்டு உமிழ்ந்த பேர் ஒருமைத்
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ. 6.30.16
மூல சேனைகளைக் கண்டு வானரம் இரிந்தோடுதல்
கடம் பொறா மதக்களிறு, தேர், பரி, மிடை காலாள்
படம் பொறாமையின் நனந்தலை அனந்தனும் பதைத்தான்;
விடம் பொறாது இரி அமரர்போல் குரங்கு இனம் மிதிக்கும்
இடம் பொறாமையின் இரிந்து போய், வடதிசை இறுத்த. 6.30.17
கவிக் கூற்று
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த
ஏழு வேலையும், இடு வலை; அரக்கரே, இன மா
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே, மள்ளர்;
தோழம், மாமதில் இலங்கை; மால் வேட்டம் மேல் தொடர்ந்தான். 6.30.18
சேனைகளின் பேராரவாரம்
ஆர்த்த ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ?
கார்த் திண் மால் கரி முழக்கமோ? வாசியின் கலிப்போ?
போர்த்த பல் இயத்து அரவமோ? நெருக்கினாற் புழுங்கி
வேர்த்த அண்டத்தை வெடித்திடப் பொடித்தது, மேன்மேல். 6.30.19
சேனைக் கடலின் தோற்றம்
வழங்கு பல்படை மீனது; மதகரி மகரம்
முழங்குகின்றது; முரி திரைப் பரியது; முரசம்
தழங்கு பேர் ஒலி கலிப்பது; தறுகண் மா நிருதப்
புழுங்கு வெஞ்சினச் சுறவது நிறை படைப் புணரி. 6.30.20
அரக்கர் சேனை விசும்பினும் பரவுதல்
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்தம் தானை
பசும் புல் தண் தலம் மிதித்தலின், கரிபடு மதத்தின்
அசும்பின் சேறுபட்டு, அளறுபட்டு அமிழுமால், அடங்க;
விசும்பின் சேறலின் கிடந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 6.30.21
அரக்கர் சேனையைப் பார்த்து அஞ்சிய வானவர்கள், சிவபெருமானை இறைஞ்சுதலும் இறைவன் அவர்களது அச்சத்தைப் போக்குதலும்
படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர்வான்
முடியைப் பார்த்தனர்; பார்த்தனர்; நெடுந் திசை முழுதும்;
விடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்; மிடைந்த
பொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் குலைந்தார். 6.30.22
'உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா,
அலகு இல் பல்படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? அன்றேல்
விலகு இல் நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால்
புலைகொள் வல் உரு பொடித்தனவோ? ' எனப் புகன்றார். 6.30.23
நடுங்கி, நஞ்சு அடை கண்டனை, வானவர் 'நம்ப!
ஒடுங்கி யாம் கரந்து உறைவு இடம் அறிகிலம்; உயிரைப்
பிடுங்கி உண்குவர்; யார், இவர் பெருமைபண்டு அறிந்தார்?
முடிந்தது, எம் வலி 'என்றனர், ஓடுவான் முயல்வார். 6.30.24
'ஒருவரைக் கொல்ல, ஆயிரம் இராமர் வந்து, ஒருங்கே
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர்செய்தால், எனாம்?
நிருதரைக் கொல்வது, இடம்பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ?
பொருவது, இப்படை கண்டு, தம் உயிர் பொறுத்து அன்றோ? ' 6.30.25
என்று இறைஞ்சலும், இருள் மிடறு இறைவனும் 'இனி, நீர்
ஒன்றும் அஞ்சலீர்; வஞ்சனை அரக்கரை ஒருங்கே
கொன்று நீக்கும், அக் கொற்றவன்; இக்குலம் எல்லாம்
பொன்றுவிப்பது ஓர் விதி தந்தது ஆம் 'எனப் புகன்றான். 6.30.26
மூலபலப் படையைக் கண்டு வானரங்கள் அஞ்சி ஓடுதல்
புற்றின் நின்று வல் அரவு இனம் புறப்பட, பொருமி,
'இற்றது, எம்வலி 'என விரைந்து இரிதரும் எலிபோல்,
மற்று அ(வ்) வானரப் பெரும் கடல் பயம் கொண்டு மறுகி,
கொற்ற வீரரைப் பார்த்திலது; இரிந்தது, குலைவால். 6.30.27
அணையின்மேல் சென்ற, சிலசில; ஆழியை நீந்தப்
புணைகள் தேடின, சில; சில நீந்தின போன;
துணைகேளாடு புக்கு, அழுந்தின சில; சில தோன்றாப்
பணைகள் ஏறின; மலைமுழை புக்கன, பலவால். 6.30.28
ஓடிய வானரங்களின் அச்சச் சொல்
'அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர்; அடைய
உடைத்துப் போதுமால், அவர் தொடராமல் 'என்று, உரைத்த;
'புடைத்துச் செல்குவர் விசும்பினும் ' என்றன; போதோன்
படைத்த திக்கு எலாம் பரந்தனர் ' என்றன, பயத்தால். 6.30.29
சுக்கிரீவன், அனுமன், அங்கதன் ஆகியவர்கள் மட்டும் தன்னைப் பிரியாதுடனிருக்க, ஏனைய வானர வீரர்கள் நிலைகெட்டோடினமையை இராமன் நோக்குதல்
அரியின் வேந்தனும், அனுமனும், அங்கதன் அவனும்,
பிரியகிற்றிலர் இறைவனை, நின்றனர் பின்றார்;
இரியல் உற்றனர் மற்றையோர் யாவரும், எறிநீர்
விரியும் வேலையைக் கடந்தனர்; நோக்கினன், வீரன். 6.30.30
இப் பெரும்படை எங்கிருந்து வந்துளது? சொல்லுக 'என இராமன் கேட்க, வீடணன் மூலமாத் தானையைப்பற்றி எடுத்துரைத்தல்
'இக் கொடும் படை எங்கு உளது? இயம்புதி 'என்றான் :
மெய்க் கடுந் திறல் வீடணன் விளம்புவான் : 'வீர!
திக்கு அனைத்தினும், ஏழு மாத்தீவினும், தீயோர்
புக்கு அழைத்திடப் புகுந்துளது, இராக்கதப் புணரி. 6.30.31
'ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின் நின்று ஏறி
ஊழி முற்றிய கடல் எனப் புகுந்ததும் உளதால்;
வாழி மற்று அவன் மூல மாத் தானை முன் வருவ;
ஆழி வேறு இனி அப்புறத்து இல்லை, வாள் அரக்கர். 6.30.32
'ஈண்டு இவ் அண்டத்துள் இராக்கதர் எனும் பெயர் எல்லாம்
மூண்டு வந்தது, தீ வினை முன்னின்று முடுக;
மாண்டு வீழும் இன்று என்கின்றது என்மதி; வலி ஊழ்
தூண்டுகின்றது 'என்று அடிமலர் தொழுது, அவன் சொன்னான். 6.30.33
அஞ்சியோடிய வானர சேனையை அழைத்து வருமாறு அங்கதனை இராமன் ஏவுதல்
கேட்ட அண்ணலும், முறுவலும் சீற்றமும் கிளர,
'காட்டுகின்றனன் என்; காணுதி ஒரு கணத்து 'என்னா,
'ஓட்டின் மேற்கொண்ட தானையைப் பயம் துடைத்து, உரவோய்!
மீட்டிகொல்? 'என, அங்கதன் ஓடினன் விரைந்தான். 6.30.34
அங்கதன் சென்று அழைக்கப் படைத்தலைவர் மட்டும் நின்று தாம் அஞ்சியோடியதற்குரிய காரணங் கூறுதல்
சென்று தானையை உற்றனன், 'சிறை சிறை கெடுவீர்!
நின்று கேட்டபின் நீங்குமின் ' எனச் சொல்லி நேர்வான்;
'ஒன்றும் கேட்கிலம் 'என்றது அக் குரக்கு இனம், உரையால்
வென்றி வெந்திறல் படைப்பெருந் தலைவர்கள் மீண்டார். 6.30.35
மீண்டு, வேலையின் வடகரை, ஆண்டு ஒரு வெற்பின்
ஈண்டினார்களை, 'என் குறித்து இரிவு உற்றது? 'என்றான்;
'ஆண்ட நாயக! கண்டிலை, போலும், நீ அவரை?
மாண்டு செய்வது என்? 'என்று உரை கூறினர், மறுப்பார். 6.30.36
'ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள்
செருவின் உற்றவை, கொற்றவ! மறத்தியோ? தெரியின்,
பொரு இல் மற்றவர் இற்றிலர், யாரொடும் பொருவார்;
இருவர் வில்பிடித்து, யாவரைத் தடுத்து நின்று எய்வார்? 6.30.37
'புரம் கடந்த அப் புனிதனே முதலிய புலவோர்
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும், மாட்டார்,
கரந்து அடங்கினர்; இனி, மற்று அவ் அரக்கரைக் கடப்பார்
குரங்கு கொண்டு வந்து, அமர்செயும் மானுடர் கொல்லாம்? ' 6.30.38
'ஊழி ஆயிரம் கோடி நின்று, உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன் அவனும்,
சூழ ஓடினர்; ஒருவரைக் கொன்று தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல், வென்றியின் நன்றே! 6.30.39
'என் அப்பா! மற்று இவ் எழுபது வெள்ளமும், ஒருவன்
தின்னப் போதுமோ? தேவரின் வலியமோ, சிறியேம்?
முன் இப் பாரெலாம் படைத்தவன், நாளெலாம் முறைநின்று,
உன்னிப் பார்த்து நின்று, உறையிடப் போதுமோ, யூகம்? 6.30.40
'நாயகன் தலை பத்து உள; கையும் நால் ஐந்து 'என்று
ஓயும் உள்ளத்தேம்; ஒருவன், மற்று அவன்; வந்து, இங்கு உற்றார்
ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக் கையர்; ஐயா!
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் 6.30.41
'கும்பகன்னன் என்று உளன், மற்று இங்கு ஒருவன், கைக் கொண்ட
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி;
உம்பர் அன்றியே, உணர்வு உடையார் பிறர் உளரோ?
நம்பி! நீயும் உன் தனிமையை அறிந்திலை; நடந்தாய். 6.30.42
'அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தம் உயிர் தாங்கவும் சாலா;
கனியும் காய்களும் உணவு உள; முழை உள, கரக்க;
மனிதர் ஆளின் என், இராக்கதன் ஆளின் என், வையம்? 6.30.43
'தாம் உளார் அன்றே, புகழினைத் திருவொடும் தரிப்பார்?
யாம் உேளாம் எனின், எம் கிளை உள்ளது; எம் பெரும!
"போமின் நீர் " என்று விடை தரத் தக்கனை, புரப்போய்!
"சாமின் நீர் " என்றல் தருமம் அன்று ' என்றனர், தளர்ந்தார். 6.30.44
அங்கதன் சாம்பனை நோக்கி, 'ஓடுதல் தக்கதன்று 'என்று காரணங்காட்டி உரைத்தல்
சாம்பனை வதனம் நோக்கி, வாலிசேய், 'அறிவு சான்றோய்!
"பாம்பு அணை அமலனே மற்று இராமன் " என்று, எமக்குப் பண்டே
ஏம்பல் வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ, நீ?
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்திரம் அமைந்தோன் அன்னாய்! 6.30.45
'தேற்றுவாய், தெரிந்த சொல்லால் தரெுட்டி இத்தெளிவு இல்லோரை
ஆற்றுவாய் அல்லை; நீயும் அஞ்சினை போலும்! ஆவி
போற்றுவாய் என்றபோது, புகழ் என் ஆம்? புலமை என் ஆம்?
கூற்றின் வாய் உற்றால், வீரம் குறைவரே! இறைமை கொண்டார்? 6.30.46
'அஞ்சினாம்; பழியும் பூண்டாம்; அம்புவி யாண்டும், ஆவி
துஞ்சும் ஆறு அன்றி வாழ ஒண்ணுமோ, நாள் மேல் தோன்றின்,
நஞ்சு வாய் இட்டால் அன்னது அமுது அன்றே? நம்மை அம்மா,
தஞ்சம் என்று அடைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே! 6.30.47
'தானவரோடும், மற்றைச் சக்கரத் தலைவனோடும்,
வானவர் கடைய மாட்டா மறிகடல் கடைந்த வாலி
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்த்தது என் நீ
மீன், அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும்? மேலோய்! 6.30.48
'எத்தனை அரக்கரேனும், தருமம் ஆண்டு இல்லை அன்றே?
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ?
பித்தரைப் போல நீயும் இவரொடும் பெயர்ந்த தன்மை
ஒத்திலது 'என்னச் சொன்னான்; அவன் இவை உரைப்பது ஆனான் 6.30.49
சாம்பன் மறுமொழி பகர்தல்
நாணத்தால் சிறிதுபோது நவில்கிலன் இருந்து, பின்னர்,
'தூண் ஒத்த திரள்தோள் வீர! தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான், நிற்கத்தான், அக் கறை மிடற்றவற்கும் ஆமே?
கோணற் பூ உண்ணும் வாழ்க்கைக் குரங்கின்மேல் குற்றம் உண்டோ? 6.30.50
தேவரும் அவுணர்தாமும் செருப் பண்டு செய்த காலை,
ஏவரே என்னால் காணப் பட்டிலர்? இருக்கை ஆன்ற
மூவகை உலகின் உள்ளார், இவர்துணை ஆற்றல் முற்றும்
பாவகர் உளரே? கூற்றும் இவருடன் பகைக்க வற்றோ? 6.30.51
'மாலியைக் கண்டேன்; மற்றை மாலியவானைக் கண்டேன்;
கால நேமியையும் கண்டேன்; இரணியன்தனையும் கண்டேன்;
ஆலமா விடமும் கண்டேன்; மதுவினை அனுசனோடும்
வேலையைக் கலக்கக் கண்டேன்; இவர்க்கு உளமிடுக்கும் உண்டோ? 6.30.52
'வலி இதன்மேலே, பெற்ற வரத்தினர்; மாயம் வல்லார்;
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர்; உள்ளம் நோக்கின்,
கலியினும் கொடியர்; கற்ற படைக்கலக் கரத்தர்; என்றால்,
மெலிகுவது அன்றி உண்டோ, விண்ணவர் வெருவல் கண்டால்? 6.30.53
'ஆகினும், ஐய! வேண்டினார்க்கு என அமரில் அஞ்சி,
சாகிலம் பெயர்ந்த தன்மை, பழிதரும்; நரகில் தள்ளும்;
ஏகுதும், மீள; இன்னும் இயம்புவது உளதால்; எய்தி,
மேகமே அனையான் கண்முன் எங்ஙனம் விழித்து நிற்றும்? 6.30.54
சாம்பனை நோக்கி அங்கதன் தேறுதல்மொழி பகர்தல்
என்று எடுத்து எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும்,
வன்திறல் குலிசம் ஓச்சி வரைச் சிறகு அரிந்து, வெள்ளிக்
குன்று இடை நீலக் கொண்மூ அமர்ந்து என மதத்தின் குன்றின்
நின்றவன் அருளும் மைந்தன் மகன், இவை நிகழ்த்தல் உற்றான் 6.30.55
'எடுத்தலும், சாய்தல்தானும், இறத்தலும், எதிர்த்தோர் தம்மைப்
படுத்தலும், வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற, மேல்நாள்;
அடுத்ததே அஃது; நிற்க, அன்றியும் ஒன்று கூறக்
கடுத்தது; கேட்டீர் நீரும். கருத்துளீர், கருதி நோக்கின். 6.30.56
'ஒன்றும் நீ அஞ்சல், ஐய! யாம் எலாம் ஒருங்கு சென்று
நின்றும், ஒன்று இயற்றல் ஆற்றேம்; நேமியான் தானே நேர்ந்து
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி, அன்றேல்
பொன்றுதும் அவனோடு என்றான் 'போதலோ புகழ் அன்று 'என்றான். 6.30.57
வானரத் தலைவரெல்லாம் அங்கதனுடன் மீண்டும் வருதலும் எதிர்த்த அரக்கர் சேனையைக் குறித்து இராமன் தம்பிக்கு உரைத்தலும்
'ஈண்டிய தானை நீங்க, நிற்பது என்? யாமே சென்று
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம்; போதும் 'என்னா,
மீண்டனர் தலைவர் எல்லாம், அங்கதனோடும்; வீரன்
மூண்ட வெம் படையை நோக்கி, தம்பிக்கு மொழிவ தானான். 6.30.58
'அத்த! நீ உணர்தி அன்றே அரக்கர்தான், அவுணரேதான்,
எத்தனை உளர் என்றாலும், யான் சிலை எடுத்தபோது,
தொத்து உறு கனலின் வீழ்ந்த பஞ்சு எனத் தொலையும் தன்மை!
ஒத்தது : ஒர் இடையூறு உண்டு என்று உணர்வு இடை உதிப்பது உண்டால். 6.30.59
வானர சேனை, அரக்கர் சேனையால் நிலைகுலையா வண்ணம் அனுமனோடும் சுக்கிரீவனோடும் சென்று காக்குமாறு இராமன் இலக்குவனுக்கு உரைத்தல்
'காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால், கவியின் சேனை
போக்கு அறப் போகித் தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்;
தாக்கி, இப் படையை முற்றுந் தலை துமிப்பு அளவும், தாங்கி,
நீக்குதி, நிருதர் ஆங்கு நெருங்குவார் நெருங்கா வண்ணம். 6.30.60
'இப்புறத்து இனைய சேனை ஏவி, ஆண்டு இருந்த தீயோன்
அப்புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்தவன், அயலே வந்து,
தப்பு அறக் கொன்று நீக்கில், அவனை யார் தடுக்கத் தக்கார்,
வெப்பு உறுகின்றது உள்ளம் வீர! நீ அன்றி, வில்லோர்? 6.30.61
'மாருதியோடு நீயும், வானரக் கோனும், வல்லே,
பேருதிர் சேனை காக்க; என்னுடைத் தனிமை பேணிச்
சோருதிர் என்னின், வெம்போர் தோற்றும், நாம் 'என்னச் சொன்னான்,
வீரன்; மற்று அதனைக் கேட்ட இளையவன் விளம்பலுற்றான். 6.30.62
இலக்குவன் அதற்கு இசைந்து செல்ல, அனுமன் இராமனுக்கு அருகே நின்று அடித்தொண்டு புரிய வேண்டுதல்
'அன்னதே கருமம்; ஐய! அன்றியும், அருகே நின்றால்,
என் உனக்கு உதவிசெய்வது இதுபடை என்றபோது
சென்னியில் சுமந்த கையர் தேவரே போல, யாமும்
பொன் உடை வரிவில் ஆற்றல் புறன்நின்று காண்டல் போக்கி? 6.30.63
என்று அவன் ஏகல் உற்ற காலையின், அனுமன், 'எந்தாய்!
"புன்தொழில் குரங்கு " எனாது, என் தோளின்மேல் ஏறிப் புக்கால்,
நன்று எனக் கருதாநின்றேன்; அல்லது, நாயினேன் உன்
பின் தனிநின்ற போதும், அடித்தொழில் பிரியேன் 'என்றான். 6.30.64
இலக்குவனுக்கு உற்ற துணை நீ என்று இராமன் கூற, அனுமன், இலக்குவன் பின்னே செல்லுதல்
'ஐய! நிற்கு இயலாது உண்டோ? இராவணன் அயலே வந்து உற்று,
எய்யும் வில்கரத்து வீரன் இலக்குவன்தன்னோடு ஏற்றால்,
மொய் அமர்க்களத்தின் உன்னைத் துணைபெறான் என்னின், முன்ப!
செய்யும் மா வெற்றி உண்டோ? சேனையும் சிதையும் அன்றே? 6.30.65
'ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான் தன்
போரைக் கொண்டு இருந்த முன்நாள் இளையவன் தன்னைப் போக்கிற்று
ஆரைக் கொண்டு? உன்னால் அன்றே, வென்றது அங்கு அவனை? இன்னும்,
வீரர்க்கும் வீர! நின்னைப் பிரிகிலன், வெல்லும் என்பேன். 6.30.66
'சேனையைக் காத்து, என் பின்னே திருநகர் தீர்ந்து போந்த
யானையைக் காத்து, மற்றை இறைவனைக் காத்து, எண் தீர்ந்த
வானை இத்தலத்தினோடும் மறையோடும் வளர்த்தி 'என்றான்.
ஏனை மற்று உரைக்கலாதான், இளவல்பின் எழுந்து சென்றான். 6.30.67
இலக்குவனுக்குத் துணையாக வீடணனையும் உடன் அனுப்புதல்
'வீடண! நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி, வெம்மை
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி, கொற்றம்
நீடுறு தானைதன்னைத் தாங்கினை, நில்லாய் என்னின்,
கேடு உளது ஆகும் என்றான்; அவன் அது கேட்பதானான். 6.30.68
சுக்கிரீவன் முதலியோரும் இராமன் சொல்லியதை யேற்று இலக்குவனுடன் சென்று வானர சேனையைக் காத்தல்
'சூரியன் சேயும், 'செல்வன் சொற்றதே 'என்னும் சொல்லன்,
ஆரியன் பின்பு போனான்; அனைவரும், 'அதுவே நல்ல
காரியம் 'என்னக் கொண்டார்; கடல் படை காத்து நின்றார்;
வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் 6.30.69
இராமன் வில் ஏந்திச் சேனையின் முன்னணியில் வந்து பொருதல்
வில்லினைத் தொழுது வாங்கி, ஏற்றினான் வில்நாண்; மேருக்
கல் எனச் சிறந்ததேனும், கருணை அம்கடலே அன்ன
எல் ஒளி மார்பில் தீராக் கவசம் இட்டு, இழையா வேதச்
சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி, 6.30.70
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனைத்
தூசி வந்து அண்ணல் தன்னைப் போக்கு அற வளைந்து சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலும், விண்ணோர் யாக்கை
கூசின; பொடியால் எங்கும் குமிழ்த்தன, வியோம கூடம். 6.30.71
தேவர்கள் தம் கருத்து முடிந்திட இராமனை ஏத்திப் பரவுதல்
'கண்ணனே! எளியேம் இட்ட கவசமே! கடலே அன்ன
வண்ணனே! அறத்தின் வாழ்வே! மறையவர் வலியே! மாறாது
ஒண்ணுமே, நீ அலாது, ஓர் ஒருவர்க்கு இப் படைமேல் ஊன்ற;
எண்ணமே முடித்தி 'என்னா, ஏத்தினர், இமையோர் எல்லாம். 6.30.72
அரக்கர் கூட்டத்தினைக் கண்டு அஞ்சிய, முனிவர்கள் 'இராமன் வெல்க 'என வாழ்த்துக் கூறுதல்
முனிவரே முதல்வர் ஆய அறத்துறை முற்றினோர்கள்,
தனிமையும், அரக்கர் தானைப் பெருமையும், தரிக்கலாதார்,
பனிவரு கண்ணர், விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர், 'பாவத்து
அனைவரும் தோற்க! அண்ணல் வெல்க 'என்று ஆசி சொன்னார். 6.30.73
தேவர்கள் முதலியோர் இராமனை வாழ்த்துதல்
மற்றும் வேறு அறத்துள் நின்ற வானம் நாடு அனைத்து உேளார்,
'கொற்ற வில்லி வெல்க வஞ்ச மாயர் வீக! குவலயத்து
உற்ற தீமை தீர்க இன்றோடு ' என்று கூறினார்; நிலம்
துற்ற வெம்படைக் கைநீசர், இன்ன இன்ன சொல்லினார். 6.30.74
தனிநின்று பொரும் இராமனது ஆற்றல் கண்டு, அரக்கர் வியத்தல்
'இரிந்த சேனை சிந்தி, யாரும் இன்றி ஏக, நின்று, நம்
விரிந்த சேனை கண்டு, யாதும் அஞ்சல் இன்றி, வெஞ்சரம்
தெரிந்து, சேவகம் திறம்பல் இன்றி, நின்ற செய்கையான்,
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று; மா லி பொய்க்குமோ? 6.30.75
'புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டைநாள்,
விரைந்து புள்ளின்மீது விண்ணுளோர்கேளாடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான். 6.30.76
'தேரும், மாவும், யானையோடு சீயம், யாளி ஆதியா
மேரு மானும் மெய்யர்நின்ற வேலை, ஏழின் மேலவாம்;
"வாரும், வாரும் " என்று அழைக்கும் மானுடற்கு, இம் மண்ணிடைப்
பேருமாறும், நம்முழைப் பிழைக்குமாறும் எங்ஙனே? 6.30.77
அரக்கர் வந்து தன்னைச் சூழ்ந்த நிலையில், இராமன் வில்நாணொலியை எழுப்புதல்
என்று சென்று, இரைத்து எழுந்து, ஓர் சீய ஏறு அடர்ந்ததைக்
குன்று வந்து சூழ்வளைத்த போல், தொடர்ந்து கூடலும்,
'நன்று இது 'என்று, ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும்தன்
வென்றி வில்லை வேதநாதன் நாண் எறிந்த வேலைவாய். 6.30.78
அரக்கர் சேனையில் தீய நிமித்தங்கள் தோன்றுதல்
கதம் புலர்ந்த, சிந்தைவந்த, காவல் யானை, மாலொடு
மதம் புலர்ந்த; நின்ற வீரர் வாய்புலர்ந்த; மா எலாம்
பதம், புலர்ந்த வேகம் ஆக, வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின், வென்ற வென்றி சொல்ல வேண்டுமோ? 6.30.79
வெறித்து இரிந்த வாசியோடு, சீய மாவும் மீளியும்,
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழிகூடு தேர் எலாம்
முறித்து எறிந்து முந்த, யானை வீசும் மூசு பாகரைப்
பிறித்து இரிந்து சிந்த, வந்து ஒர் ஆகுலம் பிறந்ததால். 6.30.80
துன்னிமித்தந் தோன்றிய அரக்கர் சேனைமீது இராமன் அம்பு ஏவுதல்
'இந் நிமித்தம் இப்படைக்கு இடம் துடித்து அடுத்தது ஓர்
துன்னிமித்தம் 'என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார்;
அந் நிமித்தம் உற்றபோது, அரக்கர் கண் அரங்க, மேல்
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான். 6.30.81
ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனைமேலும், ஆடல்மா
மீளி மேலும், வீரர்மேலும், வீரர் தேரின்மேலும், வெவ்
வாளி மேலும் : வில்லின் மேலும் மண்ணின்மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான். 6.30.82
இராமன் எய்த அம்புகளால் அரக்கர் சேனை அழிதல்
மலை விழுந்தவா விழுந்த, மான யானை; மள்ளர் செந்
தலை விழுந்தவா விழுந்த, தாய வாசி; தாளறும்
சிலை விழுந்தவா விழுந்த திண் பதாகை; திங்களின்
கலை விழுந்தவா விழுந்த, வெள் எயிற்ற காடு எலாம். 6.30.83
வாடை நாலுபாலும் வீச, மாக மேக மாலை வெங்
கோடை மாரி போல வாளி கூட, ஓடை யானையும்
ஆடல் மாவும் வீரர் தேரும், ஆளும், மாள்வது ஆனவால்;
பாடு பேரும் ஆறு கண்டு, கண் செல் பண்பும் இல்லையால். 6.30.84
விழித்த கண்கள், கைகள், மெய்கள், விற்கள், வேல்கள், உட்கிடத்
தழெித்த வாய்கள், செல்லல் உற்ற தாள்கள், தோள்கள், செல்லினைப்
பழித்த வாளி சிந்த நின்று பட்டது அன்றி, விட்டகோல்,
கழித்த ஆயுதங்கள், ஒன்று செய்தது இல்லை கண்டதே. 6.30.85
தொடுத்த வாளியோடு வில் துணிந்து வீழும், முன்; துணிந்து
எடுத்த வாள்கேளாடு தோள்கள் இற்று வீழும்; மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும்; எங்ஙனே, கலந்து நேர்
தடுத்து அ(வ்) வீரர் தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால்? 6.30.86
குரம் துணிந்து, கண் சிதைந்து, பல்லணம் குலைந்து, பேர்
உரம் துணிந்து, வீழ்வது அன்றி, ஆவி ஓட ஒண்ணுமே
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால்,
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே! 6.30.87
ஊர உன்னின், முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால்
பேர ஒல்வது அன்று; பேரின் ஆயிரம் பெருஞ் சரம்
தூர, ஒன்று நூறு கூறு பட்டு உகும்; துயக்கு அலால்
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே? 6.30.88
எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும் வல்ல யாவரும்,
கிட்டின், உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற, கேள்வியால்;
முட்டும் வெங்கண் மான யானை, அம்பு உராய, முன்னமே
பட்டு உலந்த போல் விழுந்த; என்ன தன்மை பண்ணுமே? 6.30.89
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று
ஏவின், உண்டை நூறு கோடி கொல்லும் என்ன, எண்ணுவான்
பூவின் அண்டர் கோனும், எண் மயங்கும்; அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் அன்னது ஆகுமே. 6.30.90
கொடிக் குலங்கள், தேரின் மேல யானை மேல, கோடைநாள்
இடிக் குலங்கள் வீழ வெந்த காடுபோல் எரிந்தவால்
முடிக் குலங்கள் கோடி கோடி சிந்த, வேகம் முற்று உறா
வடிக் குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால்! 6.30.91
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள்மீது எழுந்து,
உற்ற வேகம் உந்த ஓடி, ஓத வேலை ஊடு உற,
துற்ற வெம்மை கைம் மிகச் சுறுக்கொளச் சுவைத்ததால்,
வற்றி நீர் வறந்து, மீன் மறிந்து, மண் செறிந்தவால். 6.30.92
போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி, பொங்கினார்
ஊர் எரிந்தநாள் துரந்தது என்ன மின்னி ஓடலால்,
நீர் எரிந்த வண்ணமே, நெருப்பு எரிந்த, நீள்நெடுந்
தேர் எரிந்த, வீரர்தம் சிரம் பொடிந்து சிந்தவே. 6.30.93
பிடித்த வாள்கள், வேல்கேளாடு, தோள்கள் பேர் அரா எனத்
துடித்த; யானைமீது இருந்து போர்தொடங்கு சூரர்தம்
மடித்த வாய செந்தலைக் குலம் புரண்ட, வானின் மின்
இடித்த வாயின் இற்ற மாமலைக் குலங்கள் என்னவே. 6.30.94
கோர ஆளி, சீயம், மீளி, கூளியோடு, ஞாளியும்,
போர வாளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால்
நார ஆளி, ஞால ஆளி, ஞான ஆளி, நாந்தகப்
பார வாளி, வீர ஆளி, ஏக வாளி பாயவே. 6.30.95
ஆழி பேற்ற தேர் அழுந்தும்; ஆள் அழுந்தும், ஆேளாடும்
சூழி பெற்ற மா அழுந்தும்; வாசியும் சுரிக்குமால்
பூழி பெற்ற வெங்களம் குளம்படப் பொழிந்த பேர்
ஊழி பெற்ற ஆழி அன்ன சோரி நீரினுள் அரோ. 6.30.96
அற்று மேல் எழுந்தவன் சிரங்கள் தம்மை அண்மி, மேல்
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்;
'சுற்றும் வீழ் தலைக் குலங்கள் சொல்லு கல்லின் மாரிபோல்
எற்றும் 'என்றும், பாரின் எங்கும் வாழுவார் இரங்குவார். 6.30.97
மழைத்த மேகம் வீழ்வது என்ன, வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வது என்ன, மண்ணின்மீது துன்னுமால்
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால்,
விழித்து எழுந்து, வானின் ஊடு மொய்த்த பொய்யர் மெய் எலாம். 6.30.98
அரக்கர்கள் கடும் போர் புரிதல்
தெய்வ நெடும் படைக் கலங்கள் விடுவர்சிலர்;
சுடுகணைகள் சிலையில் கோலி,
எய்வர் சிலர்; எறிவர் சிலர்; எற்றுவர்,
மலைகள் பலவும் ஏந்திப்
பெய்வர் சிலர்; 'பிடித்தும் 'எனக் கடுத்து உறுவர்;
படைக்கலங்கள் பெறாது, வாயால்,
வைவர் சிலர்; தழெிப்பர் சிலர்; திரிவர்
சிலர் வயவர் மன்னோ. 6.30.99
ஆர்ப்பர் பலர்; அடர்ப்பர் பலர்; அடுத்து அடுத்தே
படைக் கலங்கள் அள்ளி அள்ளித்
தூர்ப்பர் பலர்; மூவிலைவேல் துரப்பர் பலர்;
கரப்பர் பலர்; சுடுதீத் தோன்றப்
பார்ப்பர் பலர்; நெடு வரையைப் பறிப்பர் பலர்;
பகலோனைப் பற்றிச் சுற்றும்
கார்ப் பருவ மேகம் என, வேக நெடும் படை
அரக்கர் கணிப்பு இலாதார். 6.30.100
இராமன் அரக்கர் படைகளை வென்று மேம்படுதல்
எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும்,
பிடித்தனவும், படைகள் எல்லாம்
முறிந்தன, வெம் கணைகள் பட; முற்றின,
சுற்றின தேரும், மூரிமாவும்;
நெறிந்தன குஞ்சிகேளாடும் நெடுந்தலைகள்
உருண்டன; பேர் இருளின் நீங்கி,
பிறிந்தனன் வெய்யவன் என்னப் பெயர்ந்தனன் மீது
உயர்ந்த தடம் பெரிய தோளான். 6.30.101
இராமபாணத்தின் செயல்
சொல் அறுக்கும் வலி அரக்கர், தொடுகவசம்
துகள்படுக்கும்; துணிக்கும் யாக்கை;
வில் அறுக்கும்; தலை அறுக்கும்; மிடல் அறுக்கும்;
அடல் அறுக்கும்; மேல் மேல் வீசும்
கல் அறுக்கும்; மரம் அறுக்கும்; கை அறுக்கும்;
செய்யமள்ளர் கமலத்தோடு
நெல் அறுக்கும் திருநாடன் நெடுஞ்சரம் என்றால்,
எவர்க்கும் நிற்கலாமோ? 6.30.102
கவிக்கூற்று
' கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும்,
கழுத்து இழந்தும், பருமக் கட்டின்
மேல் இழந்தும், மருப்பு இழந்தும் விழுந்தன,
என்குநர் அல்லால், வேலை அன்ன
மால் இழந்து, மழை அனைய மதம் இழந்து, வலி
இழந்து, மலைபோல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்
இல்லை நெடுஞ் சுரர்கள் எல்லாம். 6.30.103
பலகோடிகளாய் வந்த நால்வகைச் சேனையையும் இராமன் ஒருவனாகவே பொருது வெல்லுதல்
வேல் செல்வன சத கோடிகள்; விண்மேல் நிமிர் விசிகக்
கோல் செல்வன சதகோடிகள்; கொலை செய்வன மலைய,
தோல் செல்லன சதகோடிகள் : துரகம் தொடர் இரதக்
கால் செல்வன சதகோடிகள்; ஒருவன், அவை கடிவான். 6.30.104
ஒரு வில்லியை, ஒரு காலையின், உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள், முடிவு இல்லவர், சரமாமழை பெய்வார் :
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய,
திருவில்லிகள் தலைபோய் நெடுமலைபோல் உடல் சிதைவார். 6.30.105
'நூறாயிர மதயானையின் வலியோர் ' என நுவல்வோர்,
மாறு ஆயினர், ஒரு கோல் பட, மலைபோல உடல் மறிவார்;
ஆறு ஆயிரம் உள ஆகுவ அழி செம்புனல்; அவைபுக்கு
ஏறாது எறிகடல் பாய்வன, சின மால் கரி இனமால். 6.30.106
மழு அற்று உகும்; மலை அற்று உகும்; வளை அற்று உகும்; வயிரத்து
எழு அற்று உகும;் இலை அற்று உகும்; அயில் அற்று உகும்; எறிவேல்
பழு அற்று உகும்; மத வெங் கரி; பரி அற்று உகும்; இரதக்
குழு அற்று உகும்; ஒரு வெங்கணை தொடை பெற்றது ஓர் குறியால். 6.30.107
அரக்கர் பலரும் போரில் இறத்தல்
ஒருகாலையின், உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண
வருகாலனும், அவன் தூதரும், நமன்தானும், அவ் வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார்;
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்ந்தார். 6.30.108
போர்க்களத்தில் கவந்தங்கள் எழுந்து ஆடுதல்
அடுக்கு உற்றன, மதயானையும், அழிதேர்களும், பரியும்
தொடுக்குற்றன விசும்பு ஊடு உறச் சுமந்து ஓங்கின எனினும்,
மிடுக்குற்றன கவந்தம் குலம் எழுந்து ஆடலின் எல்லாம்
நடுக்குற்றன, பிணக் குன்றுகள், உயிர் நண்ணின என்ன. 6.30.109
பகைவரது உடற்குருதி தன் திருமேனியிற் படியப் பொருதுநின்ற இராமனது தோற்றம்
பட்டார் உடல்படு செம்புனல் திருமேனியில் படலால்,
கட்டு ஆர் சிலைக் கரு ஞாயிறு புரைவான், கடையுகநாள்,
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அச் சுடரோன் எனப் பொலிந்தான்;
ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான். 6.30.110
இறவாது எஞ்சிய அரக்கர்கள் இராமனைச் சூழ்ந்துகொள்ளுதல்
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட, சிரம் போய்
மாயம் தமர் மடிகின்றனர் எனவும், மறம் குறையார்,
காயத்திடை உயிர் உண்டிட, உடன்மொய்த்து எழு களியால்
ஈ ஒத்தன நிருதக்குலம்; நறவு ஒத்தனன் இறைவன். 6.30.111
இராமன், தன்னைச் சூழ்ந்து மொய்த்தாரை அழித்தல்
மொய்த்தாரை ஓர் இமைப்பின்தலை, முடுகத் தொடு சிலையால்
தைத்தான்; அவர், கழல் திண் பசுங்காய் ஒத்தனர், சரத்தால்;
கைத்தார் நெடுந்தேரும், கடுங் களிறும், களத்து அழுந்தக்
குத்தான், அழி குழம்பு ஆம் வகை, வழுவாச் சரக் குழுவால். 6.30.112
பிரிந்தார் பலர்; இரிந்தார் பலர்; பிழைத்தார் பலர்; உழைத்தார்;
புரிந்தார் பலர்; நெரிந்தார் பலர்; புரண்டார் பலர்; உருண்டார்;
எரிந்தார் பலர்; கரிந்தார் பலர்; எழுந்தார் பலர், விழுந்தார்,
சொரிந்தார் குடல், துமிந்தார் தலை, கிடந்தார்; எதிர் தொடர்ந்தார். 6.30.113
மணி குண்டலம், வலயம், குழை, மகரம், சுடர் மகுடம்,
அணி கண்டிகை, கவசம், கழல் திலகம் முதல கலம்,
துணிவு உண்டவர் உடல் சிந்தின, தொடர்கின்றன, சுடரும்;
திணி கொண்டலினிடை மின்குலம் மிளிர்கின்றன சிவண. 6.30.114
அரக்கர் அஞ்சி வியக்குமாறு இராமன் சாரிகை திரிதல்
முன்னே உளன்; பின்னே உளன்; முகத்தே உளன்; அகத்தின்
தன்னே உளன்; மருங்கே உளன்; தலைமேல் உளன்; மலைமேல்
கொன்னே உளன்; நிலத்தே உளன்; சும்பே உளன்; கொடியோர்,
'என்னே ஒரு கடுப்பு! 'என்றிட, ஞ் சாரிகை திரிந்தான். 6.30.115
நேரினன்; என் நேரினன் ' என்று யாவரும் எண்ண,
பொன் நேர்வரு வரிவில் கரத்து ஒரு கோளரி பொருவான்,
ஓன்னார் பெரும் படைப் போர் கடல் உள் நின்றனன் எனினும்
அல்நேரவர் உடனே திரி நிழலே எனல் ஆனான். 6.30.116
பள்ளம் படுகடல் ஏழினும், படி ஏழினும், பகையின்
வெள்ளம் பல உள என்னினும், வினையம் பல தெரியா,
கள்ளம் படர் பெருமாயையின் கரந்தார் உருப் பிறந்தார்
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான். 6.30.117
நானாவிதப் பெருஞ் சாரிகை திரிகின்றது நவிலார்,
போனான், இடை புகுந்தான், எனப் புலன் கொள்கிலர்,
'தானாவதும் உணர்ந்தான், உணர்ந்து உலகு எங்கணும் தானே
ஆனான்; வினை துறந்தான் 'என, இமையோர்களும் அயிர்த்தார். 6.30.118
சண்டக் கடு நெடுங் காற்று இடை துணிந்து எற்றிட, தரைமேல்
கண்டப் படு மலைபோல், நெடு மரம்போல், கடுந் தொழிலோர்
துண்டம் பட, கடுஞ் சாரிகை திரிந்தான், சரம் சொரிந்தான்
அண்டத்தினை அளந்தான் எனக் கிளர்ந்தான், நிமிர்ந்து அகன்றான். 6.30.119
களியானையும், நெடுந் தேர்களும், கடும் பாய் பரிக்கணனும்,
தெளி யாளியும், முரண் சீயமும், சின வீரர்தம் திறமும்,
வெளி வானகம் இலதாம் வகை விழுந்து ஓங்கிய பிணம் பேர்
நளிர் மாமலை பல தாவினன், நடந்தான் கடல் கிடந்தான். 6.30.120
அரக்கர் சேனைகள் அழிவுற்றுக் கிடக்கும் தோற்றம்
அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்
அம்பரங்கெளாடும் களி யானையும்
அம்பு அரங்க அழுந்தின சோரியின்
அம்பரங்கம் அருங்கலம் ஆழ்ந்து என. 6.30.121
தம் மனத்தில் சலத்தர் மலைத்தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ
தமெ்முனைச் செரு மங்கை தன் செங்கையால்
அம் மனைக்குலம் ஆடுவ போன்றவே. 6.30.122
கேட கங்கண வன்கையொடும் கிளர்
கேடகங்கள் துணிந்து கிடந்தன;
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே. 6.30.123
அங்கதம் களத்து அற்று அழிந்தாரொடும்
அம் கதம் களத்து அற்று அழிவு உற்றவால்
புங்கவன் கணைப் புட்டில் பொருந்திய
புங்க வன்கணைப் புற்று அரவம் பொர. 6.30.124
கயிறு சேர் கழல் கார்நிறக் கண்டகர்
எயிறு வாளி படத் துணிந்து யானையின்
வயிறுதோறும் மறைவன வானிடைப்
புயல்தொறும் புகு வெண்பிறை போன்றவே. 6.30.125
வென்றி வீரர் எயிறும் விடா மதக்
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன
என்றும் என்றும் எழுந்த இளம்பிறை
ஒன்றி மாநிலத்து உக்கவும் ஒத்தவால். 6.30.126
குருதி கடல் போற் பரவியதனால் தீவுகளில் உறைவோர் மலைகளின் மேலேறுதல்
ஓவிலார் உடல் உந்து உதிரப் புனல்
பாவி வேலை உலகு பரத்தலால்
தீவுதோறும் இனிது உறை செய்கையார்
ஈவு இலாத நெடுமலை ஏறினார். 6.30.127
இராமனது விற்றொழில் வன்மையால் அரக்கர் விண்ணில் நிரம்ப அவர்தம் உடல்கள் மண்ணில் நிறைதல்
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும்
புண் நிறைந்த புனலின் நிறைந்தன;
மண் நிறைந்தன பேர் உடல்; வானவர்
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே. 6.30.128
குருதி வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட படைக்கலங்கள் கடலிற் புக்கமையால் மீன்கள் முதலியன அறுபட்டு இறத்தல்
செறுத்த வீரர் பெரும்படை சிந்தின
பொறுத்த சோரி புகக் கடல் புக்கன
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும்
அறுத்து மீனம் உலந்த அனந்தமே. 6.30.129
அரக்கர் படைத்தலைவனாகிய வன்னி என்பவன் இராமனொருவனால் நேர்ந்த அழிவினை எண்ணி வெகுண்டு அரக்கரகளைப் போரில் ஊக்குதல்
'ஒல்வதே! இவ் ஒருவன் இவ் யூகத்தைக்
கொல்வதே நின்று! குன்று அன்ன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை
மெல்வதே! 'என வன்னி விளம்பினான். 6.30.130
'கோல் விழுந்து அழுந்தாமுனம் கூடி யாம்
மேல் விழுந்திடினும் இவன் வீயுமால்;
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்!
மால் விழுந்துளிர் போலும் மயங்கி நீர்! 6.30.131
'ஆயிரம் பெருவெள்ளம் அரைபடத்
தேய நிற்பது; பின்பு இனி என்செய?
பாயும் உற்று உடனே 'எனப் பன்னினான்
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான். 6.30.132
வெண்குண்டெழுந்த அரக்கர்கள் இராமனைச் சூழ்ந்து கொண்டு பல்வகைப் படைக்கலங்களைச் சொரிதல்
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா
சுற்று முற்றும் வளைந்தன தூவின
ஒற்றை மால் வரைமேல் உயர் தாரைகள்
பற்றி மேகம் பொழிந்து என பல் படை. 6.30.133
இராமன் அவற்றைச் சிதைத்து அம்பு மழை பொழிதல்
குறித்து எறிந்தன எய்தன கூறு உறத்
தறித்து தேரும் களிறும் தரைப்பட
மறித்து வாசி துணித்து அவர் மாப்படை
தறெித்துச் சிந்த சர மழை சிந்தினான். 6.30.134
தலையறுபட்ட உடல்கள் குருதி பொங்க ஆடுதலின் தோற்றம்
வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்
பேய் விளிப்ப நடிப்பன பெட்பு உறும்
தீ விளிப்பு உறு தீபம் நிகர்த்தவால். 6.30.135
குருதியும் நிணமும் படிந்த நிலத்தின் தோற்றம்
நெய்கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்
வைய மங்கை பொலிந்தனள்; மங்கலச்
செய்ய கோலம் புனைந்த அன்ன செய்கையாள். 6.30.136
எங்கும் குருதி பரந்தமையால் 'கடல்கள் ஏழு 'என்னும் அம்மொழி தவறுபடுதல்
உப்பு தேனு நெய் ஒண்தயிர் பால் கரும்பு
அப்பு தான் என்று உரைக்கும் அவ் ஆழிகள்
துப்புப் போல் குருதிப் புனல் சுற்றலால்
தப்பிற்று அவ் உரை இன்று ஓர் தனுவினால். 6.30.137
இராமனது வில் வளைந்தேயிருத்தலும் அரக்கர் சேனையின் அளவின்மையும்
ஒன்றுமே தொடை; கோல் ஒரு கோடிகள்
சென்று பாய்வன; திங்கள் இளம்பிறை
அன்றுபோல் எனல் ஆகியது அச்சிலை;
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர்? 6.30.138
கடும் போர்புரிந்த அரக்கர் இராமன் அம்பினால் இறத்தல்
எடுத்தவர், இரைத்தவர், எரிந்தவர்,
செறிந்தவர், மறம் கொடு எதிரே
தடுத்தவர், சலித்தவர், சரிந்தவர், பிரிந்தவர்,
தனிக் களிறுபோல்
கடுத்தவர், கலித்தவர், கறுத்தவர், செறுத்தவர்,
கலந்து, சரம் மேல்
தொடுத்தவர், துணிந்தவர், தொடர்ந்தனர்,
கிடந்தனர் துரந்த கணையால். 6.30.139
தொடுப்பது சுடர்ப் பகழி ஆயிரம் நிரைத்தவை
துரந்த துறைபோய்ப்
படுப்பது, வயப் படைஞர் ஆயிரரை
அன்று, பதினாயிரவரை;
கடுப்பு அது; கருத்தும் அது; கட்புலன் மனம்
கருதல் கல்வி இல; வேல்
எடுப்பது படப் பொருவது அன்றி, இவர்
செய்வது ஒரு நன்றி உளதோ? 6.30.140
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேரணி
கடைக்குழை தொகுத்து
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும்;
அவை உண்ணும் உயிரை;
ஆசைகளை உற்று உருவும்; அப்புறமும் ஓடும்;
அதன் இப்புறமும் உளார்,
ஈசன் எதிர் உற்று, உகுவது அல்லது, இகல்
முற்றுவது ஒர் கொற்றம் எவனோ? 6.30.141
ஊன் நகுவடிக் கணைகள் ஊழி அனல் ஒத்தன; உலர்ந்த உலவைக்
கானகம் நிகர்த்தனர் அரக்கர்; மலை ஒத்தன களித்த மதமா;
மானவன் வயப் பகழி வீசுவலை ஒத்தன; வலைக்குள் வழுவா
மீனகுலம் ஒத்தன, கடற்படை இனத்தொடும் விளிந்து அவிதலால். 6.30.142
ஊழி இறுதிக் கடுகும் மாருதமும் ஒத்தனன்,
இராமன்; உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர்,
அரக்கர், பொருவார்;
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி,
இறுதிக் கணில் எழும்
ஆழியையும் ஒத்தனன்; அம் மன்னுயிரும் ஒத்தனர்,
அலைக்கும் நிருதர் 6.30.143
மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய்,
எவையும் முற்றும் முயலும்
காலம் எனல் ஆயினன் இராமன்; அவ் அரக்கர்
கடை நாளில் விளியும்
கூலம் இல் சர அசரம் அனைத்தினையும்
ஒத்தனர்; குரைகடல் எழும்
ஆலம் எனல் ஆயினன் இராமன்; அவர் மீனம்
எனல் ஆயினர்களால். 6.30.144
வஞ்ச வினைசெய்து, நெடுமன்றில் வளன் உண்டு,
கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர்;
அறம் ஒக்கும் நெடியோன்;
நஞ்ச நெடுநீரினையும் ஒத்தனன்; அடுத்து
அதனை நக்குநரையும்,
பஞ்சம் உறுநாளில் வறியோர்களையும்
ஒத்தனர், அரக்கர், படுவார். 6.30.145
அரக்கர் இறந்துபடப் பெருகிய குருதி வெள்ளம் இலங்கை நகரத்தினுள்ளும் சென்று புக்கமை கண்டு அரக்கியர் அலறி ஓடுதல்
வெள்ளம் ஒருநூறுபடும் வேலையில், அவ் வேலையும்
இலங்கை நகரும்,
பள்ளமொடு மேடு தெரியாத வகை சோர்
குருதி பம்பி எழலும்,
உள்ளும் மதிளும் புறமும் ஒன்றும் அறியாது
அலறி ஓடினர்களால்,
கள்ள நெடு மான்விழி அரக்கியர் கலக்கமொடு
கால்கள் குலைவார். 6.30.146
நூறுசதகோடி யளவினராகிய படைத் தலைவர்கள் தமது சேனை பின்னிடாதவாறு தாங்கி நின்று இராமனொடு பொருதல்
நீங்கினர், நெருங்கினர் முருங்கினர், உலைந்து; உலகின் நீளும் மலைபோல்
வீங்கின, பெரும்பிணம் விசும்பு உற; அசும்புபடுசோரி விரிவுற்று,
ஓங்கின, நெடும்பரவை, ஒத்து உயர எத்திசையும் உற்று எதிர் உற;
தாங்கினர், படைத்தலைவர், நூறுசத கோடியர் தடுத்தல் அரியார். 6.30.147
தேரும், மத மாவும், வரை ஆளியொடு
வாசி, மிகு சீயம், முதலா
ஊரும் அவை யாவையும் நடாயினர், கடாயினர்கள்,
உந்தினர்களால்;
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம்படையொடு
அம்பு கடிதின்
தூரும் வகை தூவினர்; துரந்தனர்கள், எய்தனர்,
தொடர்ந்தனர்களால். 6.30.148
'வம்மின், அட, வம்மின்! எதிர் வந்து, நுமது ஆர்
உயிர் வரங்கள் பிறவும்,
தம்மின் 'என இன்னன மொழிந்து, எதிர் பொழிந்தன,
தடுப்ப அரியவாம்
வெம்மின் என, வெம்பகழி வேலை என ஏயினன்;
வெய்ய வினையோர்
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனன்,
தனித் தனி அரோ. 6.30.149
அரக்கரது கடும் போர் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை யடைந்து வணங்கி நின்று, 'இப் போரின் நிலை யாதாகும்? 'என வினவுதல்
அக்கணையை அக்கணம் அறுத்தனர் செறுத்து,
இகல் அரக்கர் அடைய,
புக்கு அணையல் உற்றனர், மறைத்தனர் புயற்கு
அதிகம் வாளி பொழிவார்,
திக்கு அணை வகுத்தனர் எனச் செல நெருங்கினர்;
செருக்கின் மிகையால்;
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர்
இவை மொழிந்தனர்களால். 6.30.150
'படைத் தலைவர் உற்று ஒருவர் மும்மடி இராவணன்
எனும் படிமையோர்;
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை; வளைத்தனர்
கிளர்ந்து உலகு எலாம்
அடைத்தனர், தழெித்தனர், அழித்தனர், தனித்து உளன்
இராமன், அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர்; இனிச் செயல்
பணித்தி சுடரோய்! 6.30.151
'எய்த கணை எய்துவதன் முன்பு, இடை அறுத்து,
இவர்கள் ஏழு உலகமும்
பெய்த கணை மாமுகில் எனப்புடை வளைத்தனர்,
பிடித்தனர்கள் போய்;
வைது அகலின் அல்லது மறம் படை, கொடிப்படை,
கடக்கும் வலிதான்
செய்ய திருமாலினொடு உனக்கும் அரிது ' என்றனர்,
திகைத்து விழுவார். 6.30.152
சிவபெருமான் தேவர்களது அச்சத்தைப் போக்கி, அரக்கரை அழித்து இராமனே வெற்றி பெறுவான் எனத் தெளிவித்தல்
'அஞ்சி அயரன்மின்! அவர் எத்தனையர்
ஆயிடினும், அத்தனைவரும்,
பஞ்சி எரி உற்றது என, வெந்து அழிவர் : இந்த உரை
பண்டும் உளதால்;
நஞ்சம் அமுதத்தை நனிவென்றிடினும், நல் அறம்
நடக்கும் அதனை
வஞ்ச வினை பொய்க் கருமம் வெல்லினும், இராமனை
அவ் வஞ்சகர் கடவார். 6.30.153
'அரக்கர் உளர் ஆர்சிலர், அவ் வீடணன் அலாது,
உலகின் ஆவி உடையார்?
இரக்கம் உளது ஆகியது; நல் அறம் எழுந்து
வளர்கின்றது; இனிநீர்
கரக்க, முழைதேடி உழல்கின்றிலிர்கள்; இன்று
ஒரு கடும்பகலிலே
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை
கொல்லும், இவரை. 6.30.154
அம்மொழி கேட்டு அயல் நின்ற பிரமனும் அதுவே நிகழும் என உடன் பட்டுரைக்க அப்பொழுது இராமன் அம்புமழையினால் அரக்கர் தலைகளை மலை போற் குவித்தல்
என்று பரமன் பகர, நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்,
நின்று நிலை ஆறினர்கள் வானவர்கள்; மானவனும் நேமி எனலாம்
வென்று நெடு வாளி மழை, மாரியினும் மேலன துரந்து, விரைவில்
கொன்று, குல மால் வரைகள் மானு தலை மாமலை குவித்தனன் அரோ. 6.30.155
அரக்கர் உயிர் துறக்கம் புக அவர்களுடைய உடல்கள் பூமியிற் சிதைவுற்றுக் கிடக்க, எங்கும் வழியில்லை யாதல்
மகர மறி கடலின் வளையும் வய நிருதர்
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர்
பகர அரிய பதம் விரவ அமரர் பழ
நகரம் இடம் அருக நவையர் நலிவுபட. 6.30.156
உகளும் இவுளி தலை துமிய உறுகழல்கள்
தகளியுற வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ. 6.30.157
மலையும் மறி கடலும் வனமும் வறு நிலமும்
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்கெளாடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ்குருதி
அலையும்; மரியது ஒருதிசையும் இலது அணுக. 6.30.158
அரக்கர் தலைவர்கள் பலரும் இறந்துபட, அமரர் சொரிந்த மலர்கள் மழைபோல எங்கும் பரவிக் கிடத்தல்
இனைய செருநிகழும் அளவின் எதிர்பொருத
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய.
அனைய படை நெளிய வயவர் அழி குருதி
நனைய விசையின் எழுதுவலை மழை நலிய. 6.30.159
அரக்கர் படைத்தலைவர்கள் பின்னிடும் சேனையைத் தடுத்து இராமன்மீது செலுத்திக் கடும் போர் விளைத்தல்
இரியல் உறுபடையை நிருதர் இடை விலகி
எரிகள் சொரியும் நெடு விழியர் 'இழுதையர்கள்!
திரிக திரிக! 'என உரறு தழெுகுரலர்
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ. 6.30.160
உலகு செவிடுபட மழைகள் உதிர உயர்
அலகு இல் மலை குலைய அமரர் தலை அதிர
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய
விலகியது திமிரம் வளையும்வகை வளைய. 6.30.161
தன்னை எதிர்த்துப் பொரும் அரக்கர் சேனையை இராமன் உவகையுடன் ஏற்றுக் கடும் போர் புரிதல்
'அழகிது அழகிது 'என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசுபட
விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய. 6.30.162
தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு
கனக வரை பொருவ; கதிர்கொள் மணி இரதம். 6.30.163
பாறு படு சிறகு கழுகு பகழி பட
நீறுபடும் இரத நிரையின் உடல் தழுவி
வேறு படர் படர இரவி சுடர் வலையம்
மாறுபட உலகின் மலைகள் அளறு பட. 6.30.164
அருகு கடல் திரிய அலகு இல் மலை குலைய
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய
இருகை ஒரு களிறு திரிய விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் முறை திரிய. 6.30.165
சிவனும் அயனும் எழு திகிரி அமரர் பதி
அவனும் அமரர்குலம் எவரும் முனிவரொடு
கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும்
நமனும் வரிசிலையும் அறனும் நடன் நவில. 6.30.166
'தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை
ஏவர் அறிவுறுவர் இறுதி? முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர் 'அற முதல்வ!
பூவை நிறவ! 'என வேதம் முறை புகழ. 6.30.167
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு
வெய்ய களிறு பரி ஆெளாடு இரதம் விழ
ஒய்யென் ஒருகதியின் ஓட உணர் அமரர்
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ. 6.30.168
அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல்
பண்ணு புரவி படை வீரர் தொகு பகுதி
புண்ணின் இடுகுறிகள் புள்ளி என விரவி
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ. 6.30.169
அரக்கர் தப்பிச் செல்லாதவாறு இராமன் சரமதில் அமைத்தல்
'சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனிக்
கரக்க மற்று ஒரு புறத்து 'என்னும் கண்ணினால்
அரக்கருக்கு அன்று செலவு அரியதாம் வகை
சரக் கொடு நெடு மதில் சமைத்து இட்டான் அரோ. 6.30.170
அரக்கர் சரமதிலைக் கடக்க மாட்டாமை
மாலியை மாலியவானை மால் வரை
போல் உயிர் கயிடனை மதுவை போன்று உளார்
சாலிகை யாக்கையர் தணிப்பு இல் வெஞ்சர
வேலியைக் கடந்திலர் உலகை வென்று உளார். 6.30.171
அரக்கரிற் பெரும்பாலார் இறந்துபட அவர்தம் சேனை அளவிற் சுருங்குதல்
மாண்டவர் மாண்டு அற மற்று உேளார் எலாம்
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும்
மூண்டு உற முருங்கிய ஊழிக் காலத்தில்
தூண்டுறு சுடர் சுட சுருங்கித் தொக்கபோல். 6.30.172
இராமனது அம்பின் கொடுமை கண்டு திகைப்புற்ற அரக்கர்கள் தம்மவர்களை நோக்கிக் கூறுதல்
'புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும்
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்
உரம் சுடுகிற்கிலர்; ஒருவன் நாமுடை
வரம் சுடும்; வலி சுடும்; வாழும் நாள் சுடும். 6.30.173
'ஆயிர வெள்ளம் உண்டு; ஒருவர் ஆழி சூழ்
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்;
மேயின பெரும்படை இதனை ஓர் விலால்
"ஏ " எனும் மாத்திரத்து எய்து கொன்றனன். 6.30.174
'இடை படும்; படாதன இமைப்பிலோர் படை
புடைபட வலம்கொடு விலங்கிப் போகுமால்;
படை படும் கோடி; ஓர் பகழியால்; பழிக்
கடை படும் அரக்கர்தம் பிறவி கட்டமால். 6.30.175
'பண்டு உலகு அளித்தவனோடும் பண் அமை
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார்
அண்டர்கள் விசும்பின் நின்று ஆர்க்கினார் உழைக்
கண்டிலம்; இவன் நெடு மாயக் கள்வனால். 6.30.176
இவ்விராமன் திருமாலே என்று துணிந்து ஆற்றல் குன்றிய அரக்கர்களை நோக்கி வன்னி என்பவன் 'நாம் பகைவனொடு பொருது உயிர் துறத்தலே இனிச் செய்யத் தகுவது 'என அறிவுறுத்தல்
'கொன்றனன் இனி ஒரு கோடி கோடி மேற்று;
அன்று எனின் பதுமம்; அன்றாயின் வெள்ளமா
நின்றது; நின்று இனி நினைவது என் பிற?
ஒன்று என நினைக 'என வன்னி ஓதினான். 6.30.177
'விழித்துமோ இராவணன் முகத்து மீண்டு யாம்
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால்?
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறிசென்று அண்ம யாம்
கழித்தும் இவ் ஆக்கையை புகழைக் கண்ணுற. 6.30.178
'இடுக்கினில் பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்
அடுத்த கூர் வாளியின் அரணம் நீங்கலோம்;
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனிக்
கொடுத்தும் நம் உயிர் 'என ஒருமை கூறினான். 6.30.179
அரக்கர் அனைவரும் இராமனைச் சூழ்ந்து பொருது அடர்த்தல்
இளக்க அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம்
அளக்கரின் பாய்ந்து என பதங்கம் ஆரழல்
விளக்கினில் வீழ்ந்தனெ விதிகொடு உந்தலால்
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார். 6.30.180
அரக்கர் பல்வகைப் படைகளை இராமன்மேற் சொரிதல்
மழு எழு தண்டு கோல் வலையம் நாஞ்சில் வாள்
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம்
கழு இகல் கப்பணம் முதல கைப்படை
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார். 6.30.181
இராமன் காந்தருப்பம் என்னும் தெய்வப் படையை அரக்கர்மேற் செலுத்தல்
காந்தருப்பம் எனும் கடவுள் மாப் படை
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான்
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என
போந்து உருத்தது நெருப்பு அனைய போர்க்கணை. 6.30.182
காந்தருப்பம் என்னும் அப் படையின் தோற்றமும் திறலும்
மூன்று கண் அமைந்தன ஐம் முகத்தன
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடின
வான்தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த. 6.30.183
பத்துக் கோடி யளவினராகிய அரக்க வேந்தர்கள் பொருந்திய இராவணனது மூலச் சேனை முழுதும் அழிதல்
ஐ இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற
'எய் 'எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே. 6.30.184
அந் நிலையில் பெரிய தீவுகளிலிருந்தும் பல திசைகளிலிருந்தும் பாதாள உலகத்தினிலிருந்தும் இராவணனது ஆணையாற் காவல் புரியும் படை வீரர்கள் ஒருங்கு குழுமி இராமனொடு பொருதற்கு நண்ணுதல்
மாப் பெருந் தீவுகள் ஏழும் மாதிரம்
பாப்பு அரும் பாதலம் அத்து உள்ளும் பல் வகைக்
காப்பு அரு மலைகளும் பிறவும் காப்பவர்
யாப்புறு காதலர் இராவணற்கு அவர். 6.30.185
மாத்தட மேருவை வளைந்த வான் சுடர்
கோத்து அகல் மார்பு இடை அணியும் கொள்கையார்
பூத் தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நாத் தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார். 6.30.186
வந்த அரக்கர்கள் இராமனொடு ஒருவர் ஒருவராகப் பொருவதா அன்றி ஒன்று சேர்ந்து பொருவதா எனத் தமக்குள் வினாவுதல்
'நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்
வெம்முனை இராவணன் தனையும் வெல்லுமால்;
இம்மென உடன் எடுத்து எழுந்து சேருமோ?
செம்மையின் தனித்தனிச் செய்துமோ செரு? 6.30.187
எல்லோரும் ஒருங்கு சேர்ந்து பொருதலே நன்று என்ற வன்னியின் சொல்லுக்கு எல்லோரும் இசைதல்
'எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இந் நெடியோனை
வல்லே வல்ல போர்வலி கொண்டு மலையோமேல்
வெல்லோம் வெல்லோம் ' என்றனன், வன்னி; மிடலோரும்,
'தொல்லோன் சொல்லே நன்று ' என, அஃதே துணிவுற்றார். 6.30.188
அரக்கர்களின் போர் ஆரவாரம்
அன்னார் தாமும், ஆர்கலி ஏழும் என ஆர்த்தார்;
'மின் ஆர் வானம் இற்று உறும் 'என்றே, விளிசங்கம்
கொன்னே ஊதி, தோள் புடை கொட்டிக் கொடு சார்ந்தார்,
என் ஆம், வையம்? என்படும்; வானம்? திசை ஏதாம்? 6.30.189
இராமன் தன் வில்நாணைத் தறெித்து ஒலியெழுப்புதல்
ஆர்த்தார் அன்னார்; அன்ன களத்தே அவர் ஆற்றல்
தீர்த்தானும், தன் வெஞ்சிலை நாணைத் தறெிப்புற்றான்;
பேர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் பிறழ்சங்கம்
ஆர்த்தால் ஒத்தது அவ் ஒலி எல்லா உலகுக்கும். 6.30.190
அரக்கர் பல்லாயிர கோடியராய் இராமனை வளைத்துப் பொருதல்
பல் ஆயிர கோடியர்; பல் படை நூல்
வல்லார்; அவர் மெய்ம்மை வழங்க வலார்;
எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர் அரக்கரின் மேதகையோர். 6.30.191
வென்றார் உலகங்களை விண்ணவரோடு;
ஒன்றா உயர்தானவர் யூகம் எலாம்
கொன்றார் நிமிர் கூற்று என எவ் உயிரும்
தின்றார்; எதிர் சென்று செறிந்தனரால். 6.30.192
வளைத்தார் மதயானையை வன்தொழுவில்
தளைத்தார் என வந்து தனித்தனியே
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அலபோர்
விளைத்தார்; இமையோர்கள் வெதும்பினரால். 6.30.193
விண்தீய வழங்கிய வெம் படையில்
சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும்
கண்தீயும் ஒருங்கு கலந்து எழலால்
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும். 6.30.194
அரக்கர் சேனைகளில் தோன்றிய பலவகை ஒலிகள்
தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தழெிப்பு ஒலியும்
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும்
போரால் சிலை நாணி புடைப்பு ஒலியும்
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும். 6.30.195
இராவணனை யொத்த ஆற்றலுடைய பல்லயிரகோடி வீரர்களை இராமன் ஒருவனாகவே வெகுண்டு சென்று எதிர்த்தல்
'எல்லாரும் இராவணனே அனையார்;
வெல்லா உலகு இல்லவர்; மெய் வலியார்;
'தொல்லார் படை வந்து தொடர்ந்தது 'எனா
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால். 6.30.196
இராமன் அம்புமழை பொழிதல்
ஊழிக் கனல் போல்பவர் உந்தினபோர்
ஆழிப் படை அம்பொடும் அற்று அகல
பாழிக் கடை நாள் விடு பல் மழைபோல்
வாழிச் சுடர் வாளி வழங்கினனால். 6.30.197
இராமன் ஏவிய அம்புகளாற் சிதைந்தழிந்த அரக்கர் சேனையின் தோற்றம்
சூரோடு தொடர்ந்த சுடர்க் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும்
தேரோடு மடிந்தனர் செங் கதிரோன்
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர். 6.30.198
கொல்லோடு சுடர்க் கணை கூற்றின் நிணப்
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்
செல்லோடு எழு மாமுகில் சிந்தினபோல்
வில்லோடும் விழுந்த; மிடல் கரமே. 6.30.199
செம்போடு உதிரத் திரை ஆழியின் வாய்
வெம்பு ஓடு அரவக் குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த குறைந்து
அம்போடும் விழுந்த அடல் கரமே. 6.30.200
முன் ஓடு உதிரப் புனல் மூதுலகைப்
பின் ஓடி வளைந்த பெருங்கடல் வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என
பொன் ஓடை நெடுங் கரி புக்கனவால். 6.30.201
மற வெற்றி அரக்கர் வலக் கையொடும்
நறவக் குருதிக் கடல் வீழ் நகைவாள்
சுறவு ஒத்தன; மீது துடித்து எழலால்
இறவு ஒத்தன வாவும் இனப் பரியே. 6.30.202
தாமச் சுடர் வாளி தடிந்து அகலப்
பாமக் குருதிப் படிகின்ற படைச்
சேமப் படர் கேடகம் மால்கடல் சேர்
ஆமைக் குலம் ஒத்தன அத்தனையால். 6.30.203
காம்போடு பதாகைகள் கார் உதிரப்
பாம்போடு கடல் படிவுற்றனவால்
வாம் போர் நெடு வாடை மலைந்த கலம்
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன போல். 6.30.204
மண்டப் படு சோரியின் வாரியின்வீழ்
கண்டத்த சரத் தொகை கவ்வியதாள்
முண்டக் கிளர்தண்டின முள்தொகுவன்
துண்டச் சுறவு ஒத்த துடித்தனவால். 6.30.205
தெளிவுற்ற பளிங்கு உறு சில்லிகொள்தேர்
விளிவு உற்று உக வேறு உற வீழ்வனதாம்
அளிமுற்றிய சோரியின் ஆழியின் ஆழ்
ஒளிமுற்றிய திங்களை ஒத்துளவால். 6.30.206
நிலைகோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலைகோடல் நமன் குறி கோளுறுமே?
சிலைகோடிய தோறும் சிரத்திரள் வன்
மலை கோடியின்மேலும் மறிந்திடுமால். 6.30.207
திண் மார்பின்மிசைச் செறி சாலிகையின்
கண் வாளி கடைச் சிறை கானம் நுழைந்து
எண் வாய் அற மொய்த்தன இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டு இனம் ஒத்தனவால். 6.30.208
அரக்கர் சேனைகளைக் கொன்று குவித்து இராமர் பலர் என அரக்கர் திகைப்புற இராமன் சாரிதிரிதல்
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின்
கூறு ஆகிய நாலில் ஒர் கூறு இடையே
நூறாயிர யோசனை நூழில்களால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால். 6.30.209
நின்றாருடன் நின்று நிமிர்ந்து அயலே
சென்றார் எதிர் சென்று சிதைத்திடலால்
'தன் தாதையை ஓர்வுறு தன்மகன்நேர்
கொன்றான் அவனே இவன் 'என்று கொள்வார். 6.30.210
'இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன் 'என்று
அங்கே உணர்கின்ற அலந்தலையால்
வெங்கோப நெடும்படை வெஞ்சரம் விட்டு
எங்கேனும் வழங்குவர்; ஏகுவரால். 6.30.211
'ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலீர்!
இரவு அன்று இதுவோ பகல் 'என்பர்களால்;
'கரவு அன்று இது இராமர் கணக்கு இலரால்;
பரவை மணலின் பலர் 'என்பர்களால். 6.30.212
இராமன் விரைந்து சாரிகை திரியும் நிலையில் அவன்மீது அரக்கர் வீசிய படைக்கலம் தம்மினத்தவர்மீது பட அரக்கர் தம்மைத் தாமே அடித்துக்கொண்டு மாய்தல்
ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன் :
ஒருவன் படை வெள்ளம் ஒர் ஆயிரமே;
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ? 6.30.213
அரக்கர் பலர் முன்னும் விரைந்து தோன்றிப் பொரும் நிலையில் இராமர் பலராகத் தோன்றுதல்
தேர்மேல் உளர்; மாவொடு செந் தறுகண்
கார்மேல் உளர்; மாகடல்மேல் உளர்; இப்
பார்மேல் உளர்; உம்பர் பரந்து உளரால்
போர்மேலர் இராமர் புகுந்து அடர்வார். 6.30.214
என்னும்படி எங்கணும் எங்கணுமாய்த்
துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்;
பின்னும் அருகும் எதிரும் பிரியான்
மன்னன்மகன்! வீரர் மயங்கினரால். 6.30.215
படு மத கரி, பரி, சிந்தின; பனி வரை இரதம் அவிந்தன;
விடுதிசை செவிடு பிளந்தன; விரிகடல் அளறது எழுந்தன;
அடு புலி அவுணர்தம் மங்கையர் அலர்விழி அருவிகள் சிந்தின
கடு மணி நெடியவன் வெஞ்சிலை, 'கண கண, கண கண 'எனும் தொறும். 6.30.216
ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின் மணி கணில் என்னும்;
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே 6.30.217
ஊன் ஏறு படைக்கை வீரர் எதிர் எதிர் ஊரும் தோறும்
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்,
வான் ஏறினார்கள் தேரும், மலைகின்ற வயவர் தேரும்,
தான் ஏறிவந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான். 6.30.218
காய் இருஞ் சிலை ஒன்றேனும், கணைப் புட்டில் ஒன்றதேனும்,
தூயெழும் பகழி மாரி மழைத் துளித் தொகையின் மேல;
ஆயிரம் கைகள் செய்த செய்தன, அமலன் செங்கை;
ஆயிரம் கையும் கூடி, இரண்டு கை ஆய அன்றே. 6.30.219
பொய், ஒருமுகத்தன் ஆகி மனிதன் ஆம்புணர்ப்பு இது என்றல்;
மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒருமுகம் தெரிவது உண்டே?
ஐ இரு நூறும் அல்ல; அனந்தம் ஆம் முகங்கள் அம்மா! 6.30.220
கண்ணுதல் பரமன்தானும், நான்முகக் கடவுள்தானும்
'எண்ணுதும் தொடர எய்த கோல் 'என எண்ணலுற்றார்,
பண்ணையாய்ப் பகுக்க மாட்டார், தனித்தனிப் பார்க்கலாற்றார்,
'ஒண்ணுமோ, கணிக்க? 'என்றார், உவகையின் உயர்ந்த தோளார். 6.30.221
'வெள்ளம் ஈர் ஐந்து நூறே; விடுகணை அவற்றின் மெய்யே
உள்ளவாறு உளவாம் 'என்று ஓர் உரைகணக்கு உரைத்துமேனும்,
'கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால்; கொற்ற
வள்ளலே வழங்கினானோ ' என்றனர், மற்றை வானோர் 6.30.222
'குடைக்கு எலாம், கொடிகட்கு எல்லாம், கொண்டன குவிந்த கொற்றப்
படைக்கு எலாம், பகழிக்கு எல்லாம், யானை, தேர், பரிமா, ஆதி
கடைக்கு எலாம், துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே? ' என்றனர் முனிவர் அப்பால். 6.30.223
கண்டத்தும், கீழும், மேலும், கபாலத்தும், கடக்கல் உற்ற
சண்டப் போர் அரக்கர் தம்மைத் தொடர்ந்து கோல் புணருந் தன்மை
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களைப் பிரமன் தந்த
அண்டத்தை நிறையப் பெய்து குலுக்கியது அனையது அம்மா! 6.30.224
கோடி ஐ இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி,
ஓடி ஓர் பக்கம் ஆக, உயிர் இழந்து, உலத்தலோடும்,
'வீடிநின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் வீசி,
மூடுதும் இவனை 'என்னா, யாவரும் மூண்டு மொய்த்தார். 6.30.225
விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக
கொண்டு ஒருங்கு உடனே விட்டார்; குலுங்கியது அமரர் கூட்டம்;
அண்டமும் கீழ்மேலாக ஆகியது; அதனை அண்ணல்
கண்டு ஒரு முறுவல் காட்டி, அவற்றினை அவற்றால் காத்தான். 6.30.226
'தான் அவை தொடுத்தபோது, தடுப்ப அரிது; உலகம் தானே
பூநனி வடவைத் தீயின் புக்கு எனப் பொரிந்துபோம் 'என்று,
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப அருங் கோடி அம்பால்
ஏனையர் தலைகள் எல்லாம் இடி உண்ட மலையின் இட்டான். 6.30.227
ஆயிர வெள்ளத் தோரும் அடுகளத்து அவிந்து வீழ்ந்தார்;
மா இரு ஞாலத்தாள் தன் வன்பொறைப் பாரம் நீங்கி,
மீஉயர்ந்து எழுந்தாள் அன்றே, வீங்கு ஒலி வேலை நின்றும்
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி! 6.30.228
ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின், கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில் என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே. 6.30.229
தேவர் முதலியோர் துயர் தீர்ந்து இராமனை வாழ்த்துதல்
'நினைந்தன முடித்தேம் 'என்னா, வானவர் துயரம் நீத்தார்;
'புனைந்தனென் வாகை 'என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த மாதோ;
அனந்தனும் தலைகள் ஏந்தி, அயாவுயிர்த்து, அவலம் தீர்ந்தான். 6.30.230
தாய், 'படைத்து உடைய செல்வம் ஈக 'என, தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி,
தோய் படைத்தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார், வணக்கம் செய்தார் 6.30.231
தீ மொய்த்த அனைய செங்கண் அரக்கரை முழுதும் சிந்தி,
பூமொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற, நின்றான்
பேய் மொய்த்து, நரிகள் ஈண்டி, பெரும் பிணம் பிறங்கித் தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற கறைமிடற்று இறைவன் ஒத்தான். 6.30.232
அண்டம் மாக் களமும், வீந்த அரக்கரே உயிரும் ஆக,
கொண்டது ஓர் உருவம் தன்னால், இறுதிநாள் வந்துகூட,
மண்டு நாள், மறித்தும் காட்ட, மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன தன் ஒருமூர்த்தி ஒத்தான். 6.30.233
இலக்குவன் இராவணனுடன் பொருது நிற்கும் இடத்திற்கு இராமன் செல்லுதல்
ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ளச்
சேகு அறு மலரும் சாந்தும் செருத் தொழில் வருத்தம் தீர்க்க,
மாகொலை செய்த வள்ளல் வாள் அமர்க் களத்தைக் கைவிட்டு
ஏகினன், இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல். 6.30.234
இவ்வழி இயன்ற எல்லாம் இயம்பினாம்; இரிந்து போன
தவெ் அழி ஆற்றல் வெற்றிச் சேனையின் செலவும், சென்ற
வெவ்வழி அரக்கர் கோமான் செய்கையும், இளைய வீரன்
எவ்வம் இல் ஆற்றல் போரும், முற்றும் நாம் இயம்பல் உற்றாம். 6.30.235
அஞ்சி நிலைகெட்டோடிய வானர சேனை மீளுதல்
'பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பெயர்ந்துபோய், நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை விலக்கற்பாலார்?
வரும்பழி துடைத்தும், வானின் வைகுதும் யாமும் 'என்னா,
இரும்கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது, இப்பால். 6.30.236
----------------
6.31 வேல் ஏற்றப் படலம் 9673 – 9721 (49)
'சில்லி ஆயிரம், சில் உளை பரியொடும் சேர்ந்த,
எல்ல வன் கதிர் மண்டலம் மாறு கொண்டு இமைக்கும்,
செல்லும் தேர்மிசைச் சென்றனன் தேவரைத் தொலைத்த
வில்லும் வெங்கணைப் புட்டிலும், கொற்றமும் விளங்க. 6.31.1
இராவணனுடன் சென்ற சேனைகள்
நூறு கோடி தேர் நொறில்பரி நூறு இரு கோடி
ஆறுபோல் மத மா கரி ஐ இரு கோடி
ஏறுகோள் உறு பதாதியும் இவற்று இவற்று இரட்டி.
சீறு கோள் அரி ஏறு அனானுடன் அன்று சென்ற. 6.31.2
முரசம் முதலியன முழங்குதல்
'மூன்று வைப்பினும், அப்புறத்து, உலகினும், முனையின்
ஏன்று கோள் உறும், வீரர்கள் வம்மின்! 'என்று இசைக்கும்
ஆன்ற பேரியும், அதிர்குரல் சங்கமும், அசனி
ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. 6.31.3
இராவணன் சேனையோடு வருவதை வானரர் காணுதல்
அனையன் ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர்
வினையை வானவர் வெவ்வினைப் பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சையும் சுடுவதோர் நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் விண்ணையும் கடப்பதோர் கடலினை, கண்டார். 6.31.4
இராவணனைக் கண்ட வானரர்களின் போர் ஆரவாரம்
கண்டு, கைகேளாடு அணிவகுத்து, உரும் உறழ் கற்கள்
கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள்புடை கொட்டி,
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, ஆர்த்தார்,
'மண்டு போர் இடை மடிவதே நலம் 'என மதித்தார். 6.31.5
இருபடையும் கைகலத்தல்
அரக்கர் சேனையும், ஆருயிர் வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிரெதிர் கோத்து,
நெருக்கு நேர்ந்தன; நெருப்பு இடை பொடித்தன; நெருப்பின்
உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது, உதிரம். 6.31.6
இறந்துபட்ட சேனையின் வருணனை (9677-9679)
அற்றவன்தலை அறுகுறை எழுந்து எழுந்து அண்டத்து
ஒற்ற, வானகம் உதய மண்டலம் என ஒளிர,
சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதிநீர் துளிப்ப
முற்றும் வையகம் போர்க்களம் ஆம் என முரஞ்ச. 6.31.7
யானைகள்
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த
மேவி அம் படைக் கடலிடை குடரொடு மிதந்த. 6.31.8
வீரர் மனைவியர் உயிர் கணவர் உயிரோடு கலத்தல்
கண் திறந்தன கணவர்தம் முகத்து அவர் முறுவல்
கண்டு இறந்து அன மடந்தையர், உயிரொடும் கலந்தார்
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புகப் பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பணிப்ப. 6.31.9
தன் தானை தருக்கழியும் என இராவணன் கூறுதல்
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவு உற, உடற்றும்
நூழில் வெஞ்சமம் நோக்கி, அவ் இராவணன் நுவன்றான்
'தாழ் இல் என்படை தருக்கு அறும் ' என்பது ஓர் தன்மை. 6.31.10
இராவணன் தன் சேனை சிதைந்தது கண்டு கலங்கிக் கூறுதல் (9681-9684)
'மரமும் கல்லுமே வில்லொடு வாள், மழு, சூலம்,
அரமும், கல்லும் வேல் முதலிய அயில்படை அடக்கி
சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது என் சேனை.
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒருபால். 6.31.11
அழலும் கண்களிறு அணியொடும் துணிபடும்; ஆவி
சுழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர் தேர்;
கழலும் சோரிநீர் ஆற்றொடும் கடல் இடைக் கலக்கும்;
குழலும் நூலும் போன்ம், அனுமனும் தானும் அக்குமரன். 6.31.12
'வில்லும் கூற்றுவற்கு உண்டு 'என, திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று அறக் குறைக்கும், இந் நிறைப் பெருங் குழுவை,
ஒல்லும் கோள் அரி, உருமன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். 6.31.13
இராவணன் கொதிப்பு
'கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின்,
உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை;
மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென், கொற்றம் 'என்று இராவணன் கொதித்தான். 6.31.14
இராவணன் சுடுகணை விடுதல்
ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்
பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப,
மாதிரங்களை அளப்பன, மாற்ற அரும் கூற்றின்
தூது போல்வன, சுடுகணை முறைமுறை துரந்தான். 6.31.15
வானர சேனை இரிந்தோடுதல்
ஆளி போன்று உளன், எதிர்த்த போது, அமர்க் களத்து அடைந்த
ஞாளி போன்று உளது என்பது என்? நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன் வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றது, அப்பொரு சினத்து அரிகள்தம் புணரி. 6.31.16
இலக்குவன் இராவணனை எதிர்த்தல்
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி
'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின் ' என்று அருள் வழங்கி,
திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;
எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர்புகுந்து ஏற்றான். 6.31.17
இராவணன் விட்ட அம்புகளை இலக்குவன் விலக்குதல்
ஏற்றுக் கோடலும், இராவணன் எரிமுகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் விசையால். 6.31.18
இருவரும் மாறி மாறி அம்பு எய்தல்
விலக்கினான் தடம் தோளினும் மார்பினும், விசிகம்,
உலக்க உய்த்தனன், இராவணன், ஐந்தொடு ஐந்து; உருவக்
கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான்,
அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால். 6.31.19
இலக்குவனை அம்பினால் வெல்ல இயலாது என இராவணன் எண்ணுதல்
காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், 'நூழில்
ஆக்கும் வெஞ்சமத்து அரிது இவன்தனை வெல்வது; அம்பால்
நீக்கி, என் இனிச் செய்வது? 'என்று இராவணன் நினைந்தான். 6.31.20
இராவணன் சிந்தனை
'கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லன் எல்லாரையும் வெல்லும்,
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 6.31.21
மோகப்படை தொடுக்க முடிவு செய்தல்
'கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லன் எல்லாரையும் வெல்லும்,
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 6.31.22
மோகன விஞ்சையை இராவணன் அனுப்ப இலக்குவன் நாரணன் படையால் அதனை அழித்தல்
என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
முன்பன் மேல் வரத் துரந்தனன், அதுகண்டு முடுகி,
அன்பின் வீடணன், 'ஆழியான் படையினின் அறுத்தி!
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். 6.31.23
வீடணன் சொற்படி இலக்குவன் மோகத்தை நீக்கியது கண்டு இராவணன் வீடணன் மேல் சினங் கொள்ளுதல்
வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ்சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்,
'மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த
கேடு நம் தமக்கு 'என்பது மனம் கொண்டு கிளர்ந்தான். 6.31.24
வீடணனை வேலால் கொல்லக் கருதுதல்
மயன் கொடுத்தது, மகெளாடு, வயங்கு அனல் வேள்வி;
அயன் படைத்து உளது; ஆழியும் குலிசமும் அனையது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்து உளது உருவிச்
சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் சமைந்தான். 6.31.25
இராவணன் வீடணன் மேல் வேலை வீசுதல்
விட்ட போதினில் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்,
வட்ட வேல் அது வலம் கொடு வணங்கினன் வாங்கி,
எட்ட நிற்கிலாத் தம்பிமேல் வல்விசைத்து எறிந்தான். 6.31.26
வேல் வருவது கண்டு அஞ்சிய வீடணனை அஞ்சல் என்றுகூறி இலக்குவன் அவ்விடத்து வந்து நிற்றல்
எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், 'ஐய! ஈது என் உயிர் அழிக்கும் :
பிறிந்து செய்யல் ஆம் பொருளிலை ' என்றதும், பெரியோன்;
'அறிந்து போக்குவல்; அஞ்சல்நீ! ' என்று இடை அணைந்தான். 6.31.27
இலக்குவன் விட்ட அம்புகளால் அவ்வேல் சிதையாது வருதல்
எய்த வாளியும் ஏவின படைக்கலம் யாவும்,
செய்த மாதவத்து ஒருவனைச் சிறுதொழில் தீயோன்
வய்த வையினில் ஒழிந்தன; 'வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை 'என்று உம்பரும் தம் மனம் உலைந்தார். 6.31.28
இலக்குவன் அவ் வேலினைத் தம் மார்பில் ஏற்க எதிர்தல்
'தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப்
பார்ப்பது என்? நெடும்பழி வந்து தொடர்வதன் முன்னம்,
ஏற்பென், என்தனி மார்பின் 'என்று, இலக்குவன் எதிர்ந்தான். 6.31.29
வேலை ஏற்க வீடணன், அங்கதன், சுக்கிரீவன், அனுமன் முந்துதல்
இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன்முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரைசெயல் ஆமோ? 6.31.30
முன்நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
'நின்மின்; யான் இது விலக்குவென் ' என்று உரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர் கண்புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக. 6.31.31
வீடணன் சினந்தழெுந்து இராவணனது தேர்க் குதிரைகளையும் பாகனையும் தாக்குதல்
'எங்கு நீங்குதி நீ? 'என வீடணன் எழுந்தான்,
சிங்க ஏறு அன்ன சீற்றத்தன் இராவணன் தேரில்
பொங்கு பாய்பரி சாரதியொடும் படப் புடைத்தான்
சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். 6.31.32
இராவணன் விசும்பில் எழுந்து இலங்கைக்குப் போதல்
சேய்விசும்பினில் நிமிர்ந்துநின்று, இராவணன் சீறி,
பாய் கடுங்கணை பத்து அவன் உடல்புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன்தன் உடலினில் அழுத்தி,
போயினன், 'செருமுடிந்தது ' என்று இலங்கை ஊர் புகுவான். 6.31.33
வீடணன் இராவணனைத் தொடர்ந்து விண்ணில் எழுதல
'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென் 'என்று அரக்கன்மேல் வெகுண்டான். 6.31.34
வீடணனைக் கொன்று என்ன பயன் என்று இராவணன் திரும்பிப் பாராது இலங்கை புகுதல்
'வென்றி என்வயம் ஆனது; வீடணப் பசுவைக்
கொன்று, இனிப் பயன் இல்லை 'என்று இராவணன் கொண்டான்;
நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்;
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புகுந்தான். 6.31.35
வீடணன் அரற்றி அழுதல்
அரக்கன் ஏகினான்; வீடணன் வாய்திறந்து அரற்றி
இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில்,
கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார். 6.31.36
வீடணன் இறக்கத் துணியச் சாம்பன் நிறுத்தி ஒன்று கூறுதல்
'பொன், அரும்புறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற
என் இருந்து நான்? இறப்பென், இக்கணத்து; எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன் ' என்றனன் மறுக,
'நில். நில் 'என்றனன், சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும். 6.31.37
அனுமன் மருத்துமலை கொணர இலக்குவன் எழுவான் எனல்
'அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குதல் அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் நிமிர்வான்,
வினையின் நல்மருந்து அளிக்கின்றான்; உயிர்க்கின்றான், வீரன்;
தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின் ' என்று இடர் தீர்த்தான். 6.31.38
சாம்பன் அனுமனுக்கு உணர்த்த அனுமன் விரைதல்
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
'இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்? ' என்றனன் சாம்பன்;
கருத்தை உன்னி, அம்மாருதி உலகு எலாம் கடந்தான். 6.31.39
மாருதி மருந்து மலை கொணர்ந்தான்
உத்தர திசைமேல் ஓடி உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த்தகு மருந்து தன்னை, வெற்பொடும் கொணர்ந்தான், வீரன்;
பொய்த்தல் இல் குறிகெடாமே பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ? 6.31.40
இலக்குவன் எழுதல்
தந்த நன் மருந்து தன்னை; தாக்குதல் முன்னம் வேகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம் உயிர்தரும் வலத்தது என்றால்.
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடியின் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன். 6.31.41
எழுந்த இலக்குவன் அனுமனைத் தழுவி வீடணன் நலம் அறிந்து மகிழ்தல்
எழுந்து நின்று அனுமன் தன்னை இருகையால் தழுவி, எந்தாய்!
விழுந்திலன் அன்றோ மற்று அவ் வீடணன்! 'என்ன, விம்மித்
தொழுந் துணையவனை நோக்கி, துணுக்கமும், துயரும் நீங்கி,
'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன் 'என்று உவகை கொண்டான். 6.31.42
வானரத் தலைவர்கள் அனுமனைப் புகழ்ந்துவிட்டு இராமனைச் சார்தல்
'தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆகக் காட்டிய தன்மை கண்டால்,
அருமை என் எமருக்கு? அம்மா! அறம் வெல்லும், பாவம் தோற்கும்,
இருமையும் நோக்கின் 'என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். 6.31.43
தன்னை வானரத் தலைவர் வணங்கக் கண்ட இராமன், 'விளைந்தது என் 'எனல்
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர்பிணத்து உம்பர் ஒன்றும்
குன்றுகள் பலவும் சோரிக் குரைகடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் தன்னைத் திருவடி வணக்கம் செய்தார்;
வென்றியின் தலைவர்க் கண்ட இராமன் 'என் விளைந்தது? 'என்றான். 6.31.44
சாம்பனால் நிகழ்ந்ததறிந்து இராமன் அனுமனை வாழ்த்துதல்
உற்றது முழுது நோக்கி ஒழிவு அற, உணர்வின் ஊன்றச்
சொற்றனன் சாம்பன்; வீரன் அனுமனைத் தொடரப் புல்லி,
பெற்றனென் உன்னை; என்னை பெறாதன? பெரியோய்! என்றும்
அற்று இடை ஈறு செல்லா ஆயுளை ஆக 'என்றான். 6.31.45
இலக்குவன் இராமனைச் சார்தல்
புயல்பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான்,
உயிர்புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் தம்பி
துயர்தமக்கு உதவி, மீளாத் துறக்கம் பெற்று உயர்ந்த தொல்லைத்
தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது சார்ந்தான். 6.31.46
இராமன் இலக்குவனைத் தழுவிப் பாராட்டுதல் (9717-9718)
இளவலைத் தழுவி, 'ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற
அளவு, தம் அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் அளிக்கும் தன்மை;
துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால்,
அளவியல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே. 6.31.47
'புறவு அதன் பொருட்டால் யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற
பிற இனி உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காணில் 'என்றான். 6.31.48
இராமன் இலக்குவனது போர்க்கோலம் நீக்கி இளைப்பாறுதல்
சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி,
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் கொடுத்து, கொண்டல்
மேல்நிறை குன்றில் நின்று மெய்ம்மெலிவு ஆற்றல் உற்றான். 6.31.49
--------------
6.32 வானரர் களம் காண் படலம் 9722 – 9757 (36)
ஆயபின், கவியின் வேந்தும், அளப்பருந் தானையோடும்
மேயினன், இராமன் பாதம் விதிமுறை வணங்கி, வீந்த
தீயவர் பெருமை நோக்கி, நடுக்கமும், திகைப்பும் உற்றான்,
ஓய்வுறு மனத்தான் ஒன்றும் உரைத்திலன், நாணம் உற்றான். 6.32.1
இராமன் சுக்கிரீவனை வீடணனோடு சென்று களத்தைக் காண் எனல்
'மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும்
நீண்டு உளது அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது? 'என்ன
தூண் திரண்டு அனைய திண்தோள் சூரியன் சிறுவன் சொல்லக்
'காண்டிநீ, அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை 'என்றான். 6.32.2
போர்க்களக் காட்சியைக் கண்ட வானரர்களின் நிலை
தொழுதனர் தலைவர் எல்லாம், தோன்றிய காதல் தூண்ட
'எழுக 'என விரைவில் சென்றார், இராவணற்கு இளவலோடும்
கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும்
குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் 6.32.3
களக் காட்சியைக் காட்டுமாறு வீடணனை வானரர் வேண்டுதல்
ஏங்கினார்; நடுக்கம் உற்றார்; இரைத்து இரைத்து. உள்ளம் ஏற,
வீங்கினார்; வெருவலுற்றார்; விம்மினார்; உள்ளம் வெம்ப,
ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து, உவகை ஊற
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறைய கிற்பார்? 6.32.4
ஆயிரம் பருவம் கண்டால் காட்சிக்கு ஓர் கரையிற்று அன்றால்
மேயின துறைகள் தோறும் விம்மினர் நிற்பது அல்லால்
பாய்திரைப் பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன
நீ இருந்து உரைத்தி என்றார்; வீடணன் நெறியில் சொல்வான். 6.32.5
இறந்தும் நிற்கும் யானைகளின் காட்சியைக் காட்டுதல்
காகப் பந்தர்ச் செங்களம் எங்கும், செறிகால
ஓகத்து அம்பின் பொன்றின வேனும், உடல் ஒன்றி,
மேகச் சங்கம் தொக்கு என வீழும் வெளி இன்றி,
நாகக் குன்றம் நின்றமை காணீர் நமரங்காள்! 6.32.6
யானைகளின்மேல் வீரர்கள் இறந்து கிடக்கும் காட்சி
'வென்றிச் செங்கண் வெம்மை அரக்கர் மிசை ஊர்வ
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்கப்,
பொன்றிச் சிங்கம், நாக அடுக்கல், பொலிகின்ற
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறிகாணீர். 6.32.7
மாண்ட வீரரின் முகமலர்ச்சி
'அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளிக்
களியில் பட்டார், வாள்முகம், மின்னும் கரையில்ல,
புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த
நளினக் காடே ஒப்பன காண்மின் நமரங்காள். 6.32.8
குதிரைகள் இல்லாத் தேர்கள் இரத்த வெள்ளத்தில் நாவாய் போலத் தோன்றுதல்
'பூவாய் வாளிச் செல் எறி காலைப் பரிபொன்ற,
கோவாய் விண்சேர் வெண்கொடி திண் காலொடு கூட,
மாவாய் திண்தேர் மண்டுதலால் நீர், மறிவேலை
நாவாய் மானச் செல்வன காண்மின் நமரங்காள்; 6.32.9
யானைகள் உயிரோடும் இரத்த வெள்ளத்தோடு கடலையடைதல்
'ஒழுகிப் பாயும் மும்மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை ஈர்ப்ப,
பழகிற்று இல்லாப் பல்திரை தூங்கும் படர்வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை காணீர். 6.32.10
கவந்தமாடுதல்
'கடக்கார் என்னப் பொங்கு கவந்தத்தொடு கைகள்
தொடக்கா நிற்கும் பேய், இலயத்தின் தொழில் பூண்ட
மடக்கு ஓவு இல்லா வார் படிமக் கூத்து அமைவிப்பான்,
நடக்கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள்! 6.32.11
நரம்புத் தொடக்கிலகப்பட்ட பேய் நழுவிப் போதல்
'மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர்
குழுவின் கொண்டந் நாடி தொடக்காப் பொறி கூட்டித்
தழுவிக் கொள்ள, கள்ள மனப் பேய் அவைதள்ளி
நழுவிச் செல்லும் இயல்பின காண்மின் நமரங்காள். 6.32.12
இறந்து மாறி வீழ்ந்து கிடக்கும் இரு யானைகள் இருதலை பெற்ற ஒரு விலங்குபோலக் காணப்படுதல்
பொன்னின் ஓடை மின்பிறழ் நெற்றிப் புகர்வேழம்,
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணைவு உற்ற,
தன்னின் நேராம் மெய் இருபாலும் தலைபெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல்வேறு இவை காணீர். 6.32.13
கோபக் கனல் எரிகின்ற அரக்கரின் வாய்கள் ஓம குண்டம் போலுதல்
'நாமத் திண் போர் முற்றிய கோப நகை நாறும்
பாமத் தொல்நீர் அன்ன நிறத்தோர் பகுவாய்கள்,
தூமத் தோடும் வெங்கனல் இன்னும் சுடர்கின்ற
ஓமக் குண்டம் ஒப்பன பல்வேறு இவை காணீர். 6.32.14
இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் யானைகளின் கொம்புகள்
மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக்
கன்னம் மூலத்து உற்றன வெண்சாமரை காணீர்;
மன்னும் மாநீர்த் தாமரை மீதின் மகிழ்வு எய்தி
அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றன வம்மா! 6.32.15
'ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு
ஆளின் முற்றாச் செம்புனல் வெள்ளத்தவை காணீர்;
கோளின் முற்றாச் செக்கருள் மேகக் குழுவின்கண்
நாளின் முற்றா வெண்பிறை போலும் நமரங்காள்! 6.32.16
வீரர்களின் கண்ணெரியால் வெந்த தசையைப் பேய்கள் உண்டு மகிழ்தல்
'கொடியும் வில்லும், கோலொடு தண்டும், குவிதேரும்,
துடியின் பாதக் குன்றின்மிசைத் தோல் விசியும் சுட்டு
ஒடிவில் வெய்யோர் கண் எரி செல்ல, உடன் வெந்த
தடி உண்டு ஆடிக் கூளி தடிக்கின்றன காணீர். 6.32.17
மகர மீன்கள் குருதி வெள்ளத்தைக் கடலென மருண்டுவந்து தம்மைக் கண்டு யானைகள் ஓடுவதால் உண்மையுணர்ந்து மீளல்
'சகர முந்நீர் செம்புனல் வெள்ளம் தடுமாற,
மகரம் தம்மின் வந்தன காணா, மனம் உட்கிச்
சிகரம் அன்ன யானைகள் ஓடிச் செல, நாணின்
நகரம் நோக்கிச் செல்வன காண்மின் நமரங்காள். 6.32.18
விண்ணில் இறந்த அரக்கர் உடம்பு தம்மேல் வீழ்ந்தமையால் மண்ணில் செல்வார் மடங்கி வீழ்ந்து மீளமுடியாது வருந்தும் நிலை
'விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல, மென்மேல்
மண்ணில் செல்வார் மேனியின் வீழ, மறைவுற்றார்,
எண்ணில் தீரா அன்னவை நீக்கும் மிடல் இல்லார்
கண்ணில் தோன்றார் விம்மி உழக்கும் படிகாணீர். 6.32.19
அரக்கர்களின் இரத்ததாரை பட்ட உச்சிச் சூரியன் உதய சூரியனாகத் தோன்றுகை
'அச்சின் திண்தேர் ஆனையின் மாமேல் காலாளின்
மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித் தாரைகள் முட்ட,
உச்சிச் சென்றான் ஆயினும் வெய்யோன், உதயத்தின்
குச்சிச் சென்றான் ஒத்து உளன் ஆகும் குறிகாணீர். 6.32.20
அரக்கரின் இரத்தம்பட்ட சந்திரன் சூரியனைப் போலுதல்
கால் தோய் மேனிக் கண்டகர் கண்டப் படுகாலை,
"ஆறோ! " என்ன, விண்படர் செஞ்சோரி அது ஆகி,
வேறாய் நின்ற வெண்மதி செங்கேழ் நிறம் விம்மி,
மாறு ஓர் வெய்யோன் மண்டலம் ஒக்கின்றது காணீர். 6.32.21
குருதிக்கடல் படிந்த பறவைகளின் சிறகுகள் துளித்த குருதித் துளிகளைத் தாங்கிக் கானிலும் காவிலும் உள்ள மலர்களும் வண்டுகளும் செந்நிறம் பெறுதல
வான்நனைய, மண்நனைய, வளர்ந்து எழுந்த
கொழுங்குருதி மகர வேலை
தான் நனைவுற்று எழும் பறவைச்சிறை தெளித்த
புதுமழையின் துள்ளிதாங்கி,
மீன் அனைய நறும் போதும் விரை அருந்தும்
சிறை வண்டும், நிறம்வேறு எய்தி,
கானகமும் கடிபொழிலும் முறி ஈன்ற போன்று
ஒளிர்வ காண்மின்! காண்மின்! 6.32.22
இரத்த ஆறு பேராறு போன்றமை
'வரை பொருத மத யானைத் துணைமருப்பும்
கிளர்முத்தும், மணியும், வாரி,
திரை பொருது புறம் குவிப்பத் திறங்கொள்பணை மரம்
உருட்டி, சிறைப்புள் ஆர்ப்ப,
நுரை, கொடியும், வெண்குடையும் சாமரையும் எனச்சுமந்து,
பிணத்தின் நோன்மைக்
கரை பொருது கடல் மடுக்கும் கடுங்குருதிப் பேர்யாறு
காண்மின்! காண்மின்! 6.32.23
'கய்க்குன்றப் பெருங்கரைய, நிருதர்புயக்
கல்செறிந்த, கதலிக் கான,
மொய்கின்ற பரித்திரைய, முரண்கரிக்கைக்
கோள்மாவ, முளரிக்கானின்
நெய்க்கின்ற வான்முகத்த, விழும் குடரின்
பாசடைய, நிணமென் சேற்ற,
உய்க்கின்ற உதிரநீர் அகன்குளங்கள் உலப்பு
இறந்த உவையும் காண்மின். 6.32.24
போர்க்களம் மருத நிலம் போல்கின்றது
'நெடும்படைவாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிரநீர் நிறைந்த காப்பின்,
கடும்பகடு படிகிடந்த கரும்பரம்பின், இனமள்ளர்
பரந்த கையின்,
படுங்கமல மலர்நாறு முடிகிடந்த பெருங்கிடக்கை,
பரந்த பண்ணைத்
தடம்பணையின், நறும்பழனம் தழுவியதே எனப்
பொலியும் தகையும் காண்மின். 6.32.25
இரத்தப் பரப்பில் சுழிகள் தோன்றுவதைக் காட்டுதல்
வெளில் தீர்த்த வரை புரையும் அடல் அரக்கர்
உடல்விழவும், வீரன் வில்லின்
ஒளிறு ஈர்த்த முழுநெடுநாண் உருமேறு பலபடவும்,
உலகம்கீண்டு
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழிவழி,
நதியின் ஓடி
களிறு ஈர்த்துப் புகமண்டும் கடுங்குருதித் தடஞ்சுழிகள்
காண்மின்! காண்மின்! 6.32.26
இராமன் அம்பு அரக்கருடலில் தங்காமல் சென்றமை
"கைத்தலமும், காத்திரமும், கருங்கழுத்தும் நெடும்புயமும்,
உரமும், கண்டித்து
எய்த்திலபோய், திசைகள்தொறும் இருநிலத்தைக் கிழித்து
இழிந்த என்னின் அல்லால்,
மத்தகரி வயமாவின் வாள்நிருதர் பெருங்கடலின்
மற்று இவ் வாளி
தைத்துளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பரிய
தகையும் காண்மின். 6.32.27
மடிந்து கிடந்த மத்த யானைகள்
'குமுதம் நாறும் மதத்தன கூற்றன
சமுதரோடு மடிந்தன சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய இத்திறம்
அமுதின் வந்தன ஐ இரு கோடியால். 6.32.28
அயன் வேள்வியில் தோன்றிய யானைகள்
'ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும்
மாறும் ஆயினும் மாமதமாய் வரும்
ஆறு மாறில ஆறு இரு கோடியால். 6.32.29
ஐராவதத்தின் மரபில் வந்த யானைகள்
'உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும் மதம் மறவாதன
புயலவன் திசைப் போர்மத யானையின்
இயல் பரம்பரை ஏழ் இரு கோடியால். 6.32.30
வடதிசை யானையின் வழிவந்த யானைகள்
'கொடாது நிற்றலின் கொற்ற நெடுந்திசை
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல
வடாது திக்கின் மதவரையின் வழிக்
கடாம் முகத்த முளரிக் கணக்கவால். 6.32.31
வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆனவர்க்கம் ஓர் ஆயிர கோடியால்;
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனைவர்க்கம் கணக்கு இல இவ்வெலாம். 6.32.32
குதிரைகளின் வகைகள்
பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம்
மால் கணம் பரி ஈங்கு இவை; மாறு உவை
மேற்கின் வேலை வருணனை வென்றவால். 6.32.33
குபேரன், விஞ்சையர் வேந்தன் என்பவரை வென்று பெற்றகுதிரைகள்
'இருநிதிக் கிழவன் இழந்து ஏகின
அரிய அப்பரி ஆயிரம் ஆயிரம்;
விரிசினத்து இகல் விஞ்சையர் வேந்தனைப்
பொருது பற்றிய தாமரை போலுமால். 6.32.34
வானரத் தலைவர்கள் களக் காட்சியை விடுத்து இராமனை அடைதல்
என்று காணினும் காட்டினும் ஈது இறைக்
குன்று காணினும் கோளிலது ஆதலான்
நின்று காணுதும் நேமியினான் உழைச்
சென்று காண்கும் என்று ஏகினர் செவ்வியோர். 6.32.35
அனைவரும் இராமனருகில் வியப்புடன் இருத்தல்
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரின்
போர் இயற்கை நினைந்து எழும் பொம்மலார்
பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம். 6.32.36
--------
This file was last updated on 30 Jan. 2017
.